தங்க தட்டில் சாப்பாடு, வெள்ளை குதிரை சவாரி..கொலை வழக்கு, சிறைவாசம்..முதல் சூப்பர் ஸ்டார் வீழ்ந்த கதை
சென்னை: பட்டு ஜிப்பா, அடர்ந்த கிராப்,வெள்ளை குதிரையில் அவரை பார்த்தபோது அந்த தேஜஸை பார்த்து பிரமித்து போனேன், இப்படி எம்ஜிஆர் ஒருவரை பார்த்து வியந்து சொன்னார்.
தங்கத்தட்டில் தான் எப்போதும் சாப்பிடுவார், விலை உயர்ந்த வெள்ளை நிற அரபு குதிரையில் பயணிப்பார், தொட்டது துலங்கியது. அவர்தான் தமிழ் திரையுலகின் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டார்.
ஆனால் ஒரு கட்டத்தில் எல்லாம் தலைகீழாகி போனது. கொலை வழக்கு, சிறைவாசம், சொத்து போனது, பட வாய்ப்பு போய் நடுத்தெருவுக்கு வந்து மடிந்தே போனார்.

திரையுலகம் தொடங்கிய 1930 கள்
தமிழ் திரையுலகின் ஆரம்பம் 1930 களிலேயே தொடங்கி விட்டது. 1931 ஆம் ஆண்டு முதல் தமிழ் படம் காளிதாஸ் வெளிவந்தது. நாடகக்கலை பெரிதாக இருந்த காலத்திலேயே விஞ்ஞான வளர்ச்சியின் நவீன வரவை நோக்கி இந்தியாவும், தமிழகமும் (அப்போது ஒருங்கிணைந்த சென்னை சென்னை மாகாணம்) சினிமாவை நோக்கி நகர ஆரம்பித்ததது. தனித்தனி நாடகக்குழுக்களில் இருந்த கலைஞர்களும் சினிமாவில் தலைக்காட்டியதால் பிரபலமானார்கள். பாடலுடன், சண்டைக்காட்சியில் நடிப்பது, குதிரையேற்றம், அழகான தோற்றம் கொண்டவர்கள் கதாநாயகனாகவும் மற்றவர்கள் துணை பாத்திரங்களிலும் கால்பதிக்க தொடங்கினர்.

தென் இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர்
அப்போதுதான் அவர் திரையுலகில் கால் பதித்தார். தமிழகம் முழுவதும் கர்நாடக இசையால் புகழ்பெற்று பாகவதர் என்கிற பட்டப்பெயரே நிரந்தர பெயராக மாறிப்போன தியாகராஜன் என்கிற தியாகராஜ பாகவதர், நாடகம் மூலமும் பிரபலம். நடிப்பு, இசையால் ஏற்கெனவே பிரபலமடைந்திருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர் திரையுலகில் கால் பதித்தது 1934 ஆம் ஆண்டு. பவளக்கொடி என்கிற நாடகம் திரைப்படமாக நாடகத்தில் நடித்து புகழ்பெற்றிருந்த பாகவதரே படத்தின் கதாநாயகனாகவும் நடித்தார். படத்தில் 55 பாடல்கள். அதில் பாகவதர் மட்டுமே 22 பாடல்கள் பாடியிருப்பார். இந்தப்படம் வெளியான கொட்டகைகளில் வரலாறு காணாத அளவுக்கு மக்கள் வெள்ளம்.

சூப்பர் ஸ்டார் எம்.கே.டி நடித்ததே 14 படங்கள்..
தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதரின் குரல் வளத்துக்கு முன் யாரும் நின்றதே இல்லை. உச்சபட்ச சுதியான 4.5 கட்டையில் பாடுவதில் திறன் பெற்றவராம். இவர் நடித்ததே மொத்தம் 14 படங்கள் தான் அதில் 10 படங்கள் வரை சூப்பர் டூப்பர் ஹிட். முதல் படமே 9 மாதம் ஓடியது. ஹரிதாஸ் படம் 3 தீபாவளிகளை கடந்து ஓடியது. இது ஒரு உலக சாதனை எனலாம். பாகவதர் கிராப் அந்த காலத்தில் மிகப்பிரபலம். நாடகக்கலைஞர்கள் பெரும்பாலும் அவரைப் பின்பற்றி அதே போல் வைத்திருந்தனர். அந்த காலத்து இளைஞர்களிடையே பாகவதர் கிராப் அவ்வளவு பிரபலம்.

