தைரியமாக இருங்கள் அக்கா.. ஆர்த்திக்கு ஜிவி பிரகாஷ் முன்னாள் மனைவி சைந்தவி ஆறுதல்
சென்னை: ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக சமீபத்தில் அறிவித்தார். ஆனால் ஆர்த்தியோ ரவி எடுத்த முடிவு தனக்கு தெரியாது என்று விளக்கம் அளித்தார். இதனையடுத்து ஜெயம் ரவி - ஆர்த்தி டாபிக் கோலிவுட்டின் தலைப்பு செய்தியாக மாறியது. இருவரும் மனம் ஒத்து பிரிந்துவிட்டார்கள் என்று நினைத்த சூழலில் திடீர் ட்விஸ்ட்டாக ஆர்த்தி மீது காவல் துறையில் புகார் அளித்தார் ஜெயம் ரவி. சூழல் இப்படி இருக்க ஆர்த்தி மீண்டும் ஒரு விளக்கத்தை கொடுத்திருந்தார்.
தமிழ் சினிமாவில் கிசுகிசுவில் சிக்காத நடிகர்களில் ஜெயம் ரவியும் ஒருவர். தான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதையையும் கவனமாக கையாளும் ரவி கடைசியாக சைரன் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இப்போது அவரது கைகளில் ஜீனி, பிரதர், காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்கள் இருக்கின்றன. கண்டிப்பாக இந்த மூன்று படங்களுமே ஹிட்டடிக்கும் என்ற பெருத்த நம்பிக்கையில் இருக்கிறார் ஜெயம் ரவி. முக்கியமாக பிரதர் படத்தை அவர் ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார்.

மனைவியை பிரிந்த ரவி: சூழல் இப்படி இருக்க சமீபத்தில் ரவி வெளியிட்டிருந்த அறிக்கையில், 'எனது மனைவி ஆர்த்தியை பிரிகிறேன். திருமண வாழ்க்கையிலிருந்து விலகுகிறேன்' என்று கூறியிருந்தார். மேலும் விவாகரத்து மனுவையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த விவகாரம் பெரும் பேசுபொருளானது. மேலும் ஜெயம் ரவிக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதால்தான் விவாகரத்து முடிவை எடுத்திருப்பதாக பலரும் பேசினார்கள். இருந்தாலும் ஜெயம் ரவி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
ரவியின் விளக்கம்: ஜெயம் ரவியுடன் கெனிஷா என்ற பெண் தொடர்புப்படுத்தி பேசப்பட்டார். அதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயம் ரவி, 'இந்த விஷயத்தில் அந்தப் பெண்ணை (கெனிஷா) இழுப்பது தேவையற்ற ஒன்று. அவர் பலருக்கு உதவிகள் செய்துவருகிறார். ஆதரவற்ற பெண் அவர். அதேபோல் நானும் அவரும் சேர்ந்து ஒரு ஹீலிங் மையத்தை திறக்க திட்டமிட்டிருக்கிறோம்' என்று தெரிவித்திருந்தார். ரவியின் இந்த விளக்கத்துக்கு பிறகு கெனிஷாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காட்டமாக போஸ்ட் ஒன்றை போட்டிருந்தார்.
ஆர்த்தியின் விளக்கம்: இதற்கிடையே ஜெயம் ரவியுடன் பேசுவதற்கு வாய்ப்பே தரப்படவில்லை என்று முதலில் விளக்கம் அளித்திருந்தார் ஆர்த்தி. அதனையடுத்து மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்த ஆர்த்தி, "இவ்வளவு நாட்கள் நான் அமைதியாக இருந்தது எனது குற்றவுணர்ச்சி என்றோ, பலவீனம் என்றோ யாரும் நினைக்க வேண்டாம். திருமணத்தின் புனிதத்தை ரொம்பவே மதிப்பவள் நான். யாருடைய நற்பெயரையும் கெடுக்கும் விவாதங்களில் ஈடுபடமாட்டேன். இந்த விவாகரத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ரவியிடம் தனிப்பட்ட முறையில் பேச காத்திருக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
ஆர்த்திக்கு ஆதரவு: இந்நிலையில் ஆர்த்தியின் இரண்டாவது விளக்கத்தை பார்த்த பலரும் இந்த விஷயத்தில் என்னதான் நடக்கிறது என்று குழம்பிப்போயிருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க ஆர்த்தியின் இரண்டாவது விளக்கத்துக்கு பிறகு அவருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார் சைந்தவியும், குஷ்பூவும். சைந்தவி தெரிவித்திருக்கும் ஆறுதலில், 'தைரியமாக இருங்கள் அக்கா. உங்களுக்காக எனது பிரார்த்தனைகள்' என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோல் குஷ்பூவும், 'நீ மிகவும் தைரியமானவள்' என கூறியிருக்கிறார்.
சைந்தவி, குஷ்பூ: முன்னதாக ஜெயம் ரவிக்கும், ஆர்த்திக்கும் பழக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமே குஷ்பூதான் என்றும்; அவரது பேச்சுவார்த்தைக்கு பிறகுதான் இரண்டு பேருக்கும் திருமணம் நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல் சைந்தவி தனது கணவர் ஜிவி பிரகாஷை சில மாதங்களுக்கு முன்பு பிரிவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











