துருவ நட்சத்திரம் பிரச்னை முடிவுக்கு வருமா?.. எப்போது ரிலீஸ் தெரியுமா?.. ரெடியான கௌதம் மேனன்
சென்னை: கௌதம் மேனன் ஃபுல் ஃபார்மில் இருந்த இயக்குநர். தொட்டதெல்லாம் ஹிட்டாக மாறிய காலம் எல்லாம் இருந்தது. ஆனால் துருவ நட்சத்திரம் உள்ளிட்ட சில படங்கள் அவருக்கு தீராத சங்கடத்தை ஏற்படுத்தின. அதுவும் துருவ நட்சத்திரம் பட பணிகளை அவர் முடித்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் கடன் பிரச்னையால் அந்தப் படம் இன்னமும் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் அந்தப் படத்துக்கு இப்போதைய நிலைமை என்னவென்பது குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.
ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநரான ராஜீவ் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்து மின்னலே படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் கௌதம் மேனன். அந்தப் படம் ஹிட்டானதை தொடர்ந்து காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் என வரிசையாக ஹிட் படங்களை இயக்கினார். கோலிவுட்டின் ஸ்டைலிஷ் இயக்குநர் என்றால் எப்போதும் கௌதம் மேனனுக்கு முதல் இடத்தை கொடுப்பார்கள் ரசிகர்கள். அந்த அளவுக்கு ரிச்சாக இருக்கும் அவரது மேக்கிங்.

கௌதம் மேனனுக்கு ஏற்பட்ட பிரச்னைகள்: இப்படி படு பிஸியாக இருந்த அவர் தயாரிப்பு வேலைகளில் இறங்கினார். அது அவருக்கு பல பிரச்னைகளை உண்டு செய்தது. முக்கியமாக பொருளாதார ரீதியாக அவரை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியது. அதனால் சிக்கல்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்க; இயக்கத்தில் முழு கவனத்தையும் செலுத்த முடியாமல் திண்டாடினார் அவர். அந்த நிலைமையிலும் துருவ நட்சத்திரம் படத்தை இயக்கி முடித்தார்.
துருவ நட்சத்திரம்: முதலில் இந்தக் கதையை ரஜினியிடம் சொன்னார். அவரும் ஓகே சொல்லும் மனநிலையில்தான் இருந்தாராம். ஆனால் சில காரணங்களால் கடைசி நேரத்தில் அவர் நடிக்கவில்லை. அவரைத் தொடர்ந்து சூர்யாவுக்கும் சென்றது. அவரும் நடிக்க மறுத்துவிட்டார். காக்க காக்க, வாரணம் ஆயிரம் என ஹிட் படங்களை கொடுத்த என்னை நம்பி சூர்யா அதில் நடித்திருக்க வேண்டும் என சமீபத்தில்கூட கௌதம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். ரஜினி, சூர்யா மறுத்ததை அடுத்து விக்ரம் ஹீரோவாக கமிட்டானார். அவருடன் சிம்ரன், பார்த்திபன், டிடி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. அனைத்து வேலைகளும் முடிந்தாலும் படம் ரிலீஸாகவில்லை.
கௌதம் மேனனின் செயல்: இப்போது ரிலீஸாகிவிடும், அப்போது ரிலீஸாகிவிடும் என அறிவிப்பு மட்டும்தான் வரும். இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இன்று கௌதம் மேனன் நீதிமன்றத்தில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாகவும்; அதில் தான் யார் யாருக்கு கடன் கொடுக்க வேண்டும் எவ்வளவு கொடுக்க வேண்டும் உள்ளிட்ட விவரங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்தக் கடன் தீர்க்கப்பட்டால் மே 27ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய கௌதம் தயாராகியிருக்கிறாராம். மேலும் இந்த விவரங்களை சரிபார்க்க சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒருநாள் அவகாசம் வழங்கியிருக்கிறது நீதிமன்றம்.


Click it and Unblock the Notifications