எம்ஜிஆரே வியந்து பார்த்த எம்.கே.டி.பாகவதர்
எம்ஜிஆர் 19 வயதில் 1936 ஆம் ஆண்டு சிறிய போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க வந்தபோது தியாகராஜ பாகவதர் சூப்பர் ஸ்டார். அவரது தேஜசும், அந்த கிராப்பும், வெள்ளை குதிரையில் அவர் வரும் கம்பீரமும் என்னை பிரமிக்க வைத்தது என்று எம்ஜிஆர் எழுதியிருப்பார். எம்ஜிஆர் பாகவதர் படத்தில் சாதாரண காவலாளியாக நடித்திருப்பார். பாகவதர் வாழ்ந்த காலத்தில் இசையுலகிலும், திரைத்துறையிலும், அரசாங்கத்தாலும், தமிழக மக்களாலும், ஜமீந்தார்கள், செல்வந்தர்களாலும் மதிக்கப்பட்ட கலைஞராக வாழ்ந்தார். தங்கத்தட்டில் சாப்பிட்டு வெள்ளிக்கிண்ணத்தில் கைகழுவியவர் பாகவதர்.

புகழேணியின் உச்சியில் இருந்தபோது நடந்த அதிர்ச்சி சம்பவம்
எம்.கே.டி.பாகவதரின் படம் அவரது திரைப்பட புகழ் அசைக்க முடியாததாக இருந்தது. பாகவதர் படம் என்றாலே மாதக்கணக்கில் ஓடி வசூலை குவிப்பதுதான் வழக்கம். இப்படி இருக்கும்போதே அவரது வாழ்க்கையில் விழுந்தது பேரிடி. பாகவதர், கலைவாணர் உள்ளிட்ட பிரபலங்கள் குறித்து அவதூறாக எழுதிவந்த பத்திரிக்கையாளர் லட்சுமி காந்தன் கொலை வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டனர். இறுதியில் இருவருக்கும் சிறைவாசம் கிடைத்தது. வழக்கு செலவுக்கு சொத்து கரைந்தது. இந்தியாவின் உச்ச நீதிமன்றம் லண்டனில் இருந்தது. அங்கு வாதாடி இருவருக்கும் விடுதலை கிடைத்தது.

சிறைவாசத்துக்குப்பின் புகழ் மங்கி மரணத்தை தழுவிய பாகவதர்
சிறையிலிருந்து விடுதலையானவுடன் எம்.கே.டி.பாகவதர் உடலாலும், உள்ளத்தாலும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார். முன்பிருந்த உற்சாகம் இல்லை. சினிமா துறையிலும் எம்ஜிஆர், ஜெமினி, கே.ஆர்.ராமசாமி, டி.ஆர்.மஹாலிங்கம், என்.டி.ஆர், நாகேஸ்வரராவ் போன்றோர் வந்துவிட்டனர். அதனால் பாகவதரின் சினிமா வாழ்க்கை சற்று சறுக்கலில் ஆரம்பித்தது. சிறை வாழ்க்கைக்குப்பின் அவர் நடித்த ராஜமுக்திக்குப்பின் 4 ஆண்டுகள் கழித்து 1952 ஆம் ஆண்டு அமரகவி, சியாமளா என இரண்டு படங்கள் நடித்தார். அந்த நேரத்தில் சிவாஜி கணேசனின் பராசக்தி வெளியாகி சக்கைப்போடு போட்டது. பாகவதர் படம் சரியாக போகவில்லை.

கிராமத்தையே அரசுக்கு திருப்பி தந்தவர் பணமில்லாமல் பொதுமருத்துவமனையில் மரணம்
எம்.கே.தியாகராஜ பாகவதர் புகழின் உச்சியில் இருந்த காலத்தில் வெள்ளை அரசாங்கத்துக்காக ஒரு நாடகம் நடித்து கொடுத்தாராம். அதில் அபரிதமான வசூல் வர அன்றைக்கே ஒரு கிராமத்தையும், ஒரு லட்ச ரூபாய் பணத்தையும் அரசு வழங்க, கிராமத்தை அவர்களிடமே திரும்ப தந்த பாகவதர் ஒரு லட்ச ரூபாயை சுதந்திர போராட்டத்திற்கு நிதியாக கொடுத்தாராம். ( அப்போது ஒரு பவுன் தங்க நகை 10 ரூபாய் கூட இல்லை, ஒரு லட்ச ரூபாயில் 80 டன் தங்கம் வாங்கலாம், வடபழனி முழுவதையும் வாங்கி போட்டிருக்கலாம்) அப்படிப்பட்ட பாகவதர் 1959 ஆம் ஆண்டு படம் நடிக்கும்போதே அவர் உடல் நலிவுற்ற நிலையில் படமும் ஓடாமல் உடல் நலம் பாதிக்கப்பட்டு 1959 ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று அரசு பொதுமருத்துவமனையில் காலமானார். அப்போது அவரது வயது 49 மட்டுமே.


Click it and Unblock the Notifications











