Gandhi kannadi Review: ‘காந்தி கண்ணாடி‘ தேறுமா? தேறாதா?.. செய்யாறு பாலுவின் விமர்சனம்!
சென்னை: ஷெரிஃப் இயக்கத்தில் கேபிஒய் பாலா ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படம் காந்தி கண்ணாடி. இப்படத்தில் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, அமுதவாணன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் நாளை தியேட்டரில் வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் சிறப்புக் காட்சி நேற்று சத்யம் தியேட்டரில் பத்திரிகையாளர்கள் மற்றும் விமர்சகங்களுக்காக போடப்பட்டது. இதில் படம் பார்த்த பலரும் விமர்சனத்தை கூறி வரும் நிலையில், செய்யாறு பாலு காந்தி கண்ணாடி திரைப்படத்தின் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.
கே.பி.ஒய் பாலா நண்பர்களுடன் இணைந்து ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியை நடத்தி வருகிறார். இதில், சிறிய காதுகுத்து விழாவில் இருந்து பெரிய நிகழ்ச்சிகள் வரை எதுவாக இருந்தாலும் அந்த பட்ஜெட்டிற்கு ஏற்றார் போல செய்து கொடுத்துவிடுவார்கள். பாலாவிற்கு பணம் மிகவும் முக்கியமான ஒன்று என்பதால், பணத்திற்காக எவ்வளவு கடுமையாக உழைப்பதற்கும் தயாராக இருக்கிறார். திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பாலாஜி சக்திவேல் மற்றும் அர்ச்சனா நடித்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அர்ச்சனா காதலிக்கும் போது ஒரு விஷயத்தை சொல்லியிருப்பார். மனைவி ஆசைப்பட்ட அந்த விஷயத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது பாலாஜி சக்திவேலின் ஆசை.

காந்தி கண்ணாடி: அதற்காக மிகப்பெரிய அளவில் தொகை தேவைப்படுவதால், பாலாஜி சக்திவேல், ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி வைத்து இருக்கும் பாலாவை தேடி வருகிறார். அவர்கள் ஒரு தொகையை பட்ஜெட்டாக போட்டு கொடுக்கிறார். அதன் பின் என்ன நடந்தது என்பது தான் காந்தி கண்ணாடி திரைப்படத்தின் கதை. மிகப்பெரிய சீரியஸான ஒரு விஷயத்தை காமெடி கலந்து சொல்லி, கடைசியில் 5 நிமிடத்தில் அதை அழுத்தமாக சொல்லி மனதை பிழிந்துவிட்டார் இயக்குனர்.
படத்தின் பிளஸ்: முதல் படத்திலேயே இப்படி ஒரு கதையை கையில் எடுத்ததற்கு இயக்குனருக்கு மிகப்பெரிய அளவில் துணிச்சல் இருக்க வேண்டும். அதுவும் முதல் படத்திலேயே இப்படி ஒரு சவாலான கதையை தேர்வு செய்து இருக்கிறார். இப்படி ஒரு அழுத்தமான கதையில் நகைச்சுவை கொண்டு வருவது என்பது சவாலான விஷயம். அதை அழகாக செய்து இருக்கிறார் இயக்குனர். முதல் பாதியை விட இரண்டாவது பாதி ரசிக்கும் படி இருக்கிறது. படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
மைனஸ்: படத்தின் முதல் பாதியில் என்ன சொல்கிறார் என்பதே தெரியாமல் கதை குழப்பமாக நகர்கிறது. அதேபோல சில கதாபாத்திரங்கள் மிகைப்படுத்த பட்டதாக இருக்கிறது. குறிப்பாக பாலாஜி சக்திவேலின் கதாபாத்திரத்தை எடுத்துக்கொண்டால், அவர் குழந்தைத்தனமானவரா? இல்லை மனம் நலம் பாதிக்கப்பட்டவரா? இல்லை இவருடைய கதாபாத்திரமே அப்படித்தானா என பல வகையில் யோசிக்க வைத்து விட்டது. அதே போல, பாலா ஹீரோவாக நடிக்கும் முதல் படம் இது என்பதால் சில இடத்தில் அவருக்கு கேமரா பயம் இருக்கிறது. இதை கவனித்து சரி செய்ய வேண்டிய பொறுப்பு இயக்குநருடையது. ஆனால், அதை இயக்குனர் தவற விட்டு இருக்கிறார். படத்தின் கதை சோர்ந்து போகும் போது படத்தின் இசை கூடுதல் பலமாக இருக்கிறது. காந்தி கண்ணாடி திரைப்படமும் தலைவன் தலைவி போல வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று செய்யாறு பாலு விமர்சனம் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











