என் தெருவை காணவில்லை.. மண்ணெண்ணெய்யோடு வருவேன்.. பரபரப்பு கிளப்பிய ஜி.பி. முத்து
சென்னை: டிக்டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்து சில தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். துணிவு உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதும் அவர் ஒருசில திரைப்படங்களில் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
டிக்டாக் மூலம் பிரபலமானவர் ஜிபி முத்து. சாமானிய பேச்சும், உடல்மொழியும் அவரை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தது. இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் பிரபலமான அவர் பிக்பாஸ் சீசன் 6ல் கலந்துகொண்டார். அந்தப் போட்டியில் சில வாரங்களே இருந்தாலும் அந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். குறிப்பாக அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் பக்குவமாக இருந்ததை கண்டு மக்கள் நெகிழ்ந்துபோனார்கள்.
வரவேற்பை பெற்ற செயல்: இதனால் அந்த சீசனில் வலுவான போட்டியாளராக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனது குடும்பத்தையும், மகனையும் பிரிந்து இருக்க முடியாது என்பதற்காகவும், தன்னுடைய மகனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வெளியேறுவதாகவும் சொல்ல் நிகழ்ச்சியின் பாதியில் அவரே வெளியேறினார். அப்படி அவர் வெளியேறினாலும் அந்த செயலையும் மக்கள் கொண்டாடினார்கள். அதனையடுத்து புதிய வீடு கட்டி அதில் குடி புகுந்தார் ஜிபி முத்து.

திரைப்படங்களில் ஜிபி முத்து: இப்படி படிப்படியாக வளர்ந்துவரும் ஜிபி முத்து திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில் சன்னி லியோன் மற்றும் சதீஷுடன் ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.. அதற்கான ப்ரோமோஷன்களிலும் அவர் கலந்துகொண்டார். அதேபோல் அஜித் நடித்த துணிவு படத்திலும் ஒரு காட்சியிலும் தோன்றியிருந்தார். தற்போது சில படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்திருக்கின்றன.
ஜி.பி. முத்து அளித்த புகார்: இந்நிலையில் ஜி.பி. முத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தனது குடும்பத்துடன் வந்து புகார் அளித்தார். அந்தப் புகாரில், "பெருமாள்புரத்தில் கீழ தெரு என்கிற பெயரில் ஒரு தெரு இருந்தது. மேலும் ஒரு இடம் முழுக்க அரசு புறம்போக்கு பாதையாக பொதுமக்களால் பயன்பாட்டில் இருந்துவந்தது. இது வருவாய் துறையின் ஆவணங்களிலும் இருக்கிறது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் ஒன்று நடந்தது.
சிட்டிசன் படம் போல: அதாவது சிட்டிசன் திரைப்படத்தி எப்படி அத்திப்பட்டி கிராமம் காணாமல் போனதோ அதேபோன்று அந்த கீழ தெரு என்ற ஒரு தெரு திடீரென காணாமல் போய்விட்டது. அந்தத் தெருவானது பல தனி நபர்களால் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் செல்லும் பாதையும் அடைக்கப்பட்டிருக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தார். தெருவை காணவில்லை என்று முத்து கொடுத்த புகார் பரபரப்பை கிளப்பியது.
செய்தியாளர்களிடம் முத்து: புகார் மனுவை அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜி.பி.முத்து, "கோயிலின் சொத்தை விற்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. ஆனால் இங்கோ கோயில் சொத்தைத்தான் விற்றிருக்கிறார்கள். அதோடு எனக்கென்று இருக்கும் சொந்தமான பாதையையும் அடைக்கிறார்கள். ஒரு தனிப்பட்ட நபர் தன்னுடைய சொந்த பகை காரணமாக அவருடைய குடும்பத்தை சேர்த்துக்கொண்டு அராஜகம் செய்கிறார். ஏனென்று கேட்டால் என்னையும் மிரட்டுகிறார்கள். அடுத்த முறை நான் இங்கு மண்ணெண்ணெய்யோடுதான் வருவேன்" என்று சொல்லி பகீர் கிளப்பினார்.


Click it and Unblock the Notifications











