Vijay Vs Gautami: மக்களை மதிக்காத விஜய்.. நடிகை கௌதமி கொஞ்சம் கூட யோசிக்காம விளாசிட்டாங்களே!
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தொடர்ந்து தனது பிரசாரப் பயணங்களை ரத்து செய்து வருவது வாடிக்கையாக இருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் விஜய் தனது பிரசாரத்தை மீண்டும் ரத்து செய்துள்ளார். இப்படி இருக்கையில் விஜய்யின் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் பிரசாரம் உள்ளிட்டவை, குறித்து அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர்களில் ஒருவரான நடிகை கௌதமி அதிரடியான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்த, முறையான அறிவிப்பை வெளியிட்டது. ஏப்ரல் 23ஆம் தேதி பொது தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என்றும், மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னர் இருந்தே தமிழ்நாட்டில் பல கட்சிகள் பிரசாரத்தை நடத்தி வந்தது. தமிழக வெற்றிக் கழகமும் பிரசாரத்தை நடத்தி வந்தது.

தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் திமுக, அதிமுக, நாம் தமிழர், காங்கிரஸ், பாஜக, விடுதலை சிறுத்தைகள் கட்சி என அனைத்து கட்சிகளும் முழுமூச்சாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஆனால் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மட்டும், தேர்தல் பிரசாரத்தை தொடங்கி இருந்தாலும், அனுமதி வாங்கிவிட்டு தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளாமல் செல்வது, அவ்வப்போது தனது தேர்தல் பயணத்தை ரத்து செய்வது, ஆறு மணிக்கு மேல் தேர்தல் பிரசாரமே நடத்தாமல் இருப்பது என பல நேரங்களில் விஜய் பிரசாரத்தை கைவிட்டுள்ளார். கடலூருக்கு மட்டும் இதுவரை மூன்று முறை அனுமதி வாங்கிவிட்டு மூன்று முறையும் பிரசாரத்திற்கு செல்லாமல் ரத்து செய்துள்ளார் விஜய்.
என்ன காரணம்?: இதனால் விஜயின் பிரச்சார நடவடிக்கைகளை அரசியல் வட்டத்தில் பேசுபொருளாக மாறியது மட்டுமில்லாமல், பொதுமக்கள் மத்தியிலும் தேர்தல் நேரத்திலே மக்களை சந்திக்க வராத ஒரு கட்சியின் தலைவர், தேர்தலுக்குப் பின்னர் வெற்றி பெற்றுவிட்டால் வருவாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்படியான பேச்சுக்கள் ஒருபுறம் இருந்தாலும், தேர்தல் கருத்துக் கணிப்புகள், அரசியல் வட்டாரத்தில் அடிபடும் பேச்சுக்கள், கள நிலவரம் உள்ளிட்டவை தவெகவுக்குச் சாதகமானதாக இல்லை என்றும் அதனால் தான் விஜய் இந்த தேர்தலில் மிகவும் மும்முரமாக பிரசாரம் செய்வதால், தனக்கு சாதகமாக எதுவும் மாறிவிடாது, என யோசித்து, ஆற அமர பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார் என்றும் பேச்சுக்கள் அடிபடுகிறது.

விளாசிய கௌதமி: இப்படி இருக்கையில் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர்களில் ஒருவராக இருக்கக்கூடிய நடிகை கௌதமி விஜய்யின் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் பிரசார நடவடிக்கைகள், குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்த பதில் அரசியல் தளத்தில் கவனத்தை எடுத்துள்ளது. சினிமாவாக இருந்தாலும் சரி அரசியலாக இருந்தாலும் சரி மக்களால் தான் ஒருவர் ஒரு உயர்ந்த நிலைக்கு வந்திருக்க முடியும். அப்படி இருக்கையில், அந்த மக்களோடு மக்களாக இருப்பது தான் சரி. சினிமாவில் இருப்பதால் பெரும் புகழும் கிடைத்துள்ளது என்றால் அது இந்த மக்களால் தான் கிடைத்தது, அப்படி இருக்கையில் அந்த மக்களை நேரடியாக சந்திப்பது தான் மரியாதையாக இருக்கும். மக்களைச் சந்திக்க வில்லை என்றால் அவருக்கு மக்கள் மீது மதிப்பு இல்லை என்று தானே அர்த்தம் என்று பதில் அளித்துள்ளார். இவரது பதிலை கேட்ட இணையவாசிகள் பலரும் கௌதமி சொன்னது முழுக்க முழுக்க சரி என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications