ராகவா லாரன்ஸ் போட்ட விதை.. டிகிரி முடித்த இளைஞர்.. மாஸ்டருக்கு குவியும் பாராட்டு
சென்னை: தமிழ் சினிமாவில் நடன அமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் லாரன்ஸ். பிறகு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த அவர் கடைசியாக ஜிகர்தண்டா 2 படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதில் லாரன்ஸின் நடிப்பும் அட்டகாசமாகவே இருந்தது. இதற்கிடையே லாரன்ஸ் தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்துவருகிறார். அது பலரிடம் பாராட்டை பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
டான்ஸராக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கியவர் லாரன்ஸ். சூப்பர் சுப்பராயனிடம் பணியாற்றிக்கொண்டிருந்த லாரன்ஸின் நடன திறமையை பார்த்து ரஜினிகாந்த் அவரை நடன பள்ளியில் சேர்த்துவிட்டார். அதனையடுத்து பல பாடல்களில் க்ரூப் டான்ஸராக நடனத்தில் பின்னியெடுத்தார் லாரன்ஸ். சிரஞ்சீவி நடித்த ஹிட்லர் படத்தின் மூலம் நடன அமைப்பாளராகும் வாய்ப்பு லாரன்ஸுக்கு கிடைக்க அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார் அவர்.

நடிகர், இயக்குநர்: இதனையடுத்து பல படங்களில் நடன அமைப்பாளராக மாஸ் காட்டினார். அதுமட்டுமின்றி அமர்க்களம், திருமலை உள்ளிட்ட படங்களின் பாடல்களில் தோன்றி நடனம் ஆடிய லாரன்ஸ் அற்புதம் படம் மூலம் ஹீரோவாக களமிறங்கினார். தொடர்ந்து 2004ஆம் ஆண்டு மாஸ் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தமிழில் முனி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனையடுத்து காஞ்சனா சீரிஸை இயக்கிய அவருக்கு காஞ்சனாவும், காஞ்சனா 2வும் மெகா ஹிட்டை கொடுத்தது.
4 வருடங்களுக்கு பிறகு: லாரன்ஸ் கடைசியாக காஞ்சனா 3 படத்தை இயக்கி நடித்தார். அந்தப் படம் அவருக்கு பலத்த அடியை கொடுத்தது. தற்போது அவர் ருத்ரன் படத்தில் நடித்திருக்கிறார். அவருடன் ப்ரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆடுகளம், பொல்லாதவன் உள்ளிட்ட படங்களை தயாரித்த கதிரேசன் இயக்கியிருந்த அந்தப் படமானது சுமாரான வரவேற்பைப் பெற்றது. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா 2 படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
உதவி: லாரன்ஸ் நடிப்போடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்துவருகிறார். பல சிறுவர்களின் படிப்புக்கு ஃபீஸ் கட்டுவது, பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்துவருவது என பலரது பாராட்டை பெற்றிருக்கிறார். இந்தச் சூழலில் சிறுவயது முதல் தான் படிக்க வைத்து இப்போது டிகிரி முடித்திருக்கும் இளைஞரை அறிமுகப்படுத்தி வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
லாரன்ஸ் போட்ட விதை: அந்த வீடியோவில் பேசியிருக்கும் லாரன்ஸ்,"வார்த்தைகளைவிட செயல்தான் அதிகம் பேசும். புதுக்கோட்டையை சேர்ந்த சிவசக்தியின் கதை இது. அவனுகு 4 வயதாக இருந்தபோது அவனது தாய் உதவி கேட்டு எங்களிடம் வந்தார். தந்தை குடும்பத்தை விட்டுவிட்டு சென்றுவிட்டார். அதனையடுத்து சிவசக்தியையும், அவனது சகோதரியையும் கவனித்துக்கொள்ள வேண்டி அவனது தாய் சொன்னார். அவர்கள் 2 பேரும் எனது வீட்டில் வளர்ந்தவர்கள்.
எனது ஆதரவுடன் சிவசக்தி பிஎஸ்சி கணிதம் முடித்து தனியார் ஆலோசனை நிறுவனத்தில் பணிபுரிகிறார். எஸ்.ஐயாக வேண்டும் என்ற கனவை நோக்கி உழைக்கிறார். நான் போட்ட விதை மரமாகி நிற்கிறது. இப்படி 60 குழந்தைகள் வரை நாங்கள் வளர்த்திருக்கிறோம். சிவசக்தியும் தனது வெற்றியை மற்றவர்களுக்கு உதவ பயன்படுத்துவார். கல்விதான் உலகை மாற்றும் சக்தி. சேவையே கடவுள்" என்று குறிப்பிட்டு சிவசக்தியை அறிமுகப்படுத்தினார். மேலும் தன்னை போல் நீயும் உதவ வேண்டும் என சொல்லி ஒரு சிறுவனை சிவசக்தியிடம் ஒப்படைத்து, 'இவனுக்கு தாய், தந்தை இல்லை. இவனை நீ வளர்க்க வேண்டும். இவனுக்கான ஃபீஸ் அனைத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன். நீயும் நினைத்தால் இவனுக்கு செய்யலாம். உனது பார்வையில் இவனை வளர்க்க வேண்டும்" என்று கூறுகிறார். மேலும் இந்த வீடியோ குறித்து கலக்கப்போவது யாரு பாலாவும் நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











