ஒரு பாடல்.. வேலை செய்த 4 பேருக்குமே விவாகரத்து.. இந்தப் பாட்டுக்கு இப்படி ஒரு சோகமான ஒற்றுமையா?
சென்னை: ஜிவி பிரகாஷும், சைந்தவியும் விவாகரத்து பெறப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். பள்ளி படிக்கும்போதிலிருந்தே காதலித்து பிறகு திருமணம் செய்து பெண் குழந்தை பெற்றிருக்கும் சூழலில் அவர்களது விவாகரத்து விவகாரம் ரசிகர்களிடையேயும், தமிழ் திரைத்துறையினரிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சூழல் இப்படி இருக்க ஒரே பாடலில் வேலை செய்த நான்கு பேருக்குமே விவாகரத்து நடந்திருப்பதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசிவருகின்றனர்.
சினிமா துறையில் காதலித்து திருமணம் செய்துகொள்வது எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமோ அதே அளவுதான் விவாகரத்தும். பல காலம் சேர்ந்து வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டவர்கள் சில காலத்திலேயே பிரிவதும்; சில காலம் கூட தாங்கமாட்டார்கள் என்று கணிக்கப்பட்டவர்கள் பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்வதும் நடந்துகொண்டிருக்கிறது. அப்படி பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டவர்கள்தான் ஜிவி பிரகாஷ் - சைந்தவி ஜோடி.

பள்ளி காதல்: ஜிவி பிரகாஷும், சைந்தவியும் ஒன்றாக பள்ளியில் படித்தவர்கள். அப்போதிருந்தே இருவருக்கும் இசை மீது ஆர்வம் அதிகம் இருந்ததால் அந்த இசை துறை அவர்களை காதல் என்ற புள்ளியில் இணைத்தது. இருவரும் உருகி உருகி காதலித்தார்கள். ஜிவி பிரகாஷும் இசையமைப்பாளராக வந்தார், சைந்தவியும் அந்நியன் படத்தில் இடம்பெற்ற 'அண்டங்காக்கா கொண்டைக்காரி’ பாடல் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு அன்வி என்ற மகள் இருக்கிறார். ஆனால் இப்போது இரண்டு பேரும் விவாகரத்து பெறவிருக்கிறார்கள்.
ஜிவி இசையில் சைந்தவி: ஜிவி பிரகாஷ் இசையமைத்த ஏராளமான பாடல்களை சைந்தவி பாடியிருக்கிறார். விழிகளில் ஒரு வானவில், எள்ளு வய பூக்கலையே, ஆருயிரே ஆருயிரே, யாரோ இவன் யாரோ இவன், வெண்மேகம் போலவே நீ என் மேல் ஊர்கிறாய் என அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். அப்படி அவர் ஜிவி இசையில் பாடிய பாடல்களில் முக்கியமான பாடல்தான் மயக்கம் என்ன திரைப்படத்தில் இடம்பெற்ற, பிறை தேடும் இரவிலே உயிரே எதைத் தேடி அலைகிறாய். இதனை சைந்தவியுடன் இணைந்து ஜிவி பிரகாஷும் பாடியிருப்பார்.
பிறை தேடும் இரவிலே: தனுஷை வைத்து அவரது சகோதரர் செல்வராகவன் இயக்கிய படம் மயக்கம் என்ன. கடந்த 2011ஆம் ஆண்டு அந்தத் திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக இன்றளவும் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதில் இடம்பெற்ற பிறை தேடும் இரவிலே பாடலை தனுஷ் எழுத, ஜிவி பிரகாஷ் இசையமைக்க, சைந்தவி பாடியிருப்பார். அந்தப் பாடல் பலரது ஃபேவரைட். ஆனால் இப்போது அந்தப் பாடலை வைத்து ஒரு விஷயத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசிவருகின்றனர்.
சோகமான ஒற்றுமை: அதாவது இந்தப் பாடலில் வேலை செய்த 4 பேருமே விவாகரத்து பெற்றிருக்கிறார்கள். தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று நீதிமன்றம் ஏறியிருக்கிறார். அதேபோல் செல்வராகவன் முதலில் சோனியா அகர்வாலை திருமணம் செய்துகொண்டு பிறகு விவாகரத்து பெற்றுக்கொண்டார். இப்போது இந்த லிஸ்ட்டில் ஜிவி பிரகாஷும், சைந்தவியும் சேர்ந்திருக்கிறார். இதனை நோட் செய்த நெட்டிசன்கள், ச்ச இது எவ்வளவு அழகான பாடல். ஆனால் இந்தப் பாடலுக்கு இப்படி ஒரு சோகமான ஒற்றுமை ஒட்டிக்கொண்டதே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











