நீங்கள் இந்தியன் இல்லையா ...சூர்யாவை கடுமையாக விமர்சித்த காயத்ரி ரகுராம்
சென்னை : விக்ரம் படத்தை தொடர்ந்து மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் படத்திலும் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்தார். இதில் நடிகர் சூர்யாவாகவே அவர் நடித்திருந்தார்.
Recommended Video
தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் பயோபிக் ஆகும். இதில் மாதவன், நம்பி நாராயணனாகவும், அவரது மனைவியாக சிம்ரனும் நடித்திருந்தனர்.
ராக்கெட்ரி படம் அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது. சமீபத்தில் நடிகர் ரஜினி கூட அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என பாராட்டி இருந்தார்.

காயத்ரி ரகுராம் பேட்டி
இந்நிலையில் ராக்கெட்ரி படத்தில் சூர்யா நடித்த சீனை வைத்து அவரை கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்துள்ளார் தமிழக பா.ஜ., நிர்வாகியும், நடிகையுமான காயத்ரி ரகுராம். அவர் தனது பேட்டியில், 'இஸ்ரோ'விஞ்ஞானியாக பல காலம் பணியாற்றியவர், நம்பி நாராயணன். அவரது தேச பக்தியில் சந்தேகம் ஏற்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டது. நம்பி நாராயணன், சட்ட ரீதியில் போராடி, அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய் என நிரூபித்தார். அப்படிப்பட்ட தேச பக்தி மிக்க ஒரு நிகழ்கால மனிதரின் வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களை வைத்து, எடுக்கப்பட்ட படம் தான், ராக்கெட்ரி.மாதவன் நடித்து, இயக்கியுள்ளார்.

சூர்யா ஜெய்ஹிந்த் சொல்லாதது ஏன்
அந்த படம் பல மொழிகளிலும் வெளியாகியுள்ளது. படத்தில், நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் வரும் மாதவன், பேட்டி தரும் காட்சி உண்டு. பேட்டி முடிந்ததும், நம்பி நாராயணன், 'ஜெய் ஹிந்த்' என்று கூறி முடிப்பார்.இந்தி மொழியில் பேட்டி எடுத்த நடிகர் ஷாருக் கானும் பதிலுக்கு, 'ஜெய் ஹிந்த்' என கூறுவார். தமிழ் மொழியில், நடிகர் சூர்யா பேட்டி எடுப்பார். ஆனால், 'ஜெய் ஹிந்த்' என்று கூறி பேட்டியை முடிக்க மாட்டார். இது என்ன முரண்பாடு என புரியவில்லை. சூர்யாவுக்கு, 'ஜெய் ஹிந்த்' பிடிக்கவில்லையா? அல்லது பட காட்சி அமைப்பே அப்படித் தான் எடுக்கப்பட்டுள்ளதா?

இலவசமா இந்தி கற்று தரட்டுமா
சூர்யா, ஜெய் ஹிந்த் அதாவது இந்தியா வாழ்க என்ற வார்த்தையை கூற மாட்டார் என்றால், அது என்ன கொச்சை வார்த்தையா? ஒரு வேளை, அவருக்கு இந்தி தெரியாததால், அவர் அந்த வார்த்தையை சொல்ல மறந்திருந்தாலோ, மறுத்திருந்தாலோ இந்தி மொழியை இலவசமாக கற்று கொடுக்க ஏற்பாடு செய்கிறேன். ஜெய் ஹிந்த் என சூர்யா சொல்ல மறுத்தது ஏன்...ஏன் அவர் இந்தியர் இல்லையா.

சூர்யாவுக்கு இந்தியாவில் என்ன வேலை
அவர் அந்த வார்த்தையை சொல்லவே மாட்டேன் என்று அடம் பிடித்திருந்தால், அவருக்கு இந்தியாவில் என்ன வேலை? தேசப் பற்று இல்லாதவர், இந்தியாவை விட்டு வேறு நாட்டுக்கு சென்று விடலாம். அதற்கு என்ன தேவையோ, அதையும் செய்து கொடுக்க தயாராக இருக்கிறேன். சூர்யா சரியான விளக்கத்தை கொடுக்க வேண்டும். இல்லையென்றால், அவர் திட்டமிட்டே இந்த காரியத்தை செய்தார் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதே வேலையா போச்சு இவங்களுக்கு
காயத்ரி ரகுராம் வேண்டுமென்றே விளம்பரத்திற்காக இப்படி ஒரு பேட்டியை அளித்துள்ளார் என சூர்யா ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் குற்றம்சாட்டி உள்ளனர். ஏதாவது ஒரு படம் வந்து, ஹிட் ஆகி விட்டால் போதும் அந்த படம் பற்றியோ அல்லது அதில் நடித்தவர் பற்றியோ சர்ச்சையாக ஏதாவது ஒன்றை பேசி பப்ளிசிட்டி தேடிக் கொள்வதே பலரின் வேலையாக உள்ளது என நெட்டிசன்கள் கடுப்பாகி காயத்ரி ரகுராமை திட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











