இதுக்கெல்லாமா வரி விதிப்பாங்க? அந்த நோட்டீஸுக்கு தடை விதிக்கணும்..இசை அமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் வழக்கு
சென்னை: பாடல்களுக்கான நிரந்தர காப்புரிமை வழங்கியதற்காக, வரி செலுத்தும்படி ஜிஎஸ்டி இணை இயக்குனர் அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதிக்கக் கோரி ஜி.வி.பிரகாஷ்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்
பிரபல இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். இவர் வெயில், மதராசபட்டினம், ஆடுகளம், மயக்கம் என்ன, அசுரன் உட்பட பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
இவர் இப்போது ஹீரோவாகவும் நடித்துவருகிறார். டார்லி, த்ரிஷா இல்லனா நயன்தாரா, நாச்சியார் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

ஆயிரம் ஜென்மங்கள்
இப்போது வசந்தபாலன் இயக்கியுள்ள ஜெயில், எழிலின் ஆயிரம் ஜென்மங்கள், ஐங்கரன், அடங்காதே ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன. இவர், தனது படைப்புகளின் காப்புரிமையை நிரந்தரமாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கியுள்ளார்.

இணை இயக்குனர் நோட்டீஸ்
அப்படி வழங்கினால் சம்மந்தப்பட்ட இசையமைப்பாளர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் படைப்புகளின் காப்புரிமையை நிரந்தரமாக, படத் தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதற்காக, ஒரு கோடியே 84 லட்சம் ரூபாயை சேவை வரியாக செலுத்த வேண்டும் என, ஜி.எஸ்.டி., இணை இயக்குனர் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

வழக்குத் தொடர்ந்தார்
இதை எதிர்த்து அவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் 'காப்புரிமையை, தயாரிப்பாளா்களுக்கு வழங்கிய பின், அந்த காப்புரிமைக்கான உரிமையாளா்கள் தயாரிப்பாளா்கள்தான். அதனால் இசையமைப்பாளர் ஆன என்னிடம் ஜிஎஸ்டி வரிகட்டக் கோருவது முரணாக இருக்கிறது. எனவே இதுதொடா்பாக ஜிஎஸ்டி இணை இயக்குநா் எனக்கு அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதிக்க வேண்டும்.

ரத்து செய்ய வேண்டும்
அதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு ஜிஎஸ்டி துறைக்கு உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை ஒத்தி வைத்தார். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் இதே போல மனுதாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











