Nayanthara: சந்திக்கு வந்த தனுஷ் - நயன்தாரா சண்டை.. காயத்ரி ரகுராம் சொல்வதும் நியாயம் தான்!
சென்னை: நானும் ரவுடி தான் படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் அப்படத்தின் 3 வினாடி காட்சிகளை நயன்தாராவின் ஆவணப்படத்தில் பயன்படுத்தியதால், தனுஷ் 10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கு நயன்தாரா கடுமையாக விமர்சனம் செய்தும் கடிதம் வெளியிட்டதை அடுத்து தனுஷ், நயன்தாரா மோதல் பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், இதுகுறித்து காயத்ரி ரகுராம் கருத்து சொல்லி உள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நயன்தாராவை ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடி வருகின்றனர். டாப் நடிகையான இவர், நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது, படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் ஏற்பட்டதை அடுத்து 2022 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் மிகவும் பிரம்மாண்டபமாக நடைபெற்ற போதும், இந்த திருமணத்தில் குறிப்பிட்ட சில விஐபிக்களுக்கு மட்டும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. இவர்களின் திருமண வீடியோ உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்று இருந்ததால், இவர்களின் திருமணத்தின் போது ஒரு சில வீடியோக்கள் மட்டுமே வெளியானது.
இதையடுத்து திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதில் இருந்து எந்த ஒரு வீடியோவும் வெளியாகவில்லை இதனால் ரசிகர்கள் திருமண வீடியோ எப்போது வரும் என கேட்டு அலுத்துவிட்டனர். இதையடுத்து,கடந்த வாரம் நயன்தாரா திருமண வீடியோடிவின் டிரைலர் வெளியானது. அதில், நானும் ரௌடி தான் படத்தின் போட்டோவை பயன்படுத்தியதற்காக 10 கோடி கேட்டு தனுஷ் நயன்தாராவிற்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இதனால், கடுப்பான நயன்தாரா, தனது இன்ஸ்டாகிராமில் திருமண வீடியோவை வெளியிட தனுஷ் தடையாக இருந்ததாகவும், ஆவணப்படத்தை தயார் செய்துவிட்டு NOCக்காக தனுஷின் ஒப்புதலுக்காக இரண்டு ஆண்டுகள் காத்திருந்தேன்.ஆனால், அவரிடம் இருந்து எந்தவிதமான ஒப்புதலும் வராததால், பிரச்சனையை தீர்க்க, திருமண வீடியோவில் இருந்து நானும் ரௌடி படத்தின் பாடல்கள், போட்டோக்கள் என அனைத்தையும் நீக்கிவிட்டு, செல்போனில் எடுத்த சில காட்சிகளை மட்டுமே அந்த திருமண வீடியோவில் பதிவிட்டுள்ளோம்.
ஆனால், ட்ரெய்லர் வெளியான பிறகு தனுஷ் தரப்பில் இருந்து வந்த நோட்டீஸ் என்னை மேலும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அந்த டிரைலரில் இருக்கும் வெறும் 3 வினாடிக்காக 10 கோடி கேட்டதால் நான் மிகுந்த அதிருப்தி அடைந்தேன். உங்கள் சட்டப்பூர்வ அறிவிப்பை நான் பெற்றுள்ளேன், அதற்கு நாங்கள் சட்டப்பூர்வமான வழிகளில் பதிலளிப்பேன் என நயன்தாரா அதில் குறிப்பிட்டு இருந்தார். இதனால் இவர்களின் சண்டை சந்திக்கு வந்துள்ளது.
காயத்ரி ரகுராம் பேச்சு: இந்நிலையில், அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம், மதுரையில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் ஒன்றில் பேசும் போது, இன்று நயன் தாரா, தனுஷ் சண்டையை பெரிய செய்தியாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் நமக்கு எது முக்கியம். நயன்தாரா நடிச்சு சம்பாதித்தால் என்ன? இல்லை கல்யாண வீடியோவை வித்து சம்பாதித்தால் என்ன? அவர் தனுஷோடு சண்டைப்போட்டால் என்ன? போடாவிட்டால் என்ன?
ஆனால், இன்றைக்கு போதைப்பொருள் குழந்தைகளின் கையில் ஒரு சாக்லெட் போல கிடைக்கிறது. எல்லா குழந்தைகள் கையிலும் இன்று சென்று இருக்கிறது. பள்ளி வாசலில் போதைப்பொருள் சகஜமாக கிடைக்கிறது. குழந்தைகள் வைத்து இருக்கும் அனைத்து பெற்றோரின் வயிற்றிலுல் அது புளியை கரைக்கிறது. தமிழ்நாடு இன்று அந்த நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இதை முதலில் நாம் கட்டுப்படுத்த வேண்டும் என்று காயத்ரி ரகுராம் பேசி உள்ளார். இவரின் பேச்சு இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து,காயத்ரி ரகுராம் சொல்வதும் நியாயம் தான் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











