Guntur Kaaram Box Office: மகேஷ் பாபு ரிட்டர்ன்.. அசரடிக்கும் குண்டூர் காரம் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
சென்னை: தமிழில் பொங்கல் ஸ்பெஷலாக அயலான், கேப்டன் மில்லர் படங்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், தெலுங்கில் டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் குண்டூர் காரம் திரைப்படம் வெளியாகியுள்ளது. டோலிவுட் ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் குண்டூர் காரம் பாக்ஸ் ஆபிஸ் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன.
குண்டூர் காரம் பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு: தெலுங்கு ரசிகர்களுக்கு இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் திரைப்படம் வெளியாகியுள்ளது. விரைவில் ராஜமெளலி இயக்கத்தில் நடிக்கவுள்ள மகேஷ் பாபு, அதற்கு முன்னதாக ஒரு கமர்சியல் ஹிட் கொடுக்க முடிவெடுத்துவிட்டாரோ என்னவோ.? இன்று வெளியான குண்டூர் காரம், அப்படியொரு மாஸ் கமர்சியல் சினிமாவாக வெளியாகியுள்ளது.

த்ரி விக்ரம் இயக்கியுள்ள குண்டூர் காரம் படத்தில் மகேஷ் பாபுவுடன் மீனாட்சி செளத்ரி, ஸ்ரீ லீலா, பிரகாஷ்ராஜ், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்தாண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான விஜய்யின் வாரிசு படத்தைப் போல, பக்கா ஃபேமிலி ஜானரில் உருவாகியுள்ளது குண்டூர் காரம்.
கலேஜா, S/O சத்தியமூர்த்தி, அல வைகுந்தபுரமுலு படங்கள் மூலம் கவனம் ஈர்த்த த்ரி விக்ரம், இந்தமுறை மகேஷ் பாபுவுடன் இணைந்து ட்ரீட் கொடுத்துள்ளார். தெலுங்கு படங்கள் என்றாலே ஃபேமிலி செண்டிமெண்டல், ஆக்ஷன், கலர்ஃபுல்லான நான்கு பாடல்கள், கொஞ்சம் மாஸ், பக்கா க்ளாஸ் என உருவாகுவது தான் வழக்கமாக உள்ளது. அவை எதுவும் மாறாமல் அதே ஜானரில் கலவையாக உருவாகியுள்ளது குண்டூர் காரம்.
முதல் நாள் முதல் ஷோவில் இருந்தே குண்டூர் காரம் படம் பார்க்க திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் குண்டூர் காரம் ஃபீவர் அதிகமாக காணப்படுகிறது. இதனால் இந்தப் படத்தின் வசூல் தாறுமாறாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி குண்டூர் காரம் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் 50 கோடி ரூபாய்க்கும் அதிகம் இருக்கும் என சொல்லப்படுகிறது.
மேலும், குண்டூர் காரம் உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 300 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என டோலிவுட் பாக்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடைசியாக மகேஷ் பாபு நடிப்பில் வெளியான சர்க்காரு வாரிபட்டா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால், குண்டூர் காரம் அதற்கும் சேர்த்து வசூலித்து கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மகேஷ் பாபு - ராஜமெளலி இணையும் படத்தின் ஷூட்டிங் இந்தாண்டு தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயிரம் கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள SSMB 29, மகேஷ் பாபு கேரியரில் தரமான சம்பவமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications











