உண்மையாக இருக்க வேண்டுமென்று நினைத்தேன்.. என்ன செய்வது?.. ஜிவி பிரகாஷ் ஓபன் டாக்
சென்னை: ஜிவி பிரகாஷ் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர். சூரரைப் போற்று படத்துக்காக தேசிய விருதினையும் அவர் வென்றிருக்கிறார். இதற்கிடையே நடிகராகவும் கலக்கிவரும் அவர்; அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் மென்ட்டல் மனதில் என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும் காதலித்து திருமணம் செய்துகொண்ட சைந்தவியையும் அவர் பிரிந்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க அவர் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
ஜிவி பிரகாஷ் இசைக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அவர்; அந்தப் படத்தின் பாடல்களையும், பின்னணி இசையையும் மிகச்சிறப்பாகவே கொடுத்திருந்தார். அதனை கேட்ட பலரும் இத்தனை சின்ன வயதில் இப்படி ஒரு இசையை கொடுத்திருக்கிறாரே என்று வாயை பிளந்தனர். அதனையடுத்து ஜிவிக்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்க ஆரம்பித்தன. முக்கியமாக குறுகிய காலத்திலேயே ரஜினிகாந்த், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கும் இசையமைக்க ஆரம்பித்தார்.

க்ளாஸிக் இசை: பெரிய ஹீரோக்களுக்கு இசையமைத்துக்கொண்டிருந்த அவர்; முக்கியமான இயக்குநர்கள் என்று பார்க்கப்படும் பாலா, செல்வராகவன் ஆகியோரின் படங்களுக்கும் இசையமைத்தார். அதன்படி அவர் இசையமைத்த பரதேசி, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. முக்கியமாக ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன ஆகிய படங்களின் பாடல்களும் இசையும் இன்றுவரை ரசிகர்களால் உச்சியில் வைத்து கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஹீரோவாக அறிமுகம்: மிகச்சிறப்பாக அவரது இசை பயணம் போய்க்கொண்டிருந்த சூழலில் திடீரென ஹீரோ அவதாரம் எடுத்தார். ஆனால் ஒருசில படங்களைத் தவிர்த்து அவருக்கு ஹீரோவாக பெரிய அடையாளம் எதுவும் கிடைக்கவில்லை. இது ஒருபக்கம் இருக்க ஜிவி பிரகாஷ் மீண்டும் இசையமைக்க வேண்டுமென்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தார்கள். தற்போது இசையமைப்பிலும் பிஸியாக இருக்கிறார் அவர். அப்படி அவர் கடைசியாக அமரன், லக்கி பாஸ்கர் ஆகிய படங்களுக்கு இசையமைத்தார்.
அடுத்த படங்கள்: மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் குட் பேட் அக்லி படத்துக்கும் ஜிவிதான் இசை என்று கூறப்படுகிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம். மேலும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்கூட, ரசிகர்கள் ரிங் டோனை மாற்றும் நேரம் வந்துவிட்டது என்று கூறியிருந்தார். அவர் குட் பேட் அக்லியைத்தான் சொல்கிறார் என்று ரசிகர்கள் கணித்திருக்கின்றனர். இதற்கிடையே தான் காதலித்து திருமணம் செய்துகொண்ட சைந்தவியையும் பிரிந்திருக்கிறார் அவர்.
எமோஷனலான ரசிகர்கள்: இரண்டு பேரும் பிரிந்தாலும் தங்களுக்குள் ஈகோ பார்க்காமல் இன்னமும் இருக்கிறார்கள். அப்படி சமீபத்தில் மலேசியாவில் நடந்த இசை கச்சேரியில் சைந்தவி கலந்துகொண்டு பாடினார். அப்போது பிறை தேடும் இரவிலே பாடலை இரண்டு பேரும் பாடினார்கள். அதனைப் பார்த்த ரசிகர்கள் ரொம்பவே எமோஷனலாகி; இவர்கள் இரண்டு பேரும் மீண்டும் இணைய வேண்டும் என்று கூறிவருகிறார்கள். இந்தச் சூழலில் ஜிவி பிரகாஷ் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
ஜிவி பிரகாஷ் பேட்டி: தனியார் ஊடகம் ஒன்றுக்கு சில மாதங்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "காதல் படத்துக்கு முதலில் இசையமைக்க வேண்டியது நான்தான். பாலாஜி சக்திவேல் சார் என்னைப் பார்த்து, 'நீங்கள் கஷ்டப்பட்டு எப்படியாவது மேலே வந்துவிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா' என கேட்டார். அதற்கு நானோ அதெல்லாம் இல்லை சார் என்று சொல்லிவிட்டேன். அதன் காரணமாக அவர் அப்செட் ஆகிவிட்டார். படத்துக்கும் என்னால் இசையமைக்க முடியவில்லை.
ஆனால் என்ன செய்வது நான் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் அப்படி சொன்னேன். பிறகு வெயில் படத்தின் இசையை கேட்டுவிட்டு வசந்தபாலனிடம் பாலாஜி சக்திவேல், 'உண்மையில் ஜிவி பிரகாஷ்தான் இந்த இசையை அமைத்தாரா' என்று கேட்டிருக்கிறார்" என்றார்.


Click it and Unblock the Notifications