ஆனந்த யாழை மீட்டியவன்.. மறக்க முடியாத பாடலாசிரியர் நா. முத்துகுமாரின் பிறந்த தினம் இன்று!
சென்னை: மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் 45வது பிறந்த தினம் இன்று தமிழ் சினிமா ரசிகர்களால் அனுசரிக்கப்படுகிறது.
மலபார் போலீஸ் படத்தின் மூலம் தொடங்கிய இவரது திரைப் பயணம், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான சர்வம் தாள மயம் படத்துடன் நிறைவுக்கு வந்தது.
கிட்டத்தட்ட 1500க்கும் மேற்பட்ட திரைப் பாடல்களையும், எண்ணற்ற நூல்களையும் எழுதியுள்ளார் நா. முத்துக்குமார்.
நா. முத்துக்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் #HBDNaMuthukumar என்ற ஹாஷ்டேக்கை வெளியிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

நா. முத்துக்குமார் பிறந்தநாள்
1975ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தவர் நா. முத்துக்குமார். 1999ம் ஆண்டு தளபதி விஜய்யின் மின்சார கண்ணா படத்தில் இடம்பெற்ற "உன் பேர் சொல்ல ஆசைதான்" பாடலை எழுதி சினிமா உலகில் பிரபலமானார். கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி உடல் நலக் குறைவால் நா. முத்துக்குமார் உயிரிழந்த சம்பவம் திரை உலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. இன்று நா. முத்துக்குமாரின் 45 வது பிறந்தநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

மறக்க முடியாத பாடல்கள்
நல்ல நல்ல பாடல் வரிகளை தமிழ் திரையுலகுக்கு கொடையாக கொடுத்த வள்ளல்களில் நா. முத்துக்குமாரும் ஒருவர். காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, கில்லி (சூர தேங்காய்), காதல், சந்திரமுகி (கொக்கு பற பற), கஜினி (சுற்றும் விழி). புதுப்பேட்டை, சிவாஜி (பல்லேலக்கா), கல்லூரி, யாரடி நீ மோகினி, அயன் (விழி மூடி யோசித்தால்). அங்காடி தெரு, பையா, மதராசபட்டினம், பில்லா 2, தங்கமீன்கள், ராம், சைவம், 2.0(புல்லினங்காள்) என பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

2 தேசிய விருதுகள்
இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியான தங்கமீன்கள் படத்தில் பாடலாசிரியர் நா. முத்துக்குமார் எழுதிய "ஆனந்த யாழை மீட்டுகிறாள்" பாடல் அவருக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது. அடுத்தபடியாக, இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் சைவம் படத்திற்காக நா. முத்துக்குமார் எழுதிய "எல்லாம் அழகு" பாடலுக்காகவும் தேசிய விருதை வென்றார்.

வசனகர்த்தா
இயக்குநர் பாலு மகேந்திராவிடம் 4 ஆண்டுகள் பணியாற்றிய நா. முத்துக்குமார், பாடலாசிரியரை தாண்டி, தல அஜித்தின் கிரீடம் மற்றும் சூர்யாவின் வாரணம் ஆயிரம் ஆகிய இரண்டு படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார். ஏகப்பட்ட படங்களுக்கு அவர் எழுதி கொடுத்த பல வெற்றி பாடல்களுக்கு போதுமான ஊதியம் அவருக்கு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும், அவரது மரணத்தின் போது எழுந்தது குறிப்பிடத்தக்கது.

டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்
நா. முத்துக்குமாரின் பாடல் வரிகளால் ஈர்க்கப்பட்ட தமிழ் ரசிகர்கள், அவர் மறைந்து 4 ஆண்டுகள் ஆகியும், அவரது பிறந்தநாளை ஹாஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர். அவர் மறைந்தாலும் என்றுமே அவரது பாடல் வரிகள் தமிழ் சமூகத்தை தாலாட்டிக் கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











