குதிரையைத் தாக்கிய பாஜக எம்எல்ஏவைத் தண்டிக்க வேண்டும்- ஹேமமாலினி
மும்பை: குதிரையின் காலை உடைத்த பாஜக எம்எல்ஏ தண்டிக்கப்பட வேண்டும் என நடிகை ஹேமமாலினி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
உத்தரகாண்டில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ முசோரி கணேஷ் ஜோஷி தலைமையில், தலைநகர் டேராடூனில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அங்கு நடைபெற்ற போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசின் குதிரைப்படை வந்திருந்தது. போராட்டத்தில் கணேஷ் ஜோஷி போலீசின் லத்தியைப் பறித்து குதிரை ஒன்றின் காலை உடைப்பது போல வீடியோக்கள் வெளியாகின.
இதையடுத்து, பிராணிகள் வதை தடுப்பு சட்டம், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உட்பட 3 பிரிவுகளில் கணேஷ் ஜோஷி மீது டேராடூன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் கணேஷ் ஜோஷிக்கு எதிராக நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் நடிகை ஹேமமாலினியும் கணேஷ் ஜோஷிக்கு எதிராக தனது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
இது குறித்து அவர் " என்னால் நம்பவே முடியவில்லை. யாராவது ஒரு அப்பாவி விலங்கிடம் இப்படி நடந்து கொள்வார்களா?
உண்மையிலேயே இது ஒரு மனிதாபிமானமற்ற செயல். நல்லவேளை குதிரை பிழைத்துக் கொண்டது. குதிரையின் காலை துண்டிக்கவும் தேவையில்லை.
கடவுள் உண்மையிலேயே கருணை காட்டிவிட்டார். ஆனால் அந்தக் குற்றவாளி உண்மையில் தண்டிக்கப்பட வேண்டும்" இவ்வாறு ஹேமமாலினி காட்டமாக தனது கருத்தினை பதிவு செய்திருக்கிறார்.
இந்த வழக்கில் குதிரையை தான் தாக்கவில்லை என்றும், அவ்வாறு நிரூபிக்கப்பட்டால், தனது கால்களை வெட்டி எடுத்துக்கொள்ளுமாறும், கணேஷ் ஜோஷி பேட்டியளித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











