பிரிந்து சென்ற வெற்றிமாறன்.. மனம் திறந்த ஜிவி பிரகாஷ்.. எவ்வளவு பக்குவமா சொல்லிருக்காரு பாருங்க
சென்னை: கோலிவுட்டின் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜிவி பிரகாஷ். இரண்டு தேசிய விருதுகள் வென்றிருக்கும் அவர்; நடிப்பு, இசையமைப்பது என இரண்டு துறைகளிலும் படு பிஸியாக இயங்கி வருகிறார், அவரது இசையில் அடுத்ததாக விஸ்வநாத்&சன்ஸ் திரைப்படம் வரவிருக்கிறது. கடைசியாக கென் கருணாஸ் இயக்கத்தில் யூத் படத்துக்கு இசையமைத்திருந்தார். இதற்கிடையே பொல்லதவன், ஆடுகளம், அசுரன் உள்ளிட்ட படங்களில் வெற்றிமாறனோடு பணியாற்றினார். ஆனால் அரசன் படத்தில் பணியாற்றவில்லை. அதுகுறித்து இப்போது பக்குவமாக பேசியிருக்கிறார் அவர்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன் என்ற அடையாளத்துடன் வெயில் திரைப்படத்தில் இசையமைக்க அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ். வசந்தபாலன் இயக்கியிருந்த அந்த படத்தின்போது ஜிவிக்கு வயது 20க்குள்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வயதிலேயே வெயில் படத்துக்கு மிகச்சிறந்த இசையை கொடுத்து முதல் படத்திலேயே தன் மீதான கவனத்தை அனைவரிடமும் ஈர்த்தார். அடுத்ததாக தொடர்ந்து பல படங்களில் வாய்ப்புகள் அவருக்கு வந்துகொண்டே இருந்தன.

நல்ல பெயர் வாங்கிய ஜிவி பிரகாஷ்: அப்படி அவர் இசையமைத்த ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, கிரீடம், பொல்லாதவன், மதராசபட்டினம், தெய்வத்திருமகள், தலைவா, பரதேசி என பல படங்களின் ஆல்பங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டித்தன. முக்கியமாக அந்த படங்களின் பின்னணி இசையும், தீம் மியூசிக்கும் பலரது மொபைலில் ரிங் டோனாக பல வருடங்கள் இருந்தது என்பது நினைவுகூரதக்கது. இப்படிப்பட்ட நிலைமையில்தான் ஜிவி பிரகாஷுக்கு நடிகராக வேண்டுமென்ற ஆசையும் தோன்றியது.
நடிகர் ஜிவி பிரகாஷ்: அந்த வகையில் டார்லிங் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் தொடர்ந்து பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இருப்பினும் அவர் எதிர்பார்த்த வெற்றி எதுவும் இதுவரை பெரிதாக கிடைக்கவில்லை. சிகப்பு மஞ்சள் பச்சை, சர்வம் தாளமயம், நாச்சியார் உள்ளிட்ட படங்கள் மட்டுமே அவரது நடிப்புக்கு பெயர் சொல்லும்படியாக அமைந்தன. கடைசியாக அவர் நடிப்பில் பிளாக்மெயில் திரைப்படம் வெளியாகி ஓரளவுக்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸை பெற்றது.
இரண்டு தேசிய விருது: இதற்கிடையே சூரரைப் போற்று திரைப்படத்துக்கு இசையமைத்ததால் அவருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்தது. அதனையடுத்து தனுஷ் நடித்த வாத்தி திரைப்படத்திற்கும் ஜிவிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இரண்டு தேசிய விருதுகள் வென்றதன் காரணமாக அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஒருபக்கம் இசையில் தீவிரமாக இயங்கும் அவர் நடிப்பையும் ஃபுல் ஃப்ளோவில் செய்துவருகிறார். அடுத்ததாக அவரது நடிப்பில் ஹேப்பி ராஜ் வரவிருக்கிறது.
அரசன் படத்தில் அனிருத்: இதற்கிடையே வெற்றிமாறனோடு நல்ல புரிதலில் இருப்பவர் ஜிவி பிரகாஷ். இதுவரை வெற்றி இயக்கிய மூன்று படங்களுக்கு இசையமைத்திருகிறார். அவை சூப்பர் வரவேற்பை பெற்றன. நிலைமை இப்படி இருக்க சிம்புவை வைத்து வெற்றிமாறன் இயக்கிவரும் அரசன் படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இதில் ஜிவி இல்லாதது ரசிகர்களுக்கு கொஞ்சம் அப்செட்தான். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அரசன் படத்தில் பணியாற்றாதது குறித்து விளக்கமளித்திருக்கிறார்.
ஜிவி பிரகாஷ் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "நான் பல நடிகர்கள், இயக்குநர்களுடன் வேலை செய்கிறேன். அப்படியிருக்கையில் வெற்றிமாறன் வேறு ஒரு இசையமைப்பாளருடன் வேலை பார்க்கக்கூடாதா? எனது கரியரின் ஆரம்பத்தில் இருந்திருந்தால் வெற்றிமாறன் என்னை கமிட் செய்யாததற்கு கோபப்பட்டிருப்பேன். ஆனால் இப்போது நான் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன். நானும் புதியவர்களுடன் வேலை செய்ய விரும்புகிறேன். அதனால்தான் கென் கருணாஸின் யூத் படம் செய்தேன்"என்றார்.


Click it and Unblock the Notifications















