என் நீண்ட நாள் கவலையை 'ஜீனியஸ்' போக்கும்... இயக்குனர் சுசீந்திரன் நம்பிக்கை!
இயக்குனர் சுசீந்திரனின் “ஜீனியஸ்“ திரைப்படத்தின் பிரஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை: பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் புதுமுகத்தை அறிமுகம் செய்துள்ளதாக இயக்குனர் சுசீந்திரன் கூறினார்.
இயக்குனர் சுசீந்திரனின் "ஜீனியஸ்" திரைப்படத்தின் பிரஸ்ட் லுக் வெளியீடு மற்றும் பத்ரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது இதில் இயக்குனர் சுசீந்திரன், தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் ரோஷன், கேமரா மேன் குருதேவ், படத்தொகுப்பாளர் தியாகு, கலை இயக்குனர் ஆனந்தன், வசனகர்த்தா அமுதேஸ்வர், நடன இயக்குனர் ஷோபி மற்றும் லலிதா ஷோபி, நடிகர்கள் யோகேஷ், மோனிகா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் சுசீந்திரன், பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் புதுமுகத்தை அறிமுகம் செய்துள்ளதாகக் கூறினார். இப்படம் வசூல் ரீதியாக தனக்கு வெற்றிப்படமாக அமையும் என்றும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் இயக்குனர் சுசீந்தரன் பேசியதாவது :
நான் ஜீனியஸ் திரைப்படத்தின் கதையை முதலில் யோசித்த போது அது கதையாக இல்லை. கருவாக தான் இருந்தது. நான் இந்த கதையையும் , கதாபாத்திரத்தை பற்றியும் பலரிடம் ஒன் லைனாக கூறியுள்ளேன். அனைவருக்கும் அது மிகவும் பிடித்திருந்தது.
இதை எப்படி கதையாக மாற்றுவது என்று பல வருடங்களாக யோசித்து வந்தேன். அது கதையாக மாறிய பின்பு ஜீனியஸ் கதையை விஜய் , அல்லு அர்ஜுன் , ஜெயம் ரவி உள்ளிட்ட பலரிடம் இந்த கதையை கூறியுள்ளேன். அனைவருக்கும் இந்த கதை மிகவும் பிடித்திருந்தது ஆனால் அவர்களால் சில காரணங்களால் நடிக்க முடியவில்லை.
கடைசியாக இந்த கதை அறிமுக நாயகன் மற்றும் புதிய தயாரிப்பாளரான ரோஷனிடம் சென்று தற்போது ஜீனியஸ் படமாக வந்துள்ளது. இப்படம் மக்களுக்கு கருத்து சொல்லும் பொழுதுபோக்கு படமாக இருக்கும்.
எனக்கு ஹிந்தியில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற பி.கே திரைப்படம் மிகவும் பிடிக்கும். அந்த படத்தின் பாதிப்பில் தான் நான் இப்படத்தை இயக்கியுள்ளேன். இப்படம் பி.கே போல மெசேஜ் சொல்லும் என்டர்டேயினாராக இருக்கும்.
இப்படத்தின் கதை அனைத்து மொழி மக்களுக்கும் பிடிக்கும் வகையில் உள்ளதால் படத்தை ஹிந்தி மற்றும் தெலுங்குவில் வெளியிட முடிவு செய்துள்ளோம். ரோஷனை இப்படத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும் , ஹீரோவாகவும் அறிமுகம் செய்வதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.
வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா, ஆதலால் காதல் செய்வீர் ஆகிய என் படங்கள் வெற்றிப்படங்களாக இருந்தாலும், வணிக ரீதியாக பெரிய சாதனை படைக்கவில்லை. அது எனக்குள் ஒரு வருத்தமாகவே இருந்தது. அந்த வருத்தத்தை இந்த படம் போக்கும் என நம்புகிறேன்.
இவ்வாறு இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











