உலகத் தமிழர்களை இசையால் ஆளும் இளையராஜா விரைவில் நலம் பெற வேண்டும்! - வைரமுத்து

அமைதிப்படை 2-க்குப் பிறகு வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள கங்காரு என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா தியேட்டரில் நேற்று நடந்தது. பாடகர் சீனிவாஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
படத்தின் இசையை சீனிவாசுக்கு நெருக்கமான ஏ ஆர் ரஹ்மான் விஜய் டிவி நிகழ்ச்சியில் வெளியிட்டார்.
அதில் மீடியா மற்றும் திரையுலகினர் பங்கேற்க முடியாது என்பதால், கமலா திரையரங்கில் நேற்று இரண்டாவது முறை இசைவெளியீடு நடத்தினர். படத்தின் பாடல்களை எழுதிய வைரமுத்துவுக்கு பாராட்டு விழாவாகவும் (ஏழாயிரம் பாடல் எழுதியதற்காக) இதை நடத்தினர். பப்ளிசிட்டிக்கு பப்ளிசிட்டியுமாச்சு... மக்களும் வந்த மாதிரி ஆச்சு...
விழாவில் நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வைரமுத்துவைப் பாராட்டிப் பேசினார்.
நிறைவாக வைரமுத்துவின் முறை. விழாவில் அவர் நிறையப் பேசினார். ஆனால் நிறைவாய் அமைந்த கட்டம் ஒன்று வந்தது. அது.. "இந்த சபையில் ஒன்றைச் சொல்லிக்கொள்ள ஆசைப் படுகிறேன். இந்த இசை வெளியீட்டு விழாக்களுக்கெல்லாம், எங்களுக் கெல்லாம் மூலமாக இருந்தவர்; தமிழ்நாட்டு பொக்கிஷமாக இன்னும் இருப்பவர்; கிராமத்து இசையை உலகத்தின் செவிகளுக்குக் கொண்டு சேர்த்தவர்;தமிழ் நாட்டின் இசையை உலகமெல்லாம் வெள்ளை மாளிகை வரைக்கும் விநியோகித்தவர். அந்த மகாக்கலைஞன் உடல்நலம் இல்லாமல் இருக்கிறார். அவர் முழுநலம் பெற்று மீண்டும் வந்து இன்னும் முப்பது ஆண்டுகளுக்கு இசையமைத்திட வேண்டும் என்று இந்த சபையில் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார் வைரமுத்து.
அந்த வார்த்தைகளில் நெகிழ்ச்சி தெரிந்தது.. உண்மை இருந்தது!


Click it and Unblock the Notifications











