மாயக் கலைஞன் மணிரத்னம்.. கொண்டாடும் ரசிகர்கள்.. டிரெண்டாகும் #HappyBirthdayManiRatnam
சென்னை: வாழ்வின் யதார்த்தங்களை திரையில் ஓவியமாக வரைந்து வித்தைக் காட்டும் மாயக் கலைஞன் மணிரத்னம் சாரின் 64வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
பல்லவி அனு பல்லவி படத்தில் திரைப்பயணத்தை தொடங்கி பொன்னியின் செல்வனை படைத்து வரும் இயக்குநர் மணிரத்னம் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் #HappyBirthdayManiRatnam என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
வாழ்வில் ஒருமுறையாவது இவரது இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என எத்தனையோ நட்சத்திர நடிகர்கள் இன்றும் காத்துக் கிடக்கின்றனர்.

ஹேப்பி பர்த்டே மணி சார்
1956ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி கோபால ரத்னம் சுப்பிரமணியமாக பிறந்தவர், இன்று இந்திய சினிமாவின் இன்றியமையாத இயக்குநர் பட்டியலில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார். ஒரு நடிகரின் மொத்த நல்ல நடிப்பையும் அவருக்கே தெரியாமல் வெளியே கொண்டு வரும் மந்திரத்தை அறிந்து வைத்திருக்கும் இயக்குநர் மணிரத்னத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

ஆரம்பமே அசத்தல்
இயக்குநர் மணிரத்னத்தை பலரும் மரியாதையுடன் மணி சார் என்றே அழைப்பார்கள். சினிமா குறித்த எந்தவொரு படிப்பையும் படிக்காமல், அதன் மீது இருந்த ஆர்வத்தை வைத்துக் கொண்டு அவர் முதன்முதலாக கன்னட மொழியில் இயக்கிய பல்லவி அனு பல்லவி திரைப்படம் கர்நாடக அரசின் விருதினை பெற்றது. ஆனால், தமிழில் இவர் இயக்கிய முதல் படமான பகல் நிலவு வரவேற்பை பெறவில்லை.

ரொமான்ஸ் கிங்
மணிரத்னம் இயக்கத்தில் 5வது படமாக வெளியான மெளன ராகம் திரைப்படம் தான் மிகப்பெரிய திருப்புமுனையாகவும், தமிழ் சினிமா இயக்குநர்களில் தலை சிறந்த இயக்குநர்கள் பட்டியலில் இவருக்கு ஒரு நிரந்தர சீட்டையும் போட்டுக் கொடுத்தது. மெளன ராகம், ரோஜா, அலைபாயுதே, ஆயுத எழுத்து, ராவணன், ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடை என இவர் படங்களில் காதல் ரசம் தானாக வழிந்து விழும்.

6 முறை தேசிய விருது
மெளன ராகம், கீதாஞ்சலி, அஞ்சலி, ரோஜா, பாம்பே மற்றும் கன்னத்தில் முத்தமிட்டால் என 6 முறை தேசிய விருதை பெற்றவர் இயக்குநர் மணிரத்னம். 2002ம் ஆண்டு இந்திய அரசால் கெளரவிக்கப்பட்டு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. பல வெளிநாடுகளில் சர்வதேச விருதுகளையும் தனது இயக்கத்திற்காக மணிரத்னம் பெற்றுள்ளார்.

ஆஸ்கர் போட்டியில்
தனது 37 வருட சினிமா வாழ்க்கையில் 27 படங்களை இயக்கியுள்ளார். 6 முறை தேசிய விருதுகளையும் 4 முறை பிலிம்ஃபேர் விருதுகளையும், 6 மாநில விருதுகளையும், நாயகன் மற்றும் அஞ்சலி படங்கள் இந்திய அரசின் சார்பில் ஆஸ்கர் போட்டிக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











