'நட்சத்திர மழை ' படத்தைத் தொடங்கி வைத்தார் ஆளுநர் ரோசையா
'காமராசு', 'அய்யா வழி', 'நதிகள் நனைவதில்லை' ஆகியப் படங்களை இயக்கி, தயாரித்துள்ள நாஞ்சில் பி.சி.அன்பழகன், இயக்கி தயாரிக்கும் நான்காவது படம் 'நட்சத்திர மழை'.
உடல் உறுப்புகள் தானம் பற்றி 'காமராசு' படத்தில் சொன்ன, நாஞ்சில் பி.சி.அன்பழகன், 'அய்யா வழி' படத்தில் ஆன்மீகத்தைச் சென்னார். விரைவில் வெளியாக உள்ள 'நதிகள் நனைவதில்லை'' படத்தில் காதலைப் பற்றியும், பிள்ளைகளை பெற்றோர்கள் எப்படி அரவணைக்க வேண்டும், என்பதை சொல்லியிருக்கும் இவர், தற்போது தனது நான்காவது படமான 'நட்சத்திர மழை' மூலம், "குணங்களை வெறுத்தாலும் மனிதனை - மனிதன் நேசிக்க வேண்டும்," என்கிற கருத்துக்கு திரை வடிவம் கொடுத்திருக்கிறார்.

ரோசய்யா
இப்படத்தின் தொடக்க விழா, பூஜையுடன் செப்டம்பர் 21ஆம் தேதி, காலை சென்னை தியாகராயா நகரில் உள்ள சர்.பி.டி. தியாகராயர் ஹாலில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ரோசையா சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். மேலும், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கே.ஆர், பின்னணி பாடகர் யேசுதாஸ், பின்னணி பாடகி வாணி ஜெயராம், சமூக சேவகர் சிவகுமார், நடிகர்கள் குண்டு கல்யாணம், அனு மோகன், நடிகை ரிஷா, தயாரிப்பாளர் கலைப்புலி ஜி.சேகரன் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.
ஆளுநர் ரோசையா, கேமராவை ஆன் செய்ய, தயாரிப்பாளர் கே.ஆர், கிளாப் போடு அடிக்க, ரிஷா நடிப்பில் படத்தின் முதல் காட்சி படமாக்கப்பட்டது.

யேசுதாஸ்
நிகழ்ச்சியில் பேசிய யேசுதாஸ், "இயக்குனர் நாஞ்சில் பி.சி. அன்பழகன், நல்ல பண்பு கொண்டவர். அவரிடம் பேசினாலே போதும், அனைவரையும் கவர்ந்து விடுவார். அவருடைய நல்ல குணங்களுக்காகவும், பன்புக்காகவும் இந்த விழாவில் கலந்துக்கொண்டேன், நட்சத்திர மழை படம் பெரிய அளவில் வெற்றி அடைய எனது வாழ்துகள்," என்றார்.

வாணி ஜெயராம்
வாணி ஜெயராம் பேசுகையில், "நாஞ்சில் பி.சி.அன்பழகன், எனக்கு சகோதரரைப் போன்றவர். இசை ஞானம் உள்ளவர். அவருக்கு இந்த படத்தின் மூலம் கடவுள் மிகப் பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும்." என்றார்.

கே ஆர்
தயாரிப்பாளர் கே.ஆர் பேசுகையில், "தமிழகத்திற்கு ஆளுனராக, பொறுப்பேற்று ரோசையா அவர்கள் கலந்துக்கொண்ட முதல் சினிமா நிகழ்ச்சி 'நடத்திர மழை' பட பூஜை தான். இதுவே இப்படத்திற்கு கிடைத்த ஒரு சிறப்பு.
ஏற்கனவே இரண்டு படங்களை இயக்கி தயாரித்துள்ள நாஞ்சில் பி.சி.அன்பழகன், மூன்றாவதாக இயக்கி தயாரித்துள்ள 'நதிகள் நனைவதில்லை' படம் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. உடனே நான்காவது படத்தை ஆரம்பித்துள்ள அவருக்கு எனது பாராட்டுக்கள்.
ஒரு படம் வெளியாக இருக்கும் போதே அடுத்த படத்தை தயாரிக்கும் பணியில் இறங்கியவுடன், சினிமா நல்ல நிலையில் இருக்கிறது என்று நினைப்பார்கள். ஆனால், தற்போது தமிழ் சினிமா நிலை சரியில்லை. இந்த நேரத்திலும் இப்படி தொடர்ந்து அடுத்தடுத்து படங்களைத் தயாரிக்கும் நாஞ்சில் பி.சி.அப்பழகனின் துணிச்சல் பாராட்டுக்குரியது," என்றார்.

வாழ்த்து
ஆளுனர் ரோசைய்யா பேசுகையில், "பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமின்றி, சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை தனது படங்களின் மூலம் தொடர்ந்து சொல்லி வரும் இயக்குனரும், தயாரிப்பாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகனுக்கு எனது பாராட்டுக்கள். இந்த நாளில் தொடங்கியுள்ள நாஞ்சில் பி.சி.அன்பழகனின், இந்த நட்சத்திர மழை படம் பெரிய வெற்றியடை வேண்டும்." என்றார்.

பிசி அன்பழகன்
இயக்குனரும் தயாரிப்பாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன், நிகழ்ச்சியில் நன்றி கூறிப் பேசுகையில், "இந்த நிகழ்ச்சிக்கு வந்து என்னை கவுரப்படுத்திய ஆளுநர் ரோசையா, அண்ணாச்சி யேசுதாஸ், பாடகி வாணி ஜெயராம் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களைப் பற்றி சொல்வதென்றால் பல மணி நேரங்கள் பேசிக்கொண்டே போகலாம், நேரம் இன்மையால் இந்த நன்றியோடு முடித்துக் கொள்கிறேன்.

கன்னியாகுமரியில்
அண்ணாச்சி யேசுதாஸ், வாணி ஜெயராம் ஆகியோருக்கு தொலைபேசி மூலம் தான் அழைப்பு விடுத்தேன், உடனே வருகிறேன் என்று கூறி, வந்து விட்டார்கள்.
மருத்துவத்தை சேவையாக்கி, சமூக அக்கறையோடு வாழ்வை கடந்து செல்லும் இளைஞனை, காதல் மழையில் நனைந்த மயிலிறாகால் வருடி கொடுக்கும், உணர்வுகளுக்கு உருவங்கள் தரும் படைப்பே 'நட்சத்திர மழை'.
புது வருடத்தில் , கடவுளின் கைரேகையான கன்னியாகுமரியில் 'நட்சத்திர மழை' படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது," என்றார்.
வைகுண்டா சினி பிலிம்ஸ் சார்பில், நாஞ்சில் பி.சி.அன்பழகன், இப்படத்தை தயாரித்து இயக்குவதுடன், இப்படத்திற்கான ஏழு பாடல்களையும் அவரே எழுதுகிறார். ஆண்டனி என்பவர் இசையமைக்கிறார்.


Click it and Unblock the Notifications











