நானும் கில்லியும்.. முத்துப்பாண்டி ரைஸ் மில் சீன் மதுரையில் எடுக்கல.. எங்க எடுத்தாங்க தெரியுமா?
சென்னை: விஜய்யின் கில்லி படத்தின் வீடு சென்னை லைட் ஹவுஸ் பக்கத்தில் இல்லை அது ஒரு பிரம்மாண்ட செட் என இயக்குநர் தரணி ரிவீல் செய்தது தானே தெரியும். மதுரையில் முத்துப்பாண்டி கோட்டை என காட்டப்பட்ட அந்த ரைஸ் மில் காட்சி உண்மையில் மதுரையிலேயே எடுக்கவில்லை என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.
நிச்சயம் சென்னைக்கு அருகே உள்ள செங்குன்றம் பகுதி மக்களுக்குத் தெரிந்திருக்கும். அங்கே தான் கில்லி படத்தின் பெரும்பாலான மதுரை சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.

கில்லி படத்தின் படப்பிடிப்பை நானே நேரடியாக 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது என்னுடைய தம்பியுடன் பார்த்த நினைவுகள் அப்படியே இன்னமும் இருக்கிறது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
முத்துப்பாண்டி ரைஸ் மில்: கில்லி படத்தில் முத்துப்பாண்டி கிட்ட இருந்து எப்படியாவது தப்பிச்சு சென்னைக்குப் போய் விமானத்துல ஏறி ஃபாரின் போயிடும்மா என அனைத்து ஏற்பாட்டையும் அவங்க அப்பா செஞ்சுக் கொடுத்தா முத்துப்பாண்டி லாரியிலேயே ஏறிக் கொண்டு முத்துப்பாண்டி ரைஸ் மில்லுக்கு நடிகை திரிஷா வந்து மாட்டிக் கொள்வார். அந்த காட்சி எடுக்கப்பட்டது செங்குன்றம் நல்லூர் ஊராட்சியில் உள்ள ரோகிணி ரைஸ் மில்லில் தான். திடீரென முத்துப்பாண்டி ரைஸ் மில் என பெயர் மாற்றப்பட்ட நிலையில் வேறு யாரோ அந்த ரைஸ் மில்லை வாங்கி விட்டார்களா என நினைத்த நிலையில், விஜய்யின் கில்லி படத்தின் சூட்டிங் அங்கே நடக்கிறது என்று தெரிய வந்ததும் வீட்டின் அருகே அடிக்கடி சென்று விளையாடி வரும் ரைஸ் மில் என்பதால் நானும் தம்பியும் சென்று விட்டோம்.
எதிரே வந்த திரிஷா: பிரகாஷ் ராஜ் வந்திருக்காக.. ஹீரோயின் திரிஷா வந்திருக்காக என்றெல்லாம் சொல்லப்பட்ட நிலையில், விஜய் வந்திருக்காரா என்கிற ஆர்வத்தில் தான் கால்கள் ரைஸ் மில்லை நோக்கி நடந்தன. ஏசி காருக்குள் ஒரு பெண் உட்கார்ந்திருந்தார். அதுதான் திரிஷாவா இருக்கும் என நினைத்துக் கொண்டு கருப்புக் கண்ணாடிக்குள் உருவம் தெரிகிறதா என உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் பாவாடை தாவணியில் எங்கள் அருகே வந்து கடந்து சென்றார் திரிஷா. பெரிதாக எந்தவொரு மேக்கப்பும் இல்லை. லாரியில் இருந்து கீழே விழுந்து தப்பிச் செல்லப் பார்க்கும் சீன் அன்று படமாக்கப்பட்டது.

செல்லத்திடம் ஆட்டோகிராஃப்: கில்லி படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக வரும் அதில், ஹாய் செல்லம் என பிரகாஷ் ராஜ் வசனம் பேசியிருப்பார் என்றெல்லாம் தெரியாது. கயித்துக் கட்டிலில் அமர்ந்திருந்த பிரகாஷ் ராஜ் திரிஷாவின் அண்ணன் என ஒருவரை கத்தியால் குத்திக் கொல்லும் காட்சி படமாக்கப்பட்டது. போலியான ரத்தம் பைப் மூலம் செட் செய்யப்பட்டு கத்திக் குத்தியதும் வயிற்றில் இருந்து குபீரென வந்தது. அந்த காட்சிக்கு பிறகு ரிலாக்ஸாக அமர்ந்த பிரகாஷ் ராஜ் அருகே சென்று ஆட்டோகிராஃப் வாங்கினோம். விஜய் வராததால் பெரிதாக கூட்டமே இல்லை.
கில்லியையும் விஜய்யையும் ஒரே நாளில் பார்த்தேன்: மதுரையில் எடுக்கப்பட்ட காட்சிகளில் தான் விஜய் வந்திருந்தார். கில்லி படத்தின் ஷூட்டிங் அந்த ரைஸ் மில்லில் எடுக்கும் போது விஜய் வரவில்லை. விஜய்யை பார்க்க மிஸ் பண்ணிட்டோமே என வருத்தத்துடன் இருந்தாலும், கில்லி படம் வெளியானதும் தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்து செம ஹேப்பி ஆனேன். படம் முடிந்து வீட்டுக்கு வரும் வழியிலேயே மதுர படத்தின் ஷூட்டிங்கிற்காக விஜய் வந்திருப்பதாக தெரிந்ததும் வீட்டுக்கு கூட போகாமல் அதே ரைஸ் மில்லுக்கு சைக்கிளில் சென்றேன்.
மதுரை கலெக்டர்: ஆர். மாதேஷ் இயக்கத்தில் மதுர படத்தில் மதுரை கலெக்டராக விஜய் மற்றும் அவருடன் சோனியா அகர்வால் இருவரும் மில் ஒன்றை சோதனை செய்யும் காட்சி அங்கே படமாக்கப்பட்டது. கில்லி படத்தை பார்த்து தியேட்டரில் விசில் அடித்தக் கூட்டம் நேரடியாக விஜய்யை பார்க்க அப்போதே அப்படி அலை மோதியது. முதன்முறையாக அப்போதுதான் விஜய்யை நேரில் பார்த்தேன். ஒரே நாளில் கில்லி படத்தையும் நடிகர் விஜய்யையும் பார்த்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், இன்னமும் அந்த நினைவுகள் அப்படியே நிறைந்திருக்கிறது. 2004ம் ஆண்டு வெளியான கில்லி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான மதுர படம் அந்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை.


Click it and Unblock the Notifications











