தமிழ் ஹீரோக்களை விளாசிய ஞானவேல்ராஜா: டோலிவுட்டுக்கு போயுடுவேன்னு எச்சரிக்கை
Recommended Video

சென்னை: அதிக சம்பளம் கேட்கும் தமிழ் ஹீரோக்கள் திருந்தாவிட்டால் நான் தெலுங்கு திரையுலகிற்கு சென்றுவிடுவேன் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.
அல்லு அர்ஜுன் நடித்துள்ள நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா தெலுங்கு படத்தின் தமிழ் பதிப்பான என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா விளம்பர நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கலந்து கொண்டு பேசினார். கோடிகளில் சம்பளம் வாங்கும் ஹீரோக்களை அவர் விளாசினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,

தெலுங்கு திரையுலகம்
ஸ்டிரைக் முடிந்து 50 நாட்கள் கழித்து அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. தெலுங்கு திரையுலகில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் நிறைய உள்ளது. இரண்டு படங்களில் நடித்த காமெடி ஆர்டிஸ்ட் எனக்கு ஒரு நாளைக்கு ரூ. 2 லட்சம் கொடுங்க, ரூ. 3 லட்சம் கொடுங்க என்று கேட்கிறார்.

நடிகர்கள்
10 பேரை வைத்து ஒரு பிரேமில் ஒரு படம் எடுக்க வேண்டுமானால் ஒரு தலைக்கு ரூ. 1 லட்சம் செலவாகிறது. நமக்கு ரூ. 1 லட்சம் கொடுப்பதில் என்ன குறையப் போகிறது என்று நினைக்கிறார்கள். 10 பேர் சேர்ந்தால் தான் படமாக மாறும். அந்த சூழ்நிலையை புரிந்து கொண்டு இன்டஸ்ரி நன்றாக இருந்தால் தான் நாம் நன்றாக இருக்க முடியும் என்ற எண்ணம் அனைத்து ஆர்டிஸ்டுகளுக்கும் வர வேண்டும்.

ஹீரோ
ஆந்திராவில் ரூ. 100 கோடி வியாபாரம் உள்ள ஒரு ஹீரோ ரூ.15 கோடி சம்பளம் வாங்குகிறார். அதனால் தயாரிப்பாளரால் பிரமாண்டமாக செலவு செய்து படத்தை எடுக்க முடிகிறது.

சம்பளம்
நம்ம ஊரில் ரூ.100 கோடி வியாபாரம் ஆகும் ஹீரோ கிட்டத்தட்ட ரூ. 50 கோடி சம்பளம் கேட்பார். அதில் ரூ. 10 கோடி அட்வான்ஸ் கேட்பார். அதே சமயம் ரூ. 15 கோடி சம்பளம் வாங்கும் தெலுங்கு ஹீரோ ரூ. 50 லட்சம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு நடிக்க வருவார். தெலுங்கு ஹீரோக்களும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே நல்ல புரிதல் உள்ளது.

ஆர்டிஸ்ட்
தெலுங்கு திரையுலகில் எந்த படம் எடுத்தாலும் வெற்றி பெறுகிறது, சுபிட்சமாக இருக்கிறது என்றால் அதற்கு ஆர்டிஸ்டுகள் தலைக்கனம் இல்லாமல் இருக்கிறார்கள், நியாயமாக நடந்து கொள்கிறார்கள். தமிழ் திரையுலகில் அப்படி இல்லை. ரொம்பவும் சுயநலமாக விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

கிளம்பிவிடுவேன்
எல்லாரும் வாங்கும் ஷெட்யூல் பேமென்ட்டை பெரிய தொகையாக வாங்கி தயாரிப்பாளரை கஷ்டப்பட வைக்காமல் புரிந்து கொண்டு நடந்தால் நம் திரையுலகமும் நன்றாக இருக்கும். இன்னும் ஓராண்டில் நிலைமை மாறாவிட்டால் நான் டாட்டா பை பை சொல்லிவிட்டு தெலுங்கு திரையுலகிற்கு சென்றுவிடுவேன். அங்கு ஏற்கனவே ஆபீஸ் வாங்கிவிட்டேன். 50 நாள் ஸ்டிரைக் வந்து பெரிய விழிப்புணர்வாக இருந்தது என்றார் ஞானவேல்ராஜா.


Click it and Unblock the Notifications











