இதுதான் தமிழர் மாண்பா?.. எங்களை மேலும், காயப்படுத்தாதீங்க.. ஜி.வி. பிரகாஷ் பரபரப்பு அறிக்கை!
சென்னை: இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக நேற்று முன் தினம் இரவு ஒரு அறிக்கையை வெளியிட்டனர். கடந்த ஒரு வார காலமாகவே இருவரும் பிரியப் போவதாக தகவல்கள் கசிந்து பரபரப்பை கிளப்பின.
நேற்று முழுவதும் சமூக வலைதளங்களில் ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி ஹாஷ்டேக்குகள் டிரெண்டாகின. நெட்டிசன்கள் முதல் பல பிரபலங்கள் இந்த விவகாரம் தொடர்பான தங்கள் கருத்துக்களை பதிவிட ஆரம்பித்தனர்.

தயாரிப்பாளர் கே. ராஜன், பயில்வான் ரங்கநாதன், பிஸ்மி என பலர் இந்த விவாகரத்தை எடுத்து அதற்கான காரணங்களை அலசி ஆராய்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது அதற்கு முடிவு கட்டும் விதமாக ஒரு அறிக்கையை ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் கோரிக்கை: "புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுவது துரதிருஷ்டவசமானது. பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல.
தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது யாரோ ஒரு தனி நபரின் வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா..? இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததால் பின்னணியையும் காரணங்களையும் நெருங்கி பழகிய நண்பர்கள், உறவினர்கள் நன்கறிவார்கள்.

அனைவரிடமும் கலந்த ஆலோசித்து பின்பு தான் இருவரும் இந்த முடிவை மேற்கொண்டோம். எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமைகளோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன். ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள். தங்களின் பேரன்பிற்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.” என ஜி.வி. பிரகாஷ் தற்போது கோரிக்கை விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











