ரஜினி, ரஞ்சித்துக்கு ஐகோர்ட் நோட்டீஸ்.. 'காலா' படத்துக்கு தடை கோரிய வழக்கில் உத்தரவு!
Recommended Video

சென்னை : பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், ரஜினிகாந்த், இயக்குநர் பா.ரஞ்சித், படத்தைத் தயாரித்த வுண்டர்பார் நிறுவனம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன் சென்னை ஐகோர்ட்டில் 'காலா' படத்திற்கு தடை விதிக்கக் கோரி மனு தாக்கல் செய்தார். 1996-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை தான் பதிவு செய்த 'கரிகாலன்' பட டைட்டிலை ஆண்டுதோறும் புதுப்பித்து வந்த தென்னிந்திய வர்த்தக சபை அதன்பிறகு அந்த டைட்டிலை புதுப்பிக்க மறுத்துவிட்டதாகத் தெரிவித்திருந்தார்.

தற்போது ரஜினி நடித்துள்ள படத்திற்கு 'கரிகாலன்' என்ற தனது தலைப்பைப் பயன்படுத்தி டைட்டில் உருவாக்கியுள்ளனர். எனவே, டைட்டிலை புதுப்பிப்பது தொடர்பான தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் விதிகளை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், 'காலா' படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, "கரிகாலன் என்ற 'காலா' தலைப்பு தன்னுடையது என்று மனுதரார் கூறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது" எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ராஜசேகரன் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் பார்த்திபன், ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதிகள் 'காலா' படத்தை வெளியிட தடைவிதிக்க முடியாது என்று தெரிவித்தனர்.
மேலும், இந்த மனு குறித்து நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ரஞ்சித், படத்தைத் தயாரித்த வுண்டர்பார் நிறுவனம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகியோர் வரும் ஜூன் மாதம் 14-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும்போது இதுபோன்ற டைட்டில் பிரச்னைகள் விஸ்வரூபம் எடுப்பது வழக்கம் தான். இந்த வழக்குகள் தாண்டி 'காலா' திட்டமிட்டபடி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











