சாவதை தவிர வேற வழியில்ல.. வீடியோ வெளியிட்ட கஜானா தயாரிப்பாளர் மாயம்.. பிரபல நடிகர் அதிர்ச்சி தகவல்
சென்னை: இயக்குநர் பிரபதீஸ் சாம்ஸ் இயக்கி, தயாரித்த திரைப்படமான கஜானா மே 9ந் தேதி தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தில், இனிகோ பிரபாகர், வேதிகா,யோகி பாபு, சாந்தினி, நான் கடவுள் ராஜேந்திரன், பியாண்ட், செண்ட்ராயன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான பிரபதீஸ் சாம்ஸ், தன்னை பெரிய நிறுவனம் ஒன்று ஏமாற்றி விட்டதாகவும், சாவதைத் தவிர வேறு வழியில்லை என கதறி அழுதபடி வீடியோ வெளியிட்டு இருந்தார். தற்போது, அவரை காணவில்லை என அவரது மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இயக்குநர் பிரபதீஸ் சாம்ஸ், வெளியிட்ட வீடியோவில், நான் கஜானா என்கிற திரைப்படத்தை இயக்கி, தயாரித்தேன் அப்படத்தின் இந்தி உரிமையை ஆட் வாய்ஸ் மீடியா உரிமையாளர் ஆதித்யா பாட்டியா வாங்கிக்கொள்வார்கள் என்றும் அதன் சௌத் இந்திய உரிமையை படம் வெளியாகும் போது வாங்கிக்கொள்வார்கள் எனக்கு ஆசை வார்த்தைகளை கூறினார்கள். இதனால், நான் ஏற்கனவே பிரபலம் நிறுவனத்திடம் போட்டு இருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தேன். ஆனால், ஆட் வாய்ஸ் மீடியா பாதி பணத்தை மட்டும் கொடுத்து மீதி பணமான ஒன்னே முக்கால் கோடி பணத்தை தரவே இல்லை.


ஏமாற்றி விட்டார்கள்: என்னை நம்பவைத்து ஏமாற்றி பெரிய படுகுழியில் என்னை தள்ளிவிட்டு, என் படத்தை பெரும் தொகைக்கு ஜியோஹாட் ஸ்டாருக்கு விற்றுவிட்டார்கள். இந்த படத்தால் நான் பத்து கோடி ரூபாயை இழந்து இருக்கிறேன். இந்த விஷயத்தில் எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். என் உடலில் உயிர் இருக்க வேண்டும் என்றால், தயாரிப்பாளர் சங்கம் இந்த விஷயத்தில் தலையிட்டு எனக்கு ஒரு நல்ல முடிவை பெற்றுத்தரவேண்டும் இல்லை என்றால், நான் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை வீடியோ வெளியிட்டு இருந்தார். இது பலரையும் அதிர்ச்சி அடைய செய்த நிலையில், தற்போது அவரை காணவில்லை என அவர் மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்து இருப்பதாக நடிகர் இனிகோ பிரபாகரன் கூறியுள்ளார்.
சோர்வாக இருந்தார்: நான் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு தயாரிப்பாளரை சந்திப்பதற்காக அவருடை அலுவலகத்திற்கு போய் இருந்தேன். அப்போது. அவர் மிகவும் சோர்வாக இருந்தார். என்ன ஆச்சு சார் என்று விசாரித்த போது, பெரிய அளவில் ஏமாந்துவிட்டேன் என்று சொன்னார். இந்த படத்தின் இந்தி ரைட்சை பெரிய நிறுவனம் ஒன்று வாங்கி உள்ளது. இவருக்கே தெரியாமல் அந்த படத்தின் இந்தி வெர்ஷன் ஜியோ ஹாட் ஸ்டாரில் இருக்கு இதைப்பார்த்து அவர் மிகவும் மனமுடைந்து வேதனையில் இருந்தார். இதை என்னிடம் சொன்ன போது, நான் எல்லாம் சரி ஆகிவிடும் அமைதியா இருங்க என்று சொல்லிவிட்டு நான் கிளம்பி வீட்டுக்கு வந்துவிட்டேன்.
காணவில்லை: அதன் பிறகு தான், அவர், சாவதைத் தவிர வேறு வழியில்லை என்று வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ வெளியிட்ட பின் அவர் எங்கே சென்றார், எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவரின் தொலைபேசியும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவரின் மனைவி வளவசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்று நடிகர் இனிகோ பிரபாகரன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











