ரஜினி, கமல் அடித்த கூத்தெல்லாம் சொன்னால் A சர்ட்டிஃபிக்கேட்தான்.. கங்கை அமரன் ஓபன் டாக்
சென்னை: கங்கை அமரன் இளையராஜாவின் சகோதரர்களில் ஒருவர். பல படங்களுக்கு இசையமைத்திருக்கும் அவர் மெகா ஹிட் படங்களையும் இயக்கியிருக்கிறார். இளையராஜா போலவே திறமை வாய்ந்தவர் கங்கை அமரன் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெங்கட் பிரபு இயக்கிவரும் GOAT படத்தில் ஒரு பாடலை எழுதியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் குறித்து கங்கை அமரன் அளித்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.
இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் ஆவர். தமிழ் சினிமாவின் மூத்த கலைஞர்களில் ஒருவரான கங்கை அமரன் இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர், நடிகர் என பன்முகத்திறமைகளை கொண்டிருப்பவர். இவரது மகன்கள்தான் வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆவர். இளையராஜாவோடு இணைந்து பயணித்துக்கொண்டிருந்த கங்கை அமரன் கண்ணதாசனிடம் உதவியாளராக இணைய வேண்டும் என விருப்பப்பட்டவர். இருப்பினும் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போக கதை ஆசிரியரும், பாடலாசிரியருமான பஞ்சு அருணாச்சலத்திடம் உதவியாளராக இணைந்தார்.

இசையமைப்பாளர்: மேலும் கோழிகூவுது, கரகாட்டக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். இதில் கரகாட்டக்காரன் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இயக்குநராக மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் ஜொலித்தவர் கங்கை அமரன். அவர் சுவரில்லாத சித்திரங்கள், மௌன கீதங்கள், வாழ்வே மாயம் என ஏராளமான தமிழ் படங்களுக்கும், மலையாள படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். அதேபோல் பாடலாசிரியராகவும் பல பாடல்களை எழுதியிருக்கிறார் கங்கை அமரன். இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரின் இசையிலும் பாடல்கள் எழுதியிருக்கிறார்.
செம டேலண்ட்: கங்கை அமரன் சரியான திறமைக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. இளையராஜா பெயரில் வந்த சில பாடல்கள் கங்கை அமரன் இசையமைத்ததுதான் என்றும் ஒரு பேச்சு திரைத்துறையில் நெடுங்காலமாகவே உண்டு. வாலி எப்படி குறும்புத்தனமான வரிகளை பாடல்களில் வைப்பாரோ அதேபோல் கங்கை அமரனும் வைப்பார். உதாரணமாக மங்காத்தா படத்தில் இடம்பெற்ற, வாடா பின்லேடா பாடலை வாலி எழுதி கொடுத்துவிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது பாடல் வரிகளில் சில மாற்றங்கள் தேவைப்பட வாலி கேட்டுக்கொண்டதற்கிணங்க கங்கை அமரன் அந்த மாற்றத்தை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் குறித்து கங்கை அமரன் அளித்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்த அந்தப் பேட்டியில், "கமல் ஹாசன் சிறந்த இலக்கியவாதிதான். நான் பாடல்கள் எழுதும்போது சில கருத்துக்களை அவர் சொல்லவும் செய்திருக்கிறார். அது நன்றாகவும் இருக்கும். ஆனால் பொது மேடையில் பேசும்போதுதான் யாருக்கும் புரியாத வகையில் பேசிவிடுகிறார்.
பலருக்கு புரியவில்லை: நான் மட்டுமில்லை எனக்கு தெரிந்தவர்கள் பல பேர் கமல் ஹாசன் பேசுவது புரிவதே இல்லை என்று என்னிடமே கூறியிருக்கிறார்கள். நான் இப்படி சொல்வதற்கு நீங்கள் (நெறியாளரை பார்த்து) சிரித்திருக்க வேண்டும். ஆனால் சிரிக்கவில்லை. ஏன் நீங்கள் கமல் ஹாசன் ரசிகரா. இருந்தாலும் பரவாயில்லை நான் சொல்வதுதான் உண்மை. இன்னொன்றையும் சொல்லிக்கொள்கிறேன் நான், கமல் ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து அடித்த கூத்தை சொல்லட்டுமா. அதையெல்லாம் சொன்னால் A சர்ட்டிஃபிக்கேட்தான் கிடைக்கும். அந்த அளவுக்கு செய்திருக்கிறோம்" என்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் என்னது A சர்ட்டிஃபிக்கேட் கிடைக்குமா அந்த அளவுக்கு என்ன சார் செஞ்சிருக்கீங்க என்று கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











