ப்ளீஸ்.. அபிநய் உறவுகள் எங்க இருந்தாலும் வாங்க.. அனாதையாக கிடக்கும் உடல்.. கதறும் நண்பர்கள்!
சென்னை: 'துள்ளுவதோ இளமை' பட அபிநய் இன்று உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால், இறுதிச்சடங்கை எப்படி செய்வது என்று தெரியாமல் அவரின் நண்பர்கள் கண்ணீர் மல்க நிற்கிறார்கள்.
கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அபிநய். அந்த படத்தை தொடர்ந்து தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல விளம்பரங்களிலும் அபிநய் நடித்துள்ளார். நடிகர் அபினய் சில படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் அந்த படங்கள் பெரிய அளவுக்கு கைகொடுக்கவில்லை. நாளடைவில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகள் பறிபோனதால், சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லாத வறுமையில் சிக்கினார்.

நடிகர் அபிநய்: கல்லீரலின் சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு, வறுமையில் வாடி எலும்பும் தோலுமாகவும், வயிறு வீங்கியபடி இருந்த அபிநய்யை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இவரின் மருத்துவ செலவிற்கு பணம் தேவைப்படுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதையடுத்து, நடிகர் தனுஷ், கேபிஒய் பாலா ஆகியோர் பண உதவி செய்தனர். அதன்பின் அபிநய் நிச்சயம் மீண்டு வருவார் என அனைவரும் நினைத்து இருந்த நிலையில், இன்று அதிகாலை நான்கு மணியளவில் அபிநய் காலமானார். அபிநய் மரண செய்தி சோஷியல் மீடியாவில் வெளியானதை அடுத்து அவரின் நண்பர்கள், அபிநய் வாடகைக்கு இருந்த வீட்டிற்கு வந்துள்ளனர். ஆனால், அந்த வீட்டின் உரிமையாளர் யாரையும் உள்ளே வரக்கூடாது என தகராறு செய்துள்ளார்.
அனாதையாக கிடக்கும் உடல்: இதையடுத்து, அபிநய் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் முத்து, நடிகர் அபிநய் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 44. அவர் தனிமையில் இருந்து உயிரிழந்துள்ளார். காலையில் ஒருவர் வந்து பார்த்த போது தான், அவர் உயிரிழந்தது தெரியவந்தது. அவருக்கு உறவுகள் என்று யாரும் இல்லாததால், இறுதிச்சடங்கை எப்படி செய்வது என்று கூட தெரியவில்லை. அவருடைய உறவுகள் எங்கே இருக்கிறார்கள். அவர்கள் இந்த செய்தியை பார்த்துவிட்டு, எங்கே இருந்தாலும் தயவு செய்து வரவும். இறுதி சடங்கை செய்வதில் குழப்பம் இருப்பதால், காவல் துறையிடம் இன்று மாலை வரை நேரம் கேட்டு இருக்கிறோம். அப்படி குடும்பத்தினர் யாரும் வரவில்லை என்றால், நடிகர் சங்கம் நல்லடக்கம் செய்யும் என்றார்.
சோகத்தில் திரையுலகம்: அபிநய் தங்கியிருந்த வாடகை வீட்டிலேயே அவரின் உடலை, போலீஸ் உதவியுடன் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருடைய மறைவு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அபிநய்யுடைய மறைவுக்கு சோஷியல் மீடியாவில் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











