கொலையாளிக்கு இருக்கும் உரிமை கூட ஸ்வேதா பாசுவுக்கு இல்லையே- "டிவி அம்மா" சாக்ஷி தன்வார் வேதனை
மும்பை: மும்பை சீரியல் உலகின் மிகப் பிரபலமான நட்சத்திரமான சாக்ஷி தன்வார், விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஸ்வேதா பாசு பிரசாத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
அவரது சொந்த விஷயங்களில் தலையிட யாருக்கும் உரிமையில்லை என்று கண்டனமும் தெரிவித்துள்ளார்.
ஸ்வேதா பாசு பிரசாத் சினிமா உலகின் மிக இளம் வயது நடிகை. சில நாட்களுக்கு முன்னர் விபச்சார வழக்கில் இவர் கைது செய்யப்பட்டார்.
எல்லாரும் அவரை குற்றம் சாட்டும் நிலையில், டிவி தொடரில் ஸ்வேதாவின் அம்மாவாக நடித்த சாக்ஷி தன்வார் அவருக்காக குரல் கொடுத்துள்ளார்.

தேசிய விருது பெற்ற ஸ்வேதா:
2002 ஆம் ஆண்டில் வெளிவந்த மக்டே என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்வேதா, அப்படத்திற்காக தேசிய விருது பெற்றார்.

மகள் கதாபாத்திரம்:
அவர் "ககானி கார் கர் கி" என்ற தொலைக்காட்சி தொடரில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த சாக்ஷிக்கு மகளாக நடித்திருந்தார்.

திறமையான நடிகை ஸ்வேதா:
அப்போது, டிஎன்ஏவில் வெளிவந்த கட்டுரை ஒன்றில் 9 வயது சிறுமியாக ஸ்வேதா எனக்கு அறிமுகானார். அவர் மிகவும் இனிமையான, திறமையான நடிகை என்று பாராட்டி இருந்தார் சாக்ஷி. அதுமட்டுமல்லாமல், இதுவரை ஸ்வேதா எல்லா "அன்னையர் தினம்" அன்றும் சாக்ஷியை வாழ்த்தத் தவறியதே இல்லை.

விபச்சார வழக்கில் கைது:
இந்நிலையில்தான் 23 வயதான் ஸ்வேதா விபச்சார வழக்கில் சிக்கியுள்ளார். ஸ்வேதாவை மட்டும் அமைதி இழக்கச் செய்பவர்கள், அவருடன் உல்லாசத்தில் ஈடுபட்டவர்களை அம்பலப்படுத்த ஏன் முயலவில்லை என்று சாக்ஷி கேள்வி எழுப்பி உள்ளார்.

மன வேதனையில் சாக்ஷி:
அவருடைய சமூக வலைதளத்தில், "உண்மையாகவே நான் மிகவும் மன வேதனையில் உள்ளேன். பத்திரிகைகளும், செய்திகளும், ஊடகங்களும் மிகவும் பாதுகாப்பாக அப்படிப்பட்ட தொழிலதிபர்களின் பெயர்களை இருட்டடிப்பு செய்துள்ளன.

குடும்பத்தினரின் வேதனை:
எனக்கொன்றும் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் என்றெல்லாம் இல்லை. ஆனால், அவர்கள் பெயர்கள் வெளிவந்தால்தான் அவர்கள் குடும்பத்தில் உள்ள அன்னையர், மனைவியர், மகள்கள், சகோதரிகள், தோழியர் படும் வேதனை அவர்களுக்குப் புரியும்" என்று தெரிவித்துள்ளார்.

தைரியமாக கூறியவர்:
ஸ்வேதா தற்போது எங்கே, எந்த காப்பகத்தில் இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவரை சந்திக்க அவரது தாயாரை அனுமதிக்கவில்லை. அவருடைய பிரச்சனைகள் என்னவென்று எனக்கு தெரியாது. அதற்கு என்ன வழி என்றும் தெரியாது. ஆனால், தன்னைப் பற்றிய உண்மையை தைரியமாக அவர் ஒத்துக் கொண்டுள்ளார்.

அரவணைக்கும் ஸ்வேதா:
அவர் தன்னுடைய காப்பகத்தில் மற்ற குழந்தைகளையும், கைதிகளையும் அன்பாக அரவணைத்து பார்த்துக் கொள்வது எத்தனை பேருக்கு தெரியும் சொல்லுங்கள்.

தவறான முடிவுக்கு வழி:
அவருடைய தாய், " என்னுடைய மகள் ஒன்றும் கிரிமினல் அல்ல. ஆனால், அவருடைய பேரை ஏன் இப்படி அசிங்கப்படுத்துகிறீர்கள்? ஒருவேளை ஊடகங்களின் இந்த போக்கால் அவள் தவறான முடிவை எடுத்துவிட்டால் என்ன செய்வீர்கள்?" என்று கதறுகின்றார்.

உரிமைகள் மறுப்பு:
ஒரு நாட்டில் பாலியல் வன்முறையாளர்கள், கொலைகாரர்களுக்கு இருக்கும் உரிமை கூட ஸ்வேதாவிற்கு மறுக்கப்பட்டது ஏன்?!" என்று கூறியுள்ளார் சாக்ஷி தன்வார்.

வாடிக்கையாளர்கள் யார்யார்? :
சாக்ஷி மட்டுமல்ல, பிரபல இயக்குனர் ஹன்சல் மேத்தாவும் ஸ்வேதாவிற்கு ஆதரவாக டுவிட்டியுள்ளார். தன்னுடைய பக்கத்தில், "ஸ்வேதாவின் புகைப்படங்களை வெளியிடுவதை நிறுத்திவிட்டு, அவருடைய பணக்கார வாடிக்கையாளார்களின் புகைப்படங்களையும், அதற்கான ஏஜெண்ட் புகைப்படங்களையும் வெளியிடுங்கள்" என்று கூறியுள்ளார்.

பெண்களுக்கு மட்டுமே தண்டனை:
என்ன செய்வது காலம்காலமாக தவறுகள் பெண்களை மட்டுமே குறி வைத்து கூறப்படுகின்றன...ஆண்கள் செய்தால் அது குற்றமல்லவே!


Click it and Unblock the Notifications











