Dhruva Natchathiram - இந்த துருவ நட்சத்திரத்துக்கு என்னதான் ஆச்சு?.. இன்று ரிலீஸ் இல்லை..
சென்னை: Dhruva Natchathiram Release (துருவ நட்சத்திரம் ரிலீஸ்) துருவ நட்சத்திரம் படம் இன்று ரிலீஸாகாது என்று இயக்குநர் கௌதம் மேனன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கௌதம் மேனன் அடுத்தடுத்து இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா படங்களின் மூலம் பெரும் கவனம் ஈர்த்தார். போலீஸ் ஸ்டோரி மற்றும் லவ் ஸ்டோரி ஆகிய ஜானர்களில் தனது தனித்துவமான மேக்கிங்கால் தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் இயக்குநர் என்ற பெயரையும் பெற்றார்.

துருவ நட்சத்திரம்: சூழல் இப்படி இருக்க துருவ நட்சத்திரம் என்ற கதையை முதலில் சூர்யா மற்றும் ரஜினியிடம் கௌதம் சொல்ல இருவராலும் நடிக்க முடியவில்லை. அதனையடுத்து இந்தப் படத்தில் விக்ரம் கமிட்டானார். படம் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் விக்ரம், பார்த்திபன், சிம்ரன், ரிது வர்மா, விநாயகன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
படத்துக்கு பிரச்னை: படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்து முடிக்கப்பட்டாலும் ஃபைனான்ஸ் பிரச்னைகளால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இதன் காரணமாக விக்ரமும், கௌதம் மேனனும் தங்களது அடுத்தடுத்த படங்களின் வேலைகளை கவனிக்க சென்றுவிட்டனர். கௌதம் மேனன் நடிப்பிலும் தீவிரமாக கவனம் செலுத்துகிறார். தனக்கு ஏற்பட்ட கடனை அடைக்கவே அவர் பல படங்களில் நடித்துவருகிறார். கடைசியாக அவர் லியோ படத்தில் நடித்திருந்தார். இடையில் சிம்புவை வைத்து அவர் இயக்கிய வெந்து தணிந்தது காடு படமும் வரவேற்பையே பெற்றது.
தொடங்கிய வேலைகள்: இந்த சூழலில் துருவ நட்சத்திரம் படம் மீண்டும் தூசு தட்டப்பட்டு ரிலீஸ் செய்வதற்கான வேலைகளை மும்முரமாக செய்தனர். அதன்படி படமானது இன்று ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் படத்தை பார்க்க மிகப்பெரிய எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் ஒரு படம் இயக்கி தருவதாக சொல்லி ஏற்கனவே 2 கோடி ரூபாயை கௌதம் மேனன் வாங்கியிருந்தார். படமும் இயக்கவில்லை பணத்தையும் திருப்பி தரவில்லை.
இதனையடுத்து அந்த நிறுவனம் நீதிமன்றத்துக்கு சென்றது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் நாளை (இன்று) காலை 10.30 மணிக்குள் அந்த நிறுவனத்துக்கு கௌதம் மேனன் 2 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என உத்தரவிட்டிருந்தது. இதனால் துருவ நட்சத்திரத்துக்கு புதிய சிக்கல் எழுந்தது.
ரிலீஸ் இல்லை: இந்நிலையில் துருவ நட்சத்திரம் படம் இன்று ரிலீஸாகாது என்று இயக்குநர் கௌதம் மேனன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். அதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மன்னிக்கவும். இன்று துருவ நட்சத்திரத்தை திரைக்கு கொண்டுவர முடியவில்லை. நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம். இருந்தாலும் ரிலீஸுக்கு இன்னும் ஒன்றிரண்டு நாட்கள் தேவை என்று தெரிகிறது.
அப்போது டிக்கெட்டுக்கான முன்பதிவுகள், தியேட்டர்கள் மூலம் அனைவருக்கும் நல்ல அனுபவத்தை அளிக்கும் என நம்புகிறோம். படத்துக்கான ஆதரவு எங்களை கவர்ந்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் நாங்கள் வருவோம்" என குறிப்பிட்டுள்ளார். கௌதம் மேனனின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











