விஷால் மீது லைகா நிறுவனம் போட்ட வழக்கு.. 15 கோடி ரூபாயை செலுத்த நீதிமன்றம் உத்தரவு
சென்னை: லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக15 கோடி ரூபாயை நிரந்தர வைப்பீடாக செலுத்த வேண்டுமென நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என ஏகப்பட்ட வழக்கு சிக்கலில் சிக்கியுள்ளார் நடிகர் விஷால்.
இதற்கு இடையே, படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடும் படமும் நடிகர் விஷாலுக்கு புதிய பிரச்சனை கொண்டு வந்திருக்கிறது.

படங்கள் ஓடுவதில்லை
நடிகர் விஷால் தொடர்ந்து பல படங்களில் நடித்து தள்ளி வருகிறார். ஆனால், கடைசியாக இரும்புத்திரை படம் ஓடியது தான் சரி. அதற்கு பிறகு எந்த படமும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு விஷாலுக்கு கைகொடுக்கவில்லையா? அல்லது அந்த படங்களுக்கு விஷாலின் நடிப்பு கைகொடுக்கவில்லையா என்பது பில்லியன் டாலர் கேள்வி தான்.

21 கோடி கடன்
நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து, 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். பின்னர், இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.

லைகாவிடம் தஞ்சம்
கடனை ஏற்று செலுத்துவது தொடர்பாக விஷாலும், லைகா நிறுவனமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தை மீறிய விஷால்
இந்நிலையில், தங்களுக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை வழங்காமல், வீரமே வாகை சூடும் என்ற படத்தை தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் வெளியிடவும், சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்க தடை விதிக்க வேண்டும் என லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

15 கோடி ரூபாய்
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கில் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், படம் ஏற்கனவே வெளியாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 15 கோடி ரூபாயை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மூன்று வாரங்களில் நிரந்தர வைப்பீடாக டிபாசிட் செய்ய வேண்டும் என விஷால் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, டிபாசிட் ரசீதை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் சமர்ப்பிக்க அறிவுறுத்தி, விசாரணையை மார்ச் 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











