'லட்டு': பேசித் தீத்துக்கங்க - பாக்யராஜ், சந்தானத்துக்கு நீதிமன்றம் அட்வைஸ்!

சந்தானம், 'பவர் ஸ்டார்' சீனிவாசன், நடிகை விசாகா ஆகியோர் நடித்து பொங்கலுக்கு வெளியான படம் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா'. இந்த படத்தின் கதை அப்படியே பாக்யராஜின் புகழ்பெற்ற படமான இன்று போய் நாளை வா படத்தின் கதையாகும். தன்னுடைய அனுமதி இல்லாமல் கதை கருவை திருடி படமெடுத்துவிட்டார்கள் என்று பாக்யராஜ் புகார் கூறினார்.
இதற்குக் காரணமான சந்தானம், ராமநாராயணன், புஷ்பா கந்தசாமி ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாக்யராஜ் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் கொடுத்திருந்தார்.
இந்த புகாரின் மீது போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை உயர்நீதி மன்றத்தில் நடவடிக்கை கோரி மனு செய்தார் பாக்யராஜ்.
நீதிபதி கிருபாகரன் தலைமையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி, பாக்யராஜ் மற்றும் சந்தானம் ஆகிய இருதரப்பும் சமரச தீர்வு மையத்தை அணுகி பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்று உத்தரவிட்டார். அப்படி சமரசமாகாவிட்டால் மார்ச் 6-ம் தேதி வழக்கை விசாரிப்பதாக அறிவித்தார்.


Click it and Unblock the Notifications











