சீக்கிரம் சேர்ந்துடுங்க மேடம்.. சைந்தவி பிறந்தநாளில் ரசிகர்கள் வைக்கும் கோரிக்கை
சென்னை: ஏ.ஆர்.ரஹ்மானின் அக்கா மகனும், இசையமைப்பாளர், நடிகருமான ஜிவி பிரகாஷ் தனது பள்ளி கால தோழியான சைந்தவியை பல வருடங்கள் காதலித்து கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருமே ஒருவரையொரு அனுசரித்து, புரிந்துகொண்டு வாழ்க்கையை நகர்த்தி வந்தார்கள். இதன் காரணமாக கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி என்ற பெயரையும் இவர்கள் பெற்றனர். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை இரண்டு பேரும் பிரிந்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் சைந்தவி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சினிமா துறையில் காதலித்து திருமணம் செய்துகொள்வது எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமோ அதே அளவுதான் விவாகரத்தும். பல காலம் சேர்ந்து வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டவர்கள் சில காலத்திலேயே பிரிவதும்; சில காலம் கூட தாங்கமாட்டார்கள் என்று கணிக்கப்பட்டவர்கள் பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்வதும் நடந்துகொண்டிருக்கிறது. அப்படி பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டவர்கள்தான் ஜிவி பிரகாஷ் - சைந்தவி ஜோடி.

பள்ளி காதல்: ஜிவி பிரகாஷும், சைந்தவியும் ஒன்றாக பள்ளியில் படித்தவர்கள். அப்போதிருந்தே இருவருக்கும் இசை மீது ஆர்வம் அதிகம் இருந்ததால் அந்த இசை துறை அவர்களை காதல் என்ற புள்ளியில் இணைத்தது. இருவரும் உருகி உருகி காதலித்தார்கள். ஜிவி பிரகாஷும் இசையமைப்பாளராக வந்தார், சைந்தவியும் அந்நியன் படத்தில் இடம்பெற்ற 'அண்டங்காக்கா கொண்டைக்காரி' பாடல் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். சினிமாவில் இருந்தாலும் தங்களது காதலை பிரியாமல் பார்த்துக்கொண்டார்கள் இருவரும். இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு அன்வி என்ற மகள் இருக்கிறார்.
சைந்தவியின் ஆரம்ப காலம்: ஜிவி பிரகாஷ் பற்றி பலருக்கும் தெரியும். ஆனால் சைந்தவி குறித்து பெரிதாக யாருக்கும் தெரியாது. சைந்தவியின் சொந்த ஊர் சென்னை. அவரது தந்தை பெயர் ஸ்ரீவத்சன். மருத்துவராக இருக்கிறார். தாய் பெயர் ஆனந்தி. இவர் பிரபல வங்கியில் முக்கிய பதவியில் இருந்தார் என்று கூறப்படுகிறது. விஜய் கார்த்திக், வினோத் கிருஷ்ணா என்ற இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்கள். 1989ஆம் ஆண்டு பிறந்த அவர் தனது 9ஆவது வயதிலிருந்தே பாடல்களை பாடிவருகிறார். கோயில்களில் நடக்கும் விழாக்கள், மேடை கச்சேரிகள் என அனைத்திலுமே தனது குரல் திறமையை சிறு வயதிலயே நிரூபித்தவர்.
சினிமாவில் சைந்தவி: அந்நியன் படத்தில் இடம்பெற்ற 'அண்டங்காக்கா கொண்டைக்காரி' பாடலை பாடி அறிமுகமான அவர், தொடர்ந்து ஆதி படத்தில் இடம்பெற்ற 'இப்போ இல்லாட்டி எப்போ', அழகிய தமிழ் மகனில் இடம்பெற்ற 'கேளாமல் கையிலே', வரலாறு படத்தில் இடம்பெற்ற 'இன்னிசை அளபடையே', பையா படத்தில் இடம்பெற்ற 'அடடா மழைடா, 'சுறாவில் இடம்பெற்ற 'தஞ்சாவூர் ஜில்லாக்காரி, 'மதராசப்பட்டினத்தில் இடம்பெற்ற 'ஆருயிரே', தெய்வதிருமகள் படத்தில் இடம்பெற்ற 'விழிகளில் ஒரு வானவில்', அசுரனில் இடம்பெற்ற' எள்ளு வய பூக்கலையே 'என ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார். பல பாடல்கள் இவர்தான் பாடியிருக்கிறாரா என்று ரசிகர்கள் ஆச்சரியப்படுவார்கள்.
பிறந்தநாள்: சூழல் இப்படி இருக்க அவரும் ஜிவி பிரகாஷும் பிரிந்திருக்கிறார்கள். இந்நிலையில் சைந்தவி இன்று தனது 35ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவரும் சூழலில் ரசிகர்களோ கோரிக்கை ஒன்றையும் வைத்திருக்கிறார்கள். அதன்படி சமீபத்தில் மலேசியாவில் நடந்த ஜிவி பிரகாஷின் கான்செர்ட்டில் நீங்கள் எந்த ஈகோவும் இல்லாமல் பாடினீர்கள். அதேபோல் மீண்டும் ஜிவியுடன் இணைந்து வாழ வேண்டும் என்று கூறிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











