முன்னாள் மனைவி உதவியுடன் வெளியாகும் பிரகாஷ் ராஜ் படம்

நடிகர் பிரகாஷ்ராஜ் சொந்தமாக தயாரித்துள்ள 'பயணம்' படத்தில் அவரும், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவும் நடித்துள்ளனர். இயக்குநர் ராதா மோகன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
படத்தின் தயாரிப்பாளரான நடிகர் பிரகாஷ்ராஜ், சென்னையைச் சேர்ந்த மெட்டல் பேப்ரிகேட்டர்ஸ் நிறுவன அதிபர் மகேந்திர குமார் ஜெயினிடம் முன்பு ரூ.80 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.
ஏற்கனவே தான் தயாரித்த படமான 'அபியும் நானும்' வெளியிடுவதற்கு முன்பாக கடனை அடைத்துவிடுவதாக மகேந்திரகுமார் ஜெயினிடம் நடிகர் பிரகாஷ்ராஜ் உறுதி அளித்திருந்தார். ஆனால், உறுதிமொழியை காப்பாற்றாமல், கடன்தொகையை கொடுக்காமலேயே படத்தை வெளியிட்டுவிட்டார்.
முன்னாள் மனைவி உதவி:
இந்த நிலையில், தன்னிடம் வாங்கிய கடனை பிரகாஷ்ராஜ் திருப்பிக் கொடுக்காததால், அவரது 'பயணம்' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மகேந்திரகுமார் ஜெயின் சென்னை உயர்நீதிமன்ற்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில், பிரகாஷ்ராஜின் முன்னாள் மனைவியும் படத்தின் பங்குதாரருமான லலிதாகுமாரியும் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு, நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, படத்திற்கு பிரிண்டுகள் போட்டு எடுத்துச்செல்வதற்கு முன்பாக பிரிண்ட் போடும் ஆய்வகத்திடம் ரூ.50 லட்சத்தை பிணையத்தொகையாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அப்போது பிரகாஷ்ராஜ் சார்பில் ஆஜரான அவரது வக்கீல் ஏ.சிதம்பரம், பிரகாஷ்ராஜின் முன்னாள் மனைவி ரூ.50 லட்சம் மதிப்புள்ள சொத்தினை பிணையமாக வைக்க சம்மதம் தெரிவித்துள்ளார், என்று கூறினார்.
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பிணையாக காட்டப்படும் சொத்தினை உதவி பதிவாளர் மூலமாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும். அந்த சொத்து ரூ.50 லட்சத்திற்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் அந்த பாக்கித்தொகைக்கு வங்கிக்கணக்கில் பிணையத்தொகை காட்ட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
'பயணம்' படத்தை வெளியிட தடை ஏதும் இல்லை என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.


Click it and Unblock the Notifications











