அஜித்தின் குட் பேட் அக்லி.. தரமான சம்பவம் செய்யப்போகும் ஜிவி பிரகாஷ்?.. ஏகே பாட்டு ரீமேக்காம்
சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்திருக்கிறார் அஜித்குமார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் திரிஷா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. ஏப்ரல் பத்தாம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது. இந்தப் படத்துக்கு முன்னதாக ஆதிக் இயக்கிய மார்க் ஆண்டனி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததால் இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்திருக்கிறார் அஜித்குமார். ஜனவரி பத்தாம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸாக வேண்டிய படம் சில காரணங்களால் பிப்ரவரி ஆறாம் தேதிக்கு தள்ளிப்போனது. பட ரிலீஸுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால் ரசிகர்கள் உச்சக்கட்ட ஆவலோடு காத்திருக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதேபோல் படத்தின் ப்ரீ புக்கிங்கும் தொடங்கி நல்லவிதமாக படத்துக்கு வசூல் கிடைத்துவருவதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.

குட் பேட் அக்லி: இதற்கிடையே விடாமுயற்சி படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டானார் ஏகே. எப்போதும் ஒரு படத்தை முடித்து சில மாதம் ரெஸ்ட் எடுத்த பின்னரே அடுத்த படத்தின் ஷூட்டிங்கிற்கு செல்லும் அஜித் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. துபாயில் நடந்த கார் ரேஸில் கலந்துகொள்ள வேண்டுமெனில் தனக்கு இருக்கும் கமிட்மெண்ட்டுகளை முடித்துவிட வேண்டும் என்று அஜித் உறுதி எடுத்ததுதான் அவரது இந்த முடிவுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
எதிர்பார்ப்பு: திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில்தான் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகவில்லை. அதனைத் தொடர்ந்து சிம்புவை வைத்து அவர் இயக்கிய அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படமும் சரியாக போகவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான் விஷாலை வைத்து மார்க் ஆண்டனி படத்தை இயக்கினார் ஆதிக். படம் எதிர்பார்க்காத வகையில் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படம் கொண்டாடப்பட்டது. இதனால் குட் பேட் அக்லிக்கும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
தேவிக்கு பதில் ஜிவி: நேர்கொண்ட பார்வை படத்தில் ஆதிக் நடித்தபோது அவர் மீது அஜித்துக்கு நம்பிக்கை வந்ததால்தான் இந்தப் படத்தில் அவர் நடிக்க ஒத்துக்கொண்டார். முதலில் இப்படத்துக்கு இசையமைப்பாளராக தேவிஸ்ரீ பிரசாத் தான் கமிட்டானார். ஆனால் சில காரணங்களால் அவருக்கு பதிலாக ஜிவி பிரகாஷ் உள்ளே வந்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கும், தேவிஸ்ரீ பிரசாத்துக்கும் புஷ்பா 2 பட சமயத்தில் நடந்த மனஸ்தாபம்தான் இந்த மாற்றத்துக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
சம்பவம் செய்யும் ஜிவி?: படத்துக்கு இசையமைப்பாளராக கமிட்டான பிறகு ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஜிவி பிரகாஷ், 'எனது சிறந்த இசையை இந்தப் படத்துக்கு தருவேன்' என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி அஜித் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தீனா படத்தில் இடம்பெற்றிருந்த 'வத்திக்குச்சி பத்திக்காதுடா' பாடலை இந்தப் படத்துக்காக ரீமேக் செய்ய ஜிவி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அட இப்படி ஒருவேளை நடந்தால் செமயாக இருக்குமே என்று மகிழ்ச்சியோடு கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











