S.K.25: மிஸ் செய்த சூர்யா.. தட்டித் தூக்கிய சிவகார்த்திகேயன்.. அட இதுலயும் தனுஷுக்கு பல்பு போலயே!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக உள்ளார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயன் தற்போது தன்னை மைய்யப்படுத்தி ஒரு வணிகத்தினை உருவாக்கிவிட்டார். இவரது படங்கள் ரிலீஸ் ஆகின்றது என்றாலே மினிமம் கேரண்டி வசூல் இருக்கும், இப்படியான நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது, அமரன் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இதுமட்டும் இல்லாமல், இவர் தனது 23வது படத்தில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் இவரது 25வது படம் குறித்த தகவலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் படம் அவரது 22வது படம். இந்த ஆண்டு இதுவரை இவரது நடிப்பில் 2 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. பொங்கலுக்கு அயலான் படமும் தீபாவளிக்கு அமரன் படமும் ரிலீஸ் ஆகியுள்ளது. இதில் தற்போது ரிலீஸ் ஆகியுள்ள அமரன் படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சக்கைபோடு போட்டு வருகின்றது.

அமரன் படத்தினை சோனி பிக்சர்ஸ் மற்று உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார். படம் ஏற்கனவே கூறியதைப்போல் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் தமிழ்நாட்டினைச் சேர்ந்தவர்.

பாராட்டு: படத்தின் கதையை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைத்து, ஒப்புதல் பெற்ற பின்னர், இந்திய ராணுவத் தளவாடங்களில் படம் எடுக்கப்பட்டுள்ளது. பல காட்சிகளில் இந்திய ராணுவ வீரர்களே காண்பிக்கப்பட்டுள்ளனர். படம் பார்த்த இந்திய ராணுவ வீரர்கள், தமிழ் நாடு முதலைமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட ஏராளமான அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் படத்தினைப் பாராட்டினர்.

வசூல்: படம் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை ரூபாய் 90 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இப்படியான நிலையில், தீபாவளி ரிலீஸில் பாக்ஸ் ஆபிஸ் ரேஸில் அமரன் படம் வெற்றிப் படமாக மாறியுள்ளது. இப்படியான நிலையில் அமரன் படத்தின் இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் பேட்டி ஒன்றில் தனது 100வது படம் குறித்து பேசியுள்ளார். அப்போது அவர் பேசியது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
சிவகார்த்திகேயன்: அதாவது, தனது 100வது படத்தில் இயக்குநர் சுதா கொங்கராவுடன் இணைந்து புறநானூறு பணியாற்றப்போவதாக ஜி.வி. பிரகாஷ்குமார் தெரிவித்திருந்தார். அந்தப் படம் குறித்து அவர் பேசுகையில், அந்தப் படம் ஏற்கனவே இருந்த பரிமாணத்தைவிட இன்னும் சிறப்பான இடத்திற்கு வந்துள்ளது. அந்தப் படம் என்னுடைய இசையில் உருவாகின்ற 100வது படமாகவும், இன்னொரு நடிகரின் 25வது படமாகவும் இருக்கும்" எனத் தெரிவித்தார். இவரது இந்தப் பேச்சை வைத்துப் பார்க்கும்போது, இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகின்றது என ரசிகர்கள் கருத்து தெரிவிகின்றனர்.

தனுஷ்: புறநானூறு படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் சூர்யாவின் கையில் தற்போது அடுத்த சில ஆண்டுகளுக்கான கால் ஷீட் இல்லாத காரணத்தினால், இந்தப் படத்தில் இருந்து, சூர்யா விலகியுள்ளார். விலகியது மட்டும் இல்லாமல் இந்தப் படத்தினை வேறு ஒருவரை வைத்து சுதா கொங்கரா இயக்க தங்களுக்கு முழு சம்பந்த எனவும் ஒப்புதல் அளித்துள்ளனர். இதனால் இந்தப் படத்தில் நடிக்க தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் நடிக்க போட்டிபோட்டுக் கொண்டு சுதாகொங்கராவை அனுகியதாகவும் ஆனால் தனுஷிடமும் அடுத்த சில ஆண்டுகளுக்கான கால்ஷீட் இல்லாத காரணத்தால், தனுஷால் இந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை எனவும் திரைத்துறையில் பேச்சுகள் அடிபட்டது. இப்படியான சூழலில் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார் என்பது ஜி.வி. பிரகாஷின் பேச்சினால் உறுதியாகியுள்ளது.



Click it and Unblock the Notifications











