துருவ நட்சத்திரம் படத்தால் பிரச்னை.. விஜய்யின் லியோதான் உதவியது.. கௌதம் மேனன் ஓபன் டாக்
சென்னை: கௌதம் மேனன் ஃபுல் ஃபார்மில் இருந்த இயக்குநர். தொட்டதெல்லாம் ஹிட்டாக மாறிய காலம் எல்லாம் இருந்தது. ஆனால் துருவ நட்சத்திரம் உள்ளிட்ட சில படங்கள் அவருக்கு தீராத சங்கடத்தை ஏற்படுத்தின. சூழல் இப்படி இருக்க நடிகராக மாறிய அவர் லியோ, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என பல படங்களில் நடித்தார். இந்நிலையில் தான் ஏன் நடிகன் ஆனேன் என்பது குறித்து மனம் திறந்திருக்கிறார் அவர்.
ராஜீவ் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்து மின்னலே படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் கௌதம் மேனன். அந்தப் படம் ஹிட்டானதை தொடர்ந்து காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் என வரிசையாக ஹிட் படங்களை இயக்கினார். அவரது இயக்கத்தில் நடித்துவிட்டால் தங்களது கரியருக்கு பாதுகாப்பு என்று பல நடிகர்கள் உறுதியாக நம்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கௌதமுக்கு ஏற்பட்ட பிரச்னைகள்: ஃபுல் ஃபார்மில் இயக்குநராக சிக்சர் விளாசிக்கொண்டிருந்த அவர் தயாரிப்பு வேலைகளில் இறங்கினார். அது அவருக்கு பல பிரச்னைகளை உண்டு செய்தது. முக்கியமாக பொருளாதார ரீதியாக அவரை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியது. அதனால் சிக்கல்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்க; இயக்கத்தில் முழு கவனத்தையும் செலுத்த முடியாமல் திண்டாடினார் அவர். அந்த நிலைமையிலும் துருவ நட்சத்திரம் படத்தை இயக்கி முடித்தார்.
துருவ நட்சத்திரம்: முதலில் இந்தக் கதையை ரஜினியிடம் சொன்னார். அவரும் ஓகே சொல்லும் மனநிலையில்தான் இருந்தாராம். ஆனால் சில காரணங்களால் கடைசி நேரத்தில் அவர் நடிக்கவில்லை. அவரைத் தொடர்ந்து சூர்யாவுக்கும் சென்றது. அவரும் நடிக்க மறுக்க விக்ரம் ஹீரோவாக கமிட்டானார். அவருடன் சிம்ரன், பார்த்திபன், டிடி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. அனைத்து வேலைகளும் முடிந்தாலும் படம் ரிலீஸாகவில்லை.
நடிகராக கௌதம்: படம் ரிலீஸாகததற்கு கௌதம் மேனனுக்கு ஏற்பட்ட பிரச்னைகள்தான் காரணம் என்று சொல்லப்பட்டது. பலமுறை ரிலீஸுக்கு நெருங்கி வந்தும் ஏதோ பிரச்னையால் படம் தள்ளிப்போனது. ஒருபக்கம் அவருக்கு கடன் பிரச்னையும் ஏறியதாக தெரிகிறது. எனவே ரூட்டை மாற்றிய அவர் நடிகராக களமிறங்கினார். லியோ, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், விடுதலை உள்ளிட்ட படங்களில் எல்லாம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
நடிகரானதற்கு காரணம்: நடிப்பில் பிஸியாக இருந்தாலும் துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளையும் தொடர்ந்து செய்துவருகிறார். விரைவில் படம் ரிலீஸாகலாம் என தெரிகிறது. இந்நிலையில் ஏன் நடிகன் ஆனேன் என்பது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். சமீபத்தில் கொடுத்த பேட்டியில் அவர், "துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்வதற்கு யாருமே முன்வரவில்லை. அதனால்தான் நான் மீண்டும் நடிகனாக நடிக்க ஆரம்பித்தேன். என்னுடைய பொருளாதார சிக்கல்களை கடப்பதற்கு லியோ படம்தான் பெரிய உதவி செய்தது. துருவ நட்சத்திரம் படத்துக்கு சிறிய பிரச்னை மட்டுமே இப்போது இருக்கிறது. இன்னும் ஒரு வாரத்துக்குள் சரியாகிவிடும்" என்றார்.


Click it and Unblock the Notifications











