சிவகுமாரை விட்டுட்டீங்க.. என்னை டார்கெட் செய்றீங்க.. கங்கை அமரன் இப்படி கோர்த்துவிடுறாரே
சென்னை: இளையராஜாவின் சகோதரரும், இசையமைப்பாளர், இயக்குநர், நடிகர் என பன்முக திறமை கொண்டவருமான கங்கை அமரன்; மறைந்த பாடலசிரியர் வாலியின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மாதம் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதற்கு பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது அவருக்கு பின்னால் நின்ற ஒருவரிடம் நடந்துகொண்ட விதம் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய சூழலில் அதுகுறித்து இப்போது பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் மூத்த இசையமைப்பாளர், இயக்குநர்களில் ஒருவர் கங்கை அமரன். இளையராஜாவின் சகோதரர் என்ற அடையாளத்தை தாண்டி சிறந்த இசையமைப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர் என பல அடையாளங்களை கொண்டிருப்பவர் அவர். கோலிவுட்டில் ஆகச்சிறந்த பாடல்களை அவர் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவர் பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை.
இசையமைப்பாளராக கலக்கிய கங்கை: இசை என்றாலே இளையராஜாதான் என்று இருந்த காலத்திலேயே சிறந்த இசையை வழங்கியவர் கங்கை அமரன். சுவரில்லாத சித்திரங்கள், மௌன கீதங்கள், வாழ்வே மாயம், மண்ணுக்கேத்த பொண்ணு, நம்ம ஊரு நல்ல ஊரு, ருத்ரா என பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அந்தப் படங்களில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாம் இன்னமும் ரசிகர்களின் ப்ளே லிஸ்ட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அவதாரம்: தற்போது வயோதிகம் காரணமாக முன்னர் போல் சினிமாவில் அவர் ஆக்டிவ்வாக இல்லாவிட்டாலும் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவருகிறார். அதேபோல் இத்தனை வருடங்கள் முழு நேர நடிகராக மாறாமல் இருந்த கங்கை அமரன், லெனின் பாண்டியன் படத்தின் மூலம் அந்த அவதாரத்தையும் எடுத்திருக்கிறார். இதில் ரோஜாவும் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில்தான் அதன் டீசர் வெளியானது.
வாலி பிறந்தநாள் அன்று: சூழல் இப்படி இருக்க மறைந்த பாடலாசிரியரும், கவிஞருமான வாலியின் பிறந்தநாள் நிகழ்வில் கடந்த மாதம் கலந்துகொண்டார். அதன் பின்பு செய்தியாளர்களிடம் அவர் பேசிக்கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் ரசிகர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அதனை கவனித்த கங்கை அமரன், நீங்கள் பேசுங்கள் என்று சொல்ல; அந்த ரசிகர் அதை உண்மை என்று நினைத்து பேச ஆரம்பித்தார். ஆனால் கங்கையோ பாதியிலேயே அங்கிருந்து புறப்பட முற்பட்டார். இதனை கவனித்து அங்கிருந்தவர்கள் மீண்டும் அவரை அழைத்தார்கள்.
கங்கை அமரன் பேச்சு: மீண்டும் பேச ஆரம்பித்த அவர் அந்த ரசிகரை சங்கடத்தில் ஆழ்த்திவிட்டார். இது பெரிய விவாதமானது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கங்கை அமரன் அதுகுறித்து பேசுகையில், "ஒரு ஆள் வளர்ந்த பிறகு அவரிடம் என்ன தவறு இருக்கிறது என்பதை நோட் செய்வதற்கு பலர் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். அவர் பின்னால் நின்றுகொண்டு கேமராவை பார்த்து என்னென்னமோ செய்துகொண்டிருந்தார். உடனே அதை போட்டு என்னை மோசமான ஆளாக ஆக்கிவிட்டீர்களே. சிவகுமாரும்தான் ஃபோனை தட்டிவிட்டார். யாராவது எதாவது செய்தீர்களா?" என்று கேள்வி எழுப்பினார்.


Click it and Unblock the Notifications











