Keerthy Suresh - கொஞ்சம் பொறுமை.. நானே சொல்றேன்.. திருமணம் குறித்து மௌனம் கலைத்த கீர்த்தி சுரேஷ்
சென்னை: Keerthy Suresh (கீர்த்தி சுரேஷ்) கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து சமீபத்தில் ஒரு தகவல் பரவிய சூழலில் அதுபற்றி அவர் விளக்கமளித்திருக்கிறார்.
தயாரிப்பாளரும், நடிகருமான ஜி.சுரேஷ்குமாருக்கும், நடிகை மேனகாவுக்கும் பிறந்தவர் கீர்த்தி சுரேஷ். திரைக்குடும்பத்தை சேர்ந்ததால் இவரும் திரைத்துறையில் நுழைந்தார். பைலட்ஸ், குபேரன் உள்ளிட்ட மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் கீர்த்தி. அதனையடுத்து மோகன்லால் நடித்த கீதாஞ்சலி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

சென்சேஷ்னல் ரஜினிமுருகன்:ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான படம் இது என்ன மாயம். விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படத்தில் நடித்ததன் மூலம் கீர்த்தி சுரேஷ் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். சிவகார்த்திகேயனுடன் கீர்த்தி சுரேஷ் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் மெகா ஹிட்டானது. அந்தப் படத்தில் இடம்பெற்ற உன் மேல ஒரு கண்ணு பாடலில் கீர்த்தி சுரேஷின் எக்ஸ்பிரெஷன்ஸை பார்த்த ரசிகர்கள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் அவருக்கு ரசிகர்களாக மாறினர். இதனால் தொடர்ந்து ரெமோ, பைரவா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.
தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ்: நடிப்பு என்பது சாதாரணமில்லை. அதிலும் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றில் நடிப்பது மிகப்பெரிய காரியம். அப்படி நடிக்கும்போது யாரை பற்றிய படமோ அவராகவே மாறி கூடு விட்டு கூடு பாய வேண்டும். மகாநடி படத்தில் கீர்த்தி சுரேஷ் அதனை அசால்ட்டாக செய்தார்.
நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவான அதில் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பார்த்து வாயடைத்து போயினர். சாவித்ரியாகவே மாறிவிட்டார் எனவும் பாராட்டு மழை பொழியப்பட்டது. அதுமட்டுமின்றி அந்தப் படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார் கீர்த்தி.
குறைத்துக்கொண்ட கீர்த்தி சுரேஷ்: அந்தப் படம் கீர்த்தி சுரேஷுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அதனை காப்பாற்றும் வகையில் அதற்கு அடுத்த கதை தேர்வில் கவனமாகவே இருந்துவருகிறார் கீர்த்தி. இடை இடையே கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் பென்குயின், மிஸ் இந்தியா என பெண்களை மையப்படுத்தி வந்த கதையிலும் நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் தசரா படத்தில் நடித்திருந்தார். படத்துக்கு கலவையான விமர்சனங்கள்தான் என்றாலும் கீர்த்தியின் நடிப்பு கவனத்தை ஈர்த்தது.

கிசுகிசுவில் கீர்த்தி சுரேஷ்: இந்தச் சூழலில் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் அடிக்கடி கிசுகிசுவில் சிக்கிவருகிறார். முதலில் இசையமைப்பாளர் அனிருத்தை கீர்த்தி சுரேஷ் காதலிப்பதாக தகவல் வேகமாக பரவியது. ஆனால் அது வெறும் வதந்தி என்பது உறுதியானது. அதனையடுத்து அவர் தனது நீண்ட கால நண்பரை காதலித்துவருவதாகவும் கூறப்பட்டது. மேலும் ஒருவருடன் கீர்த்தி சுரேஷ் இருக்கும் புகைப்படமும் சில நாள்களுக்கு முன்பு வெளியானது.

கீர்த்தியின் விளக்கம்: இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஹா ஹா இந்த புகைப்படத்தில் இருப்பவர் என்னுடைய நண்பர். அவர் தனது வருங்கால கணவர் இல்லை என்றும் என்னுடைய வாழ்க்கை துணை பற்றிய தகவலை நானே கூறுவேன், அதுவரை பொறுமையாக இருங்கள்" என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
மாமன்னனில் கீர்த்தி சுரேஷ்: கீர்த்தி சுரேஷ் தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்திருக்கிறார். இதில் வடிவேலு, ஃபஹத் பாசில், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நடித்திருக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்தப் படம் கீர்த்தி சுரேஷுக்கு முக்கியமான படமாக இருக்கும் என கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications











