ஆணவக்கொலை வன்முறை அல்ல.. இது பெற்றோரின் அக்கறை.. ரஞ்சித்தின் சர்ச்சை பேச்சு!
சென்னை: நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்திருக்கும் கவுண்டம்பாளையம் கடந்த மாதம் 5ந் தேதி வெளியாக இருந்த நிலையில், சில பிரச்சனைகள் காரணமாக படம் தள்ளிவைக்கப்பட்டு, நேற்று தியேட்டரில் வெளியானது. சேலத்தில் நேற்று படம் பார்த்த ரஞ்சித் ஆணவக்கொலை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் ரஞ்சித் முற்றிலும் புது முகத்தை வைத்து கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் நாடக காதல் குறித்தும், அதனால் குடும்பம் மற்றும் பெற்றோர் சந்திக்கும் பிரச்சனை குறித்து சொல்லும் படமாக இப்படம் எடுக்கப்பட்டு கடந்த மாதம் வெளியாக இருந்தது. ஆனால், இந்த படத்தை திரையிட்டால் திரையரங்குகள் முன்பு போராட்டம் நடத்துவோம், திரையரங்கை சேதப்படுத்துவோம் என்றும் ஒரு பிரிவினர் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து படம் வெளியாகவில்லை. இதையடுத்து படத்தை திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து நேற்று படம் வெளியானது.

ரஞ்சித் பேட்டி: இதையடுத்து, சேலத்தில் உள்ள திரையரங்கில் நடிகர் ரஞ்சித் ரசிகர்களுடன் கவுண்டம்பாளையம் படத்தை பார்த்துவிட்டு செய்தியார்களிடம் பேசினார். அப்போது, படத்தை பார்க்காமலே சிலர் இது சாதி படம் என்று விமர்சிக்கிறார்கள். முதலில் படத்தை வந்து பார்த்துவிட்டு, அதன் பிறகு இது நல்லப்படமான இல்லையா என்பதை மக்கள் சொல்லட்டும், மக்களுக்காகத்தான் இந்த படத்தை எடுத்து இருக்கிறேன் என்னை, ஒரு டாப்பிக்கில் அடைத்துவைத்து, என்னை பற்றி எதாவது வன்மத்தை பரப்பி, மற்ற சமூகத்தினரிடம் இருந்து என்னை புறக்கணிக்க பார்க்கிறார்கள் என்றார்.
வன்முறை அல்ல: இதைத்தொடர்ந்து, செய்தியாளர் ஆணவக்கொலை குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ரஞ்சித், ஆணவக்கொலை என்பது உணர்ச்சி வசப்படுவதுதான். இதைத்தான் இந்த படத்தில் நான் தீர்வாக சொல்லி இருக்கிறேன். குழந்தைகள் காதலித்து அதில் பிரச்சனைகளை சந்திக்கும் போது, அதன் வலி பெற்றோருக்குத்தான் தெரியும். சாதாரணமாக யாராவது பைக்கை திருடிக்கொண்டு போய்விட்டால், உடனே அவர்களை தேடிப்பிடித்து அடிக்கிறோம்.
சர்ச்சை பேச்சு: அப்படி இருக்கும் போது பெற்றோரின் வாழ்க்கையே அவர்களின் குழந்தைதான். அவர்களின் வாழ்க்கைக்கு ஏதாவது பாதிப்பு வரும் போது கோவத்தை வெளிப்படுத்துகிறார்கள். அது பெற்றோரின் அக்கறையால் தான் நடக்கிறது. அது வன்முறை அல்ல, அது கலவரம் அல்ல. நல்லதோ, கேட்டதோ அக்கறையின் காரணமாக நடக்கிறது. இதில் யாரை குற்றம் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை என பேசி உள்ளார். ஆணவக்கொலை சரி என்பது போல, ரஞ்சித் பேசி உள்ளது சோஷியல் மீடியாவில் பெரும் பேசுபொருளாகி உள்ளது. இணையவாசிகள் பலரும் இவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











