வீணாய்ப்போன வடிவேலு.. நீ யாரு எங்களை பேச.. வைகை புயலின் சொந்த ஊரில் கஞ்சா கருப்பு இப்படி பேசிட்டாரே
சென்னை: வைகை புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் வடிவேலு இப்போது திரைத்துறையில் தனது இரண்டாவது இன்னிங்ஸில் இருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் கேங்கர்ஸ், மாரீசன் உள்ளிட்ட படங்கள் வந்தன. அவற்றில் மாரீசன் சூப்பர் வெற்றியையும், கேங்கர்ஸ் தோல்வியையும் சந்தித்தன. இந்நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு பற்றி கஞ்சா கருப்பு பேசியது வைகை புயல் ரசிகர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வடிவேலு தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாதவர். அவருக்கு 2011ஆம் ஆண்டிலிருந்து சறுக்கல் ஆரம்பித்தது. அதற்கு அவரது திறமை குறைந்ததோ இல்லை அவரது காமெடி ஒர்க் அவுட் ஆகாததோ காரணம் இல்லை. மாறாக திமுகவுக்கு ஆதரவாக அரசியல் மேடை ஏறி விஜயகாந்த்தை கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனால் அத்தேர்தலில் திமுக தோல்வியை சந்தித்தது. அதனையடுத்து அவருக்கு வந்த பட வாய்ப்புகளும் குறைய ஆரம்பித்து ஒருகட்டத்தில் வற்றிப்போய்விட்டன.
மீண்டும் வந்த வடிவேலு: கிட்டத்தட்ட பத்து வருடங்கள் வரை அவரால் எழவே முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். போதாக்குறைக்கு இம்சை அரசன் 24ஆம் புலிகேசி பட பஞ்சாயத்தும் சேர்ந்துகொண்டது. ஒருவழியாக அத்தனை பிரச்னைகளும் முடிந்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். தொடர்ந்து சந்திரமுகி 2, மாமன்னன், மாரீசன்,கேங்கர்ஸ் ஆகிய படங்களிலும் நடித்தார். அவற்றில் மாமன்னன், மாரீசன் பெரிய வரவேற்பை பெற்ற படங்களாக மாறின.

புதிய வடிவேலு: முக்கியமாக அந்த இரண்டு படங்களுமே வடிவேலுவை வேறு மாதிரி ரசிகர்களுக்கு காண்பித்தன. அவர் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதை பல முறை ரசிகர்கள் உணர்ந்திருந்தாலும்; இரண்டு படங்களும் அவரை ரசிகர்களிடம் இன்னும் வேறு மாதிரியாக கொண்டு சேர்த்தது. இப்போது அவர் சில இயக்குநர்களிடம் கதை கேட்டிருப்பதாகவும்; விரைவில் அதுகுறித்த அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வரலாம் என்றும் தெரிகிறது.
திமுக ஆதரவு நிலை: இதற்கிடையே வடிவேலுவை பொறுத்தவரை தற்போது தமிழ்நாட்டை ஆளுங்கட்சியான திமுகவின் ஆதரவு மனப்பான்மையில்தான் இருக்கிறார். சமீபத்தில்கூட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு அதிமுகவுக்கு ஆதரவாக பேசி வடிவேலுவை அவரது சொந்த ஊரான மதுரையிலேயே விளாசியிருக்கிறார்.
கஞ்சா கருப்பு பேச்சு: நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கஞ்சா கருப்பு பேசுகையில், "அதிமுக உடைந்துபோய்விட்டதாக வடிவேலு சொல்கிறார். வீணாய்ப்போன வடிவேலு. எங்களுக்குள் நடப்பது பங்காளி சண்டை. நாளையே நாங்கள் சேர்ந்துவிடுவோம். நீ யார் எங்களை பற்றி பேச. நாங்கள் அழகான கட்சி. நீ எப்படிப்பட்டவன் என்று எங்களுக்கு தெரியும். ஜெயலலிதாவும், எடப்பாடி பழனிசாமியும் மக்களுக்கு எவ்வளவோ நல்லது செய்திருக்கிறார்கள். இந்தப் பொங்கலுக்கு ஸ்டாலின் எங்களுக்கு காய்ந்து போன இரண்டு கரும்பை கொடுத்தார். 6,000 ரூபாய் கொடுக்கிறேன் என சொல்லிவிட்டு 3,000 ரூபாய்தான் கொடுத்தார். இதெல்லாம் என்ன நியாயம்" என்றார்.


Click it and Unblock the Notifications











