"எனக்கு பிடிக்கல... நான் பேச மாட்டேன்"... அடம்பிடித்த ராதாரவி... சமாதானம் செய்த யோகி பாபு!
கொரில்லா படத்தில் தனக்கு பிடிக்காத வசனத்தை பேசி நடித்ததாக நடிகர் ராதாரவி கூறினார் .
Recommended Video
சென்னை: தனக்கு பிடிக்காத வசனத்தை யோகி பாபு பேச வைத்ததாக நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கொரில்லா. இந்த படத்தில் கொரில்லா குரங்கு ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
கொரில்லா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, கட்டாயத்தின் பேரில் தனக்கு பிடிக்காத வசனத்தை படத்தில் பேசியிருப்பதாக தெரிவித்தார்.

ஜீவாவின் தந்தை
இதுகுறித்து அவர் பேசியதாவது, "என்னை அன்பாக அழைத்த இயக்குநர் சாண்டி அவர்களுக்கும் கதாநாயகன் ஜீவா அவர்களுக்கும் நன்றி. அவர் அப்பா கொடுத்த பணத்தில் தான் நாங்கள் வாழ்ந்திருக்கோம். சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரித்த பல படங்களில் நான் நடித்துள்ளேன்.

கொரில்லா பாடல்கள்
இந்த படத்தின் பாடல்கள் நன்றாக இருக்கிறது. வித்தியாசமாக பாடல் இசைப்பது தான் இப்போது பேஷன். புரிகிறதா இல்லையா என்பது வேறு விஷயம். இப்போது போடப்பட்ட பாடல் நன்றாக இருந்தது. இசை அமைப்பாளரைப் பாராட்டுகிறேன்.

போட்டியே கிடையாது
ஜீவாவிற்கு யாரும் போட்டியே கிடையாது. அது அவரது பெரியபலம். அவர் அற்புதமான நடிகர். அவரை முதல் படத்தில் இருந்தே பார்த்து வருகிறேன். வித்தியாச வித்தியாசமான கதைகளில் நடித்து வருகிறார்.

கொரில்லா குரங்கு
மனிதர்களை வைத்தே படமெடுப்பது பெரிய கஷ்டம். இவர்கள் மிருகத்தை வைத்து மிக அழகாக எடுத்திருக்கிறார்கள். நான் சில காட்சிகளைப் பார்த்தேன் நன்றாக இருக்கிறது. எனக்கும் ஒரு நல்ல கேரக்டர் தந்திருக்கிறார்கள்.

பிடிக்காத வசனம்
படத்தில் ஒரு வசனம் எனக்குப் பிடிக்காமல் பேசி இருக்கிறேன். ஒரு காட்சியில் என்னிடம் மாட்டிக்கொள்ளும் கொள்ளைக்காரர்கள் அனைவரும் கொரில்லா முகமூடியை கழற்றிவிடுவார்கள். நான் யோகி பாபுவை பார்த்து, நீ மட்டும் ஏன்டா முகமூடியை கழற்றவில்லை என கேட்பேன். அப்படி ஒருவரை பற்றி பேசுவது எனக்கு பிடிக்காத விஷயம். நான் பேசமாட்டேன் என அடம்பிடித்தேன். ஆனால் யோகி பாபு தான் என்னை சமாதானம் செய்து பேச வைத்தார்.

யோகி பாபு
தனது நெகட்டிவ் விஷயங்களை பாஸிட்டிவாக மாற்றிக்கொள்பவர் யோகி பாபு. இந்தப்படத்தில் அவரையும் மிகச்சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார்கள். யோகி பாபு இருந்தால் படம் பிஸினஸ் ஆகிவிடும் எனும் செண்டிமெண்ட் இருக்கிறது. தர்ம பிரபு படத்தில் யோகி பாபுவுக்கு அப்பாவாக நடித்திருக்கிறேன். நான் சுத்த தமிழில் பேசுவேன். ஆனால் அவர் சென்னை தமிழில் பேசுவார். அது தான் அவரது ஸ்டைல்", என ராதாரவி கூறினார்.


Click it and Unblock the Notifications











