பெண் குழந்தைகளை பெற்றவர்களை பதற வைக்கும் இயக்குநர்கள்.. கார்கி முதல் மகாராஜா வரை.. ஏன்?
சென்னை: ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்களை வைத்து ஒரு சில இயக்குநர்கள் படங்களை இயக்கி அவர்களின் வலிகளை சொல்லி வரும் சினிமாக்களை விட சமீப காலமாக பெண் குழந்தைகளை பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தும் காட்சிகள் கொண்ட பதை பதைக்கும் படங்கள் தான் வெளியாகி வருகின்றன. எப்போதாவது ஒரு படம் வந்தால் கூட பரவாயில்லை. ஆனால், சமீப காலமாக அந்த வகையறா படங்கள் ஓடுகின்றன என்பதற்காக தொடர்ந்து அதே போன்ற படங்களை வித்தியாசமான திரைக்கதைகளின் வாயிலாக இயக்குநர்கள் எடுப்பது ஏன் என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.
மகாராஜா படத்தில் நடிக்கும் போது இறுகிய மனநிலையுடனே விஜய் சேதுபதி நடித்த நிலையில், அந்த படத்தை பார்த்து விட்டு வெளியே வரும் மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு எல்லாமே அதே இறுகிய மனநிலையை கடத்தி விடுகின்றனர். இதுபோன்ற படங்களை பெண் குழந்தைகள் தியேட்டருக்கு சென்று பார்த்தாலோ அல்லது டிவியில் ஓடிடியில் பார்த்தாலோ அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்கிற கேள்வியும் எழுகிறது.
புதிய புதிய கதைகளை எடுத்து இயக்குநர்கள் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தலாம், அழ வைக்கலாம். ஆனால், தொடர்ந்து பெண் குழந்தைகளை இப்படி சித்ரவதை படுத்தும் காட்சிகளை படமாக்கி வெற்றி காண்பதை குறைத்துக் கொண்டால் நல்லா இருக்கும் என்கிற குரல்களும் சமூக வலைதளங்களில் ஒலிக்கத் தொடங்கி உள்ளன. சமீப காலமாக அப்படி பெண் குழந்தைகளை சித்ரவதை செய்யும் காட்சிகளை மையக் கருவாக கொண்டு வெளியான படங்கள் குறித்து இங்கே ஒரு சிறிய அலசலை பார்ப்போம்.
கார்கி: கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான கார்கி படத்தில் பெண் குழந்தைகளை பெற்ற வயதான செக்யூரிட்டி ஒரு சிறுமியை பலாத்காரம் செய்வதாக படமாக்கப்பட்டு இருக்கும். சாய் பல்லவி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஆர்.எஸ். சிவாஜி, லிவிங்ஸ்டன் மற்றும் காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்த அந்த படம் அந்த ஆண்டின் சிறந்த படமாக மாறியது. இது போன்ற குற்ற வழக்குகளும் நம் நாட்டில் அரங்கேறி வருகின்றன என்பதை அந்த படம் காட்டியிருந்தது. ஏற்கனவே ராட்சசன் படம் பயமுறுத்தியதை விட அதிக பயத்தை கார்கி விதைத்தது.

சுழல் வெப்சீரிஸ்: அதே ஆண்டு வெளியான சுழல் வெப்சீரிஸிலும் சித்தப்பாவே தனது அண்ணன் மகள்களை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வரும் பகீர் கிளப்பும் கதையை இயக்குநர் பிரம்மா மற்றும் அனுசரண் முருகையன் இணைந்து இயக்கினர். ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், கதிர், ஸ்ரேயா ரெட்டி, இளங்கோ குமரவேல் உள்ளிட்ட பலர் அந்த வெப்சீரிஸில் நடித்தனர். சொந்தக்காரங்களை கூட நம்பக் கூடாது என்றும் உறவினர்கள் வீட்டிற்கு கூட குழந்தைகளை அனுப்பக் கூடாது என்கிற முடிவுக்கே பெற்றோர்கள் வரும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கி விட்டனர். அந்த வெப்சீரிஸும் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது.

சித்தா: சித்தார்த் தயாரித்து நடித்து கடந்த ஆண்டு வெளியாகி பல விருதுகளை குவித்த சித்தா திரைப்படத்தின் கதையும் பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் கொடூரனின் கதை தான். சுழல் வெப்சீரிஸில் எந்த சித்தப்பாவை வில்லனாக்கி இருந்தார்களோ அந்த சித்தப்பா இங்கே பாசக்கார சித்தாவாக மாறியிருந்தார். பஞ்சு மிட்டாய் விற்பவர்கள், கலர் கோழி குஞ்சு விற்பவர்கள் காமக் கொடூரர்களாக மாறி சிறுமிகளை சூறையாடும் காட்சிகள் கண்களை குளமாக்கின. வீட்டு வாசலில் கூட தனியாக இனிமேல் குழந்தைகளை விளையாட அனுமதிக்கக் கூடாது என்கிற எண்ணத்தை சித்தா திரைப்படம் விதைத்தது. அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த், நிமிஷா சஜயன் அந்த படத்தில் சிறப்பாக நடித்திருந்தனர். பாலியல் தொல்லைக்கு ஆளான சிறுமியாக குழந்தை நட்சத்திரம் சஹஸ்ரா நடித்த நடிப்பு அனைவரையும் நெகிழ வைத்தது.

பிடி சார்: இப்படி தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்த வித விதமான படங்கள் வெளியாகி வெற்றிப் பெற்றுக் கொண்டே இருக்கின்றன. இந்த ஆண்டு கார்த்திக் வேணுகோபலன் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடித்த பிடி சார் படத்திலும் இளம் பெண் பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் கதை தான் படமாக்கப்பட்டது. அனிகா சுரேந்திரன் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மகாராஜா: அந்த வரிசையில் அடுத்ததாக நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நட்டி நட்ராஜ், அனுராக் காஷ்யப், அபிராமி, திவ்யபாரதி, மம்தா மோகன்தாஸ், சிங்கம் புலி, முனிஷ்காந்த், மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்த மகாராஜா திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திலும் அதே கதை தான். வித்தியாசமான ஸ்க்ரீன் பிளே மற்றும் மேக்கிங்கில் நித்திலன் மிரட்டியுள்ளார். விஜய் சேதுபதியின் நடிப்பு வேறலெவல். நட்டி நட்ராஜ், சிங்கம் புலி என ஒவ்வொரு கதாபாத்திரங்களின் ட்விஸ்ட்டுகளும் ரசிக்க வைக்கின்றன. அதெல்லாம் சரி தான். ஆனால், பெண் குழந்தைகளை பலாத்காரம் செய்யும் கதையை மையப்படுத்தியே தொடர்ந்து இயக்குநர்கள் இதுபோன்ற படங்களை எடுப்பது விழிப்புணர்வு நோக்கத்திலா அல்லது பயத்தை விதைக்கும் நோக்கிலா? என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது. யு/ஏ சான்றிதழை இந்த படத்துக்கு எப்படித்தான் சென்சார் போர்டு கொடுத்தது என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்தும் இதே கதையை வேறொரு திரைக்கதை கொண்டு இயக்கி இயக்குநர்கள் வெற்றி பெறும் ஃபார்முலாவை இனியாவது கை விட்டால் நல்லது.



Click it and Unblock the Notifications











