ரொம்ப மனசு வலிக்குது.. யோகி பாபுவுக்கு முழு சம்பளமும் கொடுத்துட்டோம்.. கஜானா இயக்குநர் பேச்சு!
சென்னை: பிரபாதீஷ் சாம்ஸ் இயக்கத்தில் இனிகோ பிரபாகர், யோகி பாபு, வேதிகா மற்றும் சாந்தினி தமிழரசன் உள்ளிட்ட பலர் நடித்த ஃபேண்டஸி திரைப்படமான கஜானா திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அந்த படம் ஓடவில்லை. தங்களுக்கு யாருமே உதவவில்லை என்றும் அதிகப்படியான திரையரங்குகள் கிடைக்கவில்லை என படத்தின் இயக்குநர் புலம்பித்தள்ளியுள்ளார்.
கஜானா படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு யோகி பாபு வரவில்லை என்பதற்காக அந்த நிகழ்ச்சியில் பேசிய நபர் யோகி பாபுவை சகட்டுமேனிக்குத் தீட்டித் தீர்த்தார். புரமோஷனுக்கு வரவேண்டும் என்றால் யோகி பாபு தனியாக 7 லட்சம் கேட்கிறார் என்றும் கூறினார்.

சமீபத்தில், யோகி பாபு நடித்த 'ஜோரா கையதட்டுங்க' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய யோகி பாபு தனக்கு பலர் சம்பளத்தையே கொடுக்கவில்லை என பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் கஜானா படத்தின் இயக்குநர் பிரபாதீஷ் சாம்ஸ் பேசியுள்ளார்.
ரொம்ப மனசு வலிக்குது: தமிழ் சினிமாவிலேயே யாழி எனப்படும் கோயில்களில் இருக்கும் மிருகத்தை மையப்படுத்தி இப்படியொரு ஃபேண்டஸி படமாக கஜானா படத்தை உருவாக்கியிருக்கிறோம். ஆனால், தியேட்டர்கள் ஒதுக்குவதில் கூட இங்கே பாலிடிக்ஸ் நடக்கிறது. 80 தியேட்டர்களில் ஒரு ஸ்க்ரீன் மட்டுமே கிடைத்துள்ளது. ரொம்பவே மனசு வலிக்குது, இந்த படத்துக்கு யாருமே ஆதரவு கொடுக்கவில்லை. லண்டனில் இருந்து எல்லாம் சிஜிக்காக வேலை நடந்தது. சில சாதிய ரீதியிலான படங்கள் என்றாலே பலரும் ஆதரவு கொடுக்க முன் வருகின்றனர். ஆனால், எங்களை போன்றவர்களுக்கு யாரும் உதவ முன் வருவதில்லை என பேசியிருந்தார்.

யோகி பாபுவுக்கு முழு சம்பளமும் கொடுத்துட்டோம்: 'ஜோரா கையத்தட்டுங்க' பட விழாவில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் படங்களில் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என தனஞ்செயன் பேசியதும் கடுப்பான யோகி பாபு பல படங்களில் தனக்கு இன்னமும் சம்பளத்தை ஒழுங்காக தரவில்லை. நான் யார் வம்புக்கும் போகாமல் அமைதியாக என் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார். இந்நிலையில், யோகி பாபுவுக்கு சம்பளத்தை ஒழுங்கா கொடுத்தீங்களா என்கிற கேள்விக்கு அவருக்கு முழு சம்பளமும் கொடுத்துவிட்டோம் என கஜானா பட இயக்குநர் விளக்கமளித்துள்ளார்.
யோகி பாபுவிடம் பிரச்னை இல்லை: மேலும், அன்று படக்குழுவுக்கு சம்பந்தமில்லாத நபர் யோகி பாபுவிடம் இருந்த தனிப்பட்ட பிரச்னை காரணமாக அப்படி பேசிவிட்டார். யோகி பாபு எப்போதுமே அண்ணா ஆடியோ லாஞ்சுக்கு வரணுமா என்றுதான் கேட்டார். ஆனால், உங்களால் முடிந்தால் மட்டும் வாங்க என்று தான் சொன்னேன். அதனால் தான் அவர் வரவில்லை. மற்றபடி அவர் எப்போதுமே எனக்கு உறுதுணையாகத்தான் உள்ளார். அவர் மீது எந்தவொரு பிரச்னையும் இல்லை என கஜானா படத்தின் இயக்குநர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
சினிமாவில் ஏகப்பட்ட அரசியல்: தமிழ்நாட்டில் அரசியலில் ஏகப்பட்ட டிராமா நடப்பது போல, சினிமாவில் ஏகப்பட்ட அரசியல் நடப்பதாக பலரும் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். ஹீரோக்கள் பெரிய சம்பளம் கேட்பதாக தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். தயாரிப்பாளர்கள் உரிய சம்பளத்தையே கொடுப்பதில்லை என ஹீரோக்கள் சொல்லி வருகின்றனர். இதெல்லாம் எங்கேபோய் முடியப்போகுதோ தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











