Garudan: ருத்ரதாண்டவமாடும் சூரிக்கு வெற்றியைக் கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி சசிக்குமார் நெகிழ்ச்சி!
சென்னை: காமெடி நடிகராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக உருவாக்கிக் கொண்டிருப்பவர் சூரி. இவரது நடிப்பில் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை பாகம் ஒன்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதனால் விடுதலைப் பாகம் 2 எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் சூரியையும் வெற்றிமாறனையும் தொடர்ந்து கேட்டுக் கொண்டே உள்ளனர்.
சூரியின் ருத்ரதாண்டவம்: இந்நிலையில் சூரியின் நடிப்பில் வெளியான கருடன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் படத்தில் இயக்குனர் சசிகுமார், உன்னி முகுந்தன் மற்றும் சூரி என மூவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் சூரி தான் முக்கிய கதாபாத்திரம் என்றாலும் சசிகுமாருக்கும் உன்னி முகுந்தனுக்கும் திரைக்கதையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தில் கதை சொல்லியாக வரும் சமுத்திரக்கனியும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாகவே கையாண்டுள்ளார். படத்தின் மற்றொரு பலம் என்றால் அது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை குறிப்பிடலாம். குறிப்பாக இடைவேளை காட்சியில் ருத்ரதாண்டவம் ஆடும் சூரிக்கு அசத்தலான பின்னணி இசையை அமைத்து ரசிகர்களுக்கு புல்லரிக்க வைத்துள்ளார்.

நன்றி சொன்ன சசிக்குமார்: கருடன் திரைப்படம் கடந்த வார இறுதியில் அதாவது மே மாதம் 31ஆம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி இன்றுடன் ஆறு நாட்கள் ஆகின்றது. ஐந்து நாட்கள் ஆகியும் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருப்பது படக் குழுவுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்நிலையில் படத்தில் நடித்துள்ள இயக்குனரும் நடிகருமான சசிகுமார் தனது எக்ஸ் பக்கத்தில் கருடன் படத்தை வெற்றிப்படமாகிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில் "கருடன் மிக பெரிய வெற்றியாக்கிய உங்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும் 😍
Thanks to all for ur love and support 👍" என குறிப்பிட்டுள்ளார்.
கருடன் வசூல்: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான கருடன் திரைப்படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் ஆறு நாட்கள் ஆகிறது. இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களுக்கான வசூல் எவ்வளவு என்ற தகவல் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் கருடன் முதல் ஐந்து நாட்களில் ரூபாய் 26 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கருடன் படத்தின் உண்மையான வசூல் குறித்து பட குழு தரப்பில் இதுவரை எந்த விதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
சூரியின் அடுத்தடுத்த படங்கள்: சூரியின் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படங்கள் வரிசையில் இயக்குனர் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படமும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகமும், நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கூழாங்கல் படத்தை இயக்கிய பி எஸ் வினோத் ராஜன் இயக்கத்தில் கொட்டுக்காளி படமும் வெளியாக உள்ளதால் தமிழ் சினிமாவில் சூரி ஒரு உச்ச நட்சத்திரமாகவே வளர்ந்து வருகிறார். கருடன் படத்தின் போதே சூரியின் பெயர் திரையில் வந்த போதும் சூரி திரையில் தோன்றிய போதும் அவருக்கான மாஸ் சீன்கள் வந்த போதும் ரசிகர்கள் கைத்தட்டி விசில் அடித்து ஆரவாரம் செய்ததை திரையரங்குகளில் காண முடிந்தது. தமிழ் சினிமாவில் ஒரு அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட் ஆக தனது திரை வாழ்க்கையை தொடங்கி தற்போது ஒரு கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆகவே சூரி நிலை நிறுத்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications











