Golden Globe Awards: இதுக்கு அவங்க தான் காரணம்...கோல்டன் குளோப் விருதை பெற்றதும் மேடையில் நெகிழ்ந்த கீரவாணி...
லாஸ் ஏஞ்சல்ஸ்: ராஜமெளலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கடந்தாண்டு மார்ச் 24ம் தேதி வெளியானது.
ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக வெளியான ஆர்.ஆர்.ஆர் பாக்ஸ் ஆபிஸில் 1200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.
இந்தப் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருதை வென்று அசத்தியுள்ளது.
கோல்டன் குளோப் விருதை மேடையேறி பெற்றுக்கொண்ட எம்.எம் கீரவாணி, உருக்கமாக பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர்
தெலுங்கு திரையுலகின் பிரம்மாண்டமான இயக்குநரான ராஜமெளலி, பாகுபலி திரைப்படம் மூலம் பான் இந்தியா பிரபலமானார். அவரது இயக்கத்தில் கடந்தாண்டு மார்ச் மாதம் ரிலீஸான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜய்தேவ் கன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் 1200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. தற்போது ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட சர்வதேச விருது விழாவிலும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பல பிரிவுகளில் போட்டியிட்டு வருகிறது.

கீரவாணிக்கு கோல்டன் குளோப் விருது
இந்திய சுதந்திரத்துக்காக போராடிய அல்லுரி சீதாராம ராஜூ, கொமாரம் பீம் இருவரும் நண்பர்களாக இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் உருவானது தான் இந்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம். ராஜமெளலியின் உறவினரும் தெலுங்கு முன்னணி இசையமைப்பாளருமான எம்.எம். கீர்வாணி இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், நாட்டு நாட்டு பாடலுக்காக கீரவாணிக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த விழாவில் கீரவாணிக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது. இதனை விழாவில் இருந்த ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் உற்சாகமாக கொண்டாடினர்.

மேடையில் உருகிய கீரவாணி
ஆங்கிலம் இல்லாத மொழி பிரிவில் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது நாட்டு நாட்டு பாடல். இதனையடுத்து மேடையேறிய கீரவாணி கோல்டன் குளோப் விருதை பெற்றுக்கொண்டு மிக உருக்கமாக பேசினார். இந்த விருதை வென்றதில் மிக்க மகிழ்ச்சி எனக் கூறிய கீரவாணி, இதனை தனது மனைவி ஸ்ரீவள்ளியுடன் பகிர்ந்துகொள்கிறேன் என்றார். மேலும், இந்தப் பாடலை சிறப்பாக உருவாக்கிய இயக்குநர் ராஜமெளலிக்கும் தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

நெகிழ்ச்சியுடன் நன்றி
தனது மனைவி ஸ்ரீவள்ளி, இயக்குநர் ராஜமெளலியை தொடர்ந்து ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் அனைவருக்கும் கீரவாணி நன்றி கூறினார். நாட்டு நாட்டு பாடலுக்கு அனிமேஷன் செய்த பிரேம் ரச்சித், ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், இசையமைப்பில் உதவிய தனது மகன் கால பைரவா, பாடலாசிரியர் சந்திரபோஸ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இறுதியாக மீண்டும் தனது மனைவி ஸ்ரீவள்ளியின் பெயரை ரொமாண்டிக்கலாக பேசிவிட்டு மேடையில் இருந்து இறங்கிச் சென்றார். கீரவாணியின் இந்த க்யூட் நன்றி, இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











