TVK Maanadu: கண் அசைத்த விஜய்.. கச்சிதமாக வேலையை முடித்த பிரபலம்.. மாநாடு ஃபீவர் ஸ்டார்ட் ஆகிடுச்சு!
விக்கிரவாண்டி: நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது. கட்சி தொடங்கி முதல் மாநாடு என்பதால் இந்த மாநாட்டின் மீது பலருக்கும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. பல திரைப்பிரபலங்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை பலரும் மாநாடு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மாநாட்டுக்கு முன்னரே பல நடிகர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டு மாநாட்டுக்காக பணியாற்றி வருகின்றனர். மாநாடு குறித்த பல தகவல்கள் தினமும் வெளிவந்த வண்ணம் உள்ளது. மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை பிரபல இயக்குநர் வெளியிட்டுள்ளார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தனது ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தினை தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியாக மாற்றி அறிவித்தார். விஜய் தனது கட்சியின் பெயரை அற்வித்தபோது, தமிழக வெற்றி கழகம் என அறிவித்தார். கட்சிப் பெயரில் எழுத்துப் பிழை உள்ளது என பல தமிழ் அறிஞர்கள் கூறியதும், சில தினங்களில் கட்சியின் பெயரை தமிழக வெற்றிக் கழகம் என திருத்தி அறிவித்தார். விமர்சனங்களை உடனே ஏற்றுக் கொண்டதால் பலரும் பாராட்டினர்.

அதன் பின்னர் கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. அதில் இரண்டு யானைகளும் ஒரு வாகை மலரும் இடம் பெற்றது. கட்சிக் கொடியின் நிறம், கொடியில் உள்ள சின்னங்களான இரட்டை யானைகள், வாகை மலர் இடம் பெறக் காரணம் என்ன என்பது குறித்து மாநாட்டில் அறிவிக்கின்றேன் எனவும் தெரிவித்திருந்தார். ஆனால் பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் யானைச் சின்னம் என்பதால், விஜய் யானைச் சின்னத்தினை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளனர்.
மாநாடு: கடந்த மாதத்திலேயே மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு மிகவும் குறைவான நேரத்தின் காரணமாக கைவிடப்பட்டது எனவும், இதனால் மாநாடு நடப்பு மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதாக பேச்சுகள் அடிபட்டது. மாநாட்டுக்கான ஏற்பாட்டுப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் அறிவித்தார்.

ஏற்பாடுகள்: மாநாட்டு நடைபெறும் இடத்தில் தொண்டர்கள் அமர்ந்துள்ள பகுதியில் விஜய் நடந்து வர தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது. மழை பெய்து மாநாட்டு திடலுக்குள் மழை நீர் உள்ளே வராமல் இருக்க, தரைத்தளத்தள் சுமார் மூன்று அடிகள் வரை உயர்த்தப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. 500 சிசிடி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், 300 டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அடிப்படை வசதிகளான கழிப்பிட வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
வீடியோ: இப்படியான நிலையில் காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகியோருக்கு 70 அடி உயரத்தில் கட்-அவுட் வைக்கப்பட்டது. இதில் பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் நடுவில் விஜய் இருக்கும் வகையில், கட் -அவுட் அமைக்கப்பட்டது. இப்படியான நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு விஜய்யை வைத்து இயக்கிய கோட் படத்தின் படப்பிடிப்பின்போது, ரசிகர்கள் விஜய்யைப் பார்க்க வந்தபோது எடுத்த வீடியோக்களையும் விஜய்யின் கட்சி நிகழ்ச்சிகளின்போது எடுக்கப்பட்ட வீடியோக்களையும் இணைத்து ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
வெங்கட் பிரபு: இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வெங்கட் பிரபு, " அண்ணன் தளபதி விஜய் தொடங்கியுள்ள மிக நீண்ட பயணம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகள். நீங்கள் எப்போதும் எங்களுக்கு உத்வேகமாக இருந்துள்ளீர்கள். உங்களுக்கு எங்களிடமிருந்து சிறிய அன்பளிப்பு" என பதிவிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவிற்கு கோட் படத்தில் இடம்பெற்ற விசில் போடு பாடல் சேர்க்கப்பட்டுள்ளது. அந்தப் பாடலில் இடம் பெற்றுள்ள, " உன் பார்ட்டிக்குத்தான் எங்க வாக்கு" என்ற வரிகள் திரும்பத் திரும்ப வருவதால் விஜய் ரசிகர்கள் மத்தியில் இந்த வீடியோ வேகமாக பரவி வருகின்றது.


Click it and Unblock the Notifications











