Don't Miss!
- News தலைகீழாக திரும்புதே.. விவசாயிகளுக்கு குஷி.. இனி "ஸ்பாட் ஆக்ஷன்".. தமிழக அரசின் புது அதிரடி வருகிறது
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இனி இளையராஜாவின் பாடல்களை அகி மியூசிக், எக்கோ நிறுவனங்கள் விற்க நிரந்தரத் தடை!!
சென்னை: இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான பாடல்கள் எதையுமே இனி அகி மியூசிக் மற்றும் எக்கோ நிறுவனங்கள் விற்பனை செய்ய அல்லது பயன்படுத்த நிரந்தரத் தடை விதிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனைப் படைத்த இளையராஜா, இன்றும் தமிழ், தெலுங்கு, இந்தியில் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இவரது பாடல்களை பல நிறுவனங்கள் வெளியிட்டு விற்பனை செய்து வந்தன. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நிறுவனம் அந்த உரிமையைப் பெற்று விற்று வந்தது.
அவரது பெருமளவு பாடல்களை வெளியிட்ட எக்கோ நிறுவனம், இளையராஜாவுக்கு தரவேண்டிய பல கோடி ரூபாய் ராயல்டியை இன்னும் தரவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் தனது படங்களின் இசை வெளியீட்டு உரிமையை மலேசியாவைச் சேர்ந்த அகி மியூசிக் என்ற நிறுவனத்துக்குத் தந்தார் இளையராஜா. ஒரு பைசா கூட முன்பணமோ, வேறு தொகையோ பெறாமல் இலவசமாகவே இந்த உரிமையைக் கொடுத்தார் இளையராஜா.
அப்படிப் பெற்ற பாடல்களை கடந்த சில ஆண்டுகளாக ஐட்யூன், சிடிகள் வழியாக விற்பனை செய்து பெரும் வருவாய் ஈட்டியது அகி மியூசிக் நிறுவனம்.
ஆனால் தனக்குத் தரவேண்டிய காப்புரிமைத் தொகையை முறையாகத் தராமல் மோசடி செய்ததாக இளையராஜா குற்றம் சாட்டினார். எனவே அகி மியூசிக் நிறுவனத்துக்கு கொடுத்த விற்பனை உரிமையை ரத்து செய்ய முடிவு செய்தார்.
ஆனால் இளையராஜாவின் முடிவுக்கு எதிராக அவரது பாடல்களை தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் ஆல்பங்களாக்கி வெளியிடுவதில் மும்முரம் காட்டியது அகி மியூசிக்.
இதனை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போனார் இளையராஜா. தனது பாடல்களை அகி மியூசிக்கோ, எக்கோ நிறுவனமோ, இவர்களின் சார்பில் மறைமுகமாக வேறு நிறுவனங்களோ விற்பனை செய்ய தடை கோரினார்.
பல மாதங்களாக நடந்து வந்த வழக்கில், சில வாரங்களுக்கு முன்பு இளையராஜா பாடல்களை விற்பனை செய்ய அகி மியூசிக் மற்றும் எக்கோ நிறுவனங்களுக்கு இடைக்காலத் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இன்று இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், "இனி இளையராஜாவின் இசையில் உருவான பாடல்களை விற்பனை செய்யவோ, எந்த வகையிலும் பயன்படுத்தவோ அகி மியூசிக் மற்றும் எக்கோ ரிகார்டிங் உள்ள நிறுவனங்களுக்கு நிரந்தரத் தடை விதிக்கப்படுகிறது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் இளையராஜாவின் இசையில் வெளியாகியுள்ள 6500-க்கும் மேற்பட்ட பாடல்கள், 28-க்கும் மேற்பட்ட தனி ஆல்பங்கள் போன்றவற்றை மறு வெளியீடு செய்யும் உரிமை முழுவதுமாக அவற்றை உருவாக்கிய இளையராஜாவுக்கே சொந்தமாகியுள்ளது.