தோனிக்காக ஸ்பெஷல் பாடல்.. டி.ராஜேந்தர் செய்திருப்பதை பாருங்க.. TR ஸ்டைலே தனிதான் ப்பா!
சென்னை: இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டிருப்பவர் டி.ராஜேந்தர். 80களில் பல ஹிட் படங்களை கொடுத்து தனக்கென தனி மார்க்கெட்டை தக்க வைத்திருந்தார். தனக்கு மார்க்கெட் குறைந்த நேரத்தில் சரியாக தனது மகன் சிம்புவை திரைத்துறையில் அறிமுகப்படுத்திவிட்டார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனிக்காக டி.ஆர் இசையமைத்து ஒரு பாடலை வெளியிட்டிருக்கிறார்.
மயிலாடுதுறையை சேர்ந்த டி.ராஜேந்தர் முதலில் இயக்கிய ஒருதலை ராகம் திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. ஆனாலும் அந்த வெற்றி அவருக்கு முழுமையான வெளிச்சத்தை கொடுக்கவில்லை. மனம் தளராத அவர் அடுத்ததாக இயக்கிய ரயில் பயணங்களில், நெஞ்சில் ஒரு ராகம், உயிருள்ளவரை உஷா, தங்கைக்கோர் கீதம், உறவை காத்த கிளி, மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம் என தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்தார். அவரது படங்கள் அனைத்தும் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக அமைந்தன.

பல திறமைகள்: சில படங்களிலேயே அவர் காணாமல் போய்விடுவார் என்று பலரும் ஆரூடம் கூறிய நிலையில்; ராஜேந்தரோ ஆக்டோபஸ் போல திரைத்துறையில் இருக்கும் பல ஜானர்களிலும் தனது கரங்களை வைத்தார். அதன்படி இசையமைப்பாளர், பாடலசிரியர், தயாரிப்பாளர் ஆகிய அவதாரங்களையும் எடுத்தார். இளையராஜா பீக்கில் இருந்த காலத்தில் ராஜேந்தரும் தனது இசையில் ஹிட் பாடல்களை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இசை போலவே எடிட்டிங் போன்ற மற்ற பணிகளையும் செய்வார்.
டி.ராஜேந்தரின் ப்ளஸ்: அவரது படங்களில் விரசமான காட்சிகளே இருக்காது. அதேபோல் ஹீரோயின்களையும் இவர் தொட்டுக்கூட நடிக்க மாட்டார். அதன் காரணமாகவே தாய் குலங்களும், குழந்தைகளும் அவரது படங்களை விரும்பி பார்த்தார்கள். அதுமட்டுமின்றி அவர் பேசும் எதுகை, மோனை வசனங்களும் பட்டையை கிளப்பின. பின்நாட்களில் பல மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டுகள் வாழ்வதற்கு டி.ராஜேந்தர் குரலும், அவரது எதுகை மோனை ஸ்டைலும் தேவைப்பட்டது என்றே சொல்லலாம்.
அறிமுகங்கள்: பாரதிராஜா எப்படி பலரை அறிமுகப்படுத்தினாரோ அதேபோல் ராஜேந்தரும் மிகச்சிறந்த கலைஞர்களை கோலிவுட்டுக்கு கொடுத்திருக்கிறார். நடிகைகள் அமலா, நளினி உள்ளிட்டோரை அவர்தான் அறிமுகம் செய்துவைத்தார். அதேபோல் தன்னுடைய மார்க்கெட் சரிந்த நேரத்தில் தன்னுடைய மகன் சிம்புவையும் திரைத்துறைக்குள் கொண்டு வந்துவிட்டார். இப்போது சிம்பு தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக இருக்கிறார். டி.ஆர். சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்டாலும் இப்போதும் சுறுசுறுப்பாக ஏதாவது செய்துகொண்டுதான் இருக்கிறார்.
தோனிக்காக பாடல்: அவர் தனியாக யூடியூப் சேனலை ஆரம்பித்திருக்கிறார். அதில் பல வீடியோக்களை அவர் பதிவேற்றிவருகிறார். சூழல் இப்படி இருக்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை புகழ்ந்து ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறார். அதற்கு அவரே இசையமைத்திருக்கிறார். அவரே பாடி நடனமாடவும் செய்திருக்கிறார். பாடலுக்கு இளங்கோ என்பவர் வரிகளை எழுதியிருக்கிறார். பாடலின் இசை சுமாராக இருந்தாலும் ராஜேந்தர் வெளியிட்டிருக்கும் பாடலுக்கு தோனி ரசிகர்களிடையே ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்துவருகிறது. மேலும் இந்த வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறாரே என்று புகழ்ந்துவருகிறார்கள் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications















