ஹாரிஸ் ஜெயராஜ் வீட்டு வளர்ப்பு நாய்.. கடித்து இளைஞர் காயம்!
சென்னை: பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த வெளிநாட்டு நாய் தெருவில் சென்ற ஒருவரை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசித்து வரும் ஹாரிஸ் ஜெயராஜ், தனது இல்லத்தில் வெளிநாட்டு இனத்தைச் சேர்ந்த நாயை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த நாய் வீட்டை விட்டு வெளியேறி, தெருவில் சென்று கொண்டிருந்த ஆதித்யா என்ற இளைஞரை திடீரென தாக்கி உள்ளது. இந்த எதிர்பாராத தாக்குதலில் ஆதித்யாவுக்கு வலது கை, உள்ளங்கை மற்றும் விரல்கள் உள்ளிட்ட பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆதித்யா அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாய் எவ்வாறு வெளியேறியது, பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டதா என்பது போன்ற கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நாய் வளர்ப்பு: சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் சமீப காலமாக நாய் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலைக்கிடமான ஒன்றாக மாறியுள்ளது. குறிப்பாக, வீட்டில் வளர்க்கப்படும் வெளிநாட்டு இன நாய்கள் கட்டுப்பாடின்றி வெளியே வரும் சூழ்நிலைகள் பொதுமக்களின் பாதுகாப்பை பாதிக்கின்றன. முன்னதாகவும், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சில இடங்களில், பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் வளர்க்கப்பட்ட நாய்கள் அண்டை வீட்டார் மற்றும் பாதசாரிகளை தாக்கிய சம்பவங்கள் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தின.
முன்னெச்சரிக்கை அவசியம்: நாய் வளர்ப்போர் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். நாய்களுக்கு சரியான கட்டுப்பாட்டு பட்டா (leash) பயன்படுத்துதல், பொதுமக்கள் அணுக முடியாத வகையில் பாதுகாப்பான இடங்களில் வைத்திருத்தல், தடுப்பூசிகள் போடுதல், விதிமுறைகளை நாய் வளர்ப்போர் பின்பற்ற வேண்டும். ஆனால், நாய் வளர்ப்போர் இவற்றை சரியாக பின்பற்றாதே இதுபோன்ற விபத்துகள் நிகழ்வதற்கு காரணம் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications