காலா ரஜினி அப்பாவுக்கு பெருமை சேர்க்கிறார்…! - கூடுவாலா சேட்டின் மகள் பெருமிதம்
மும்பை: ரஜினிகாந்த் - ரஞ்சித் காம்பினேஷனில் உருவாகி வரும் காலா, மும்பை கூடுவாலா சேட்டின் கதை என்ற தகவலை முதன் முதலில் ஒன் இந்தியாவில் வெளியிட்டு இருந்தோம்.
நெல்லையைச் சார்ந்த ஒருவர் மும்பை தாராவியில் தாதா ஆன கதை என்று ரஞ்சித் சொன்ன அடுத்த நாளே நமது தளத்தில் இந்த செய்தி வெளியாகியிருந்தது.

திரவியம் நாடார்
பிரிக்கப்படாத நெல்லை மாவட்டத்திலிருந்து சிறுவயதிலேயே மும்பை சென்ற திரவியம் நாடார், கூடுவாலா சேட் என 'டான்' ஆக உருவெடுத்து அங்கே தமிழர்களுக்கு பாதுகாவலராக விளங்கினார். தாராவி குடியிருப்பு பகுதிகளை உருவாக்கி தமிழ்க் குடும்பங்கள் அங்கே வசிப்பதற்கு அரணாக நின்றவர் கூடுவாலா சேட்.

கூடுவாலா சேட் மகள்
கூடுவாலா சேட்டின் மகள் , காலா படம் பற்றி பெருமை கொள்வதாக கூறியுள்ளார். ஒன் இந்தியா செய்தியைத் தொடர்ந்து, இணையத்தளம் ஒன்று கூடுவாலா சேட்டின் மகள் விஜயலட்சுமியிடம் பேட்டி கண்டுள்ளார்கள்.

வரதராஜ முதலியார், ஹாஜி மஸ்தான்...
விஜயலட்சுமி கூறும் போது, வரதராஜ முதலியாரும், ஹாஜி மஸ்தானும் நெல்லையைச் சார்ந்தவர்கள் இல்லை. தாராவியில் நெல்லையைச் சார்ந்தவர் என்றால் அது அப்பா மட்டுமே. அவர் அங்குள்ள நெல்லை மற்றும் சேலத்து தமிழர்களுக்கு பாதுகாவலராக இருந்தார்.
மூன்று பேரும் நல்ல நண்பர்கள், மூவரும் தமிழர்களுக்கு நன்மை செய்வது என்பதில் உறுதியாக இருந்தார்கள். ஆனால் அப்பா கடத்தல் தொழிலுக்கோ அல்லது சட்டத்தை மீறியோ எதுவும் செய்ததில்லை.

பெண்களுக்குப் பாதுகாப்பாக
சேலத்துப் பெண்கள் சாராயத் தொழிலில் ஈடுபட்டு இருந்தார்கள். அந்த நாட்களில் அவர்களின் பிழைப்புக்கு அதைவிட்டால் விபச்சாரம்தான் மாற்றாக இருந்தது. சட்டத்திற்கு புறம்பானது என்றாலும். விபச்சாரத்திற்கு செல்வதை விட சாராயத் தொழில் பரவாயில்லை என்று அந்த பெண்களுக்கு அரண் போல் நின்று பாதுகாத்தார்.
க்ளாக்ஸோ நிறுவனத்தில் முதலில் வேலை பார்த்தவர், அங்கு மேலாளரிடம் ஏற்பட்ட பிரச்சனையால் வேலைவிட்டு வந்தார். அதன் பிறகு மக்களோடு மக்களாக இருந்து அவர்களுக்கு உதவி செய்வதையே பிரதானமாக எடுத்துக் கொண்டார்.

38 வயதில் திருமணம்
அப்பாவின் குடும்பத்தில் ஆண் வாரிசு இல்லை என்பதால், ஆச்சி வற்புறுத்தலில் 38 வயதிற்குப் பிறகுதான் திருமணம் செய்தார். சிறு வயதில் அப்பா காலையில் முழிப்பதை எதிர்ப்பார்த்து நூற்றுக்கணக்கானவர்கள் வீட்டிற்கு வெளியே காத்திருந்ததைப் பார்த்திருக்கிறேன்.
கணவன் மனைவி தகராறு, தொழில் பிரச்சனைகள், வாடகைப் பிரச்சனை என தமிழர்கள் அனைவரும் அப்பாவிடம் தான் முறையிடுவார்கள். அவர் சொன்ன தீர்ப்புக்கு கட்டுப்படுவார்கள்.

வழக்குப் போட மாட்டோம்... மகிழ்ச்சியாக உள்ளது
ஹாஜி மஸ்தான் மகன் சொன்னைது போல் நீங்கள் வழக்கு ஏதும் போடுவீர்களா என்று கேட்டதிற்கு, அப்பா 2003 ஆம் ஆண்டே இறந்து விட்டார். பதினான்கு ஆண்டுகள் கழித்து அவருடைய கதை திரைப்படமாக வருகிறது என்றாம் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.
அப்பா தவறான வழியில் எதுவும் செய்யவில்லை, அதனால் படத்தில் எதுவும் அவரைப்பற்றி தவறாக வர வாய்ப்பில்லை. மேலும் ரஜினி சார் அந்த பாத்திரத்தை ஏற்று நடிப்பது போல் அப்பாவுக்கு பெருமை எதுவுமே இல்லை.
நிச்சயம் நாங்கள் வழக்கெல்லாம் தொடரப்போவதில்லை. படம் வெற்றி பெற வாழ்த்துகிறோம் என்று கூறியுள்ளார்.
கூடுவாலா சேட்டிற்கு விஜயலட்சுமி தவிர மூன்று மகன்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